ரூ.3.80 லட்சம் கோடியாக நேரடி வரி வசூல் உயர்வு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டில் இதுவரை நிகர நேரடி வரி வசூல் 11 சதவீதம் அதிகரித்து ரூ.3.80 லட்சம் கோடியை எட்டியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

2023-24 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஜூன் 17-ம் தேதி நிலவரப்படியான முன்கூட்டிய வரி வசூல் ரூ.1,16,776 கோடியை தொட்டுள்ளது. இது, முந்தைய நிதியாண்டை விட 13.70 சதவீதம் அதிகமாகும். இதே காலகட்டத்தில் நிகர நேரடி வரி வசூல் ரூ.3,79,760 கோடியாக இருந்தது. இதில், நிறுவனங்கள் செலுத்திய வரி (சிஐடி) ரூ.1,56,949 கோடியும், தனிநபர் வருமான வரி (பங்கு பரிவர்த்தனை வரி-எஸ்டிடி உட்பட) ரூ. 2,22,196 கோடியும் அடங்கும்.

ரீபண்டுக்கு முன்னதான மொத்த நேரடி வரி வசூல் ரூ.4.19 லட்சம் கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டை விட 12.73 சதவீதம் அதிகம். இதில், நிறுவன வரி ரூ.1.87 லட்சம் கோடியாகவும், தனிநபர் செலுத்திய வருமான வரி (எஸ்டிடி உட்பட) ரூ.2.31 லட்சம் கோடியாகவும் இருந்தன.

ஜூன் 17 நிலவரப்படி வரி செலுத்துவோருக்கு ரூ.39,578 கோடி ரீபண்டாக வழங்கப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் அதிகம் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in