

அடுத்த விமானம் எப்போது என தெரியாமல், பெங்களூரு விமான நிலையத்தின் இண்டிகோ கவுன்ட்டரில் லக்கேஜை வரிசையில் வைத்துவிட்டு காத்திருக்கும் பயணிகள். படம்: பிடிஐ
புதுடெல்லி: விமானிகள் பற்றாக்குறை காரணமாக இண்டிகோ நிறுவனத்தின் 1,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் தவித்து வருகின்றனர்.
நாட்டின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, தினமும் நாடு முழுவதும் 2,200 விமானங்களை இயக்கி வருகிறது. இந்த நிலையில், விமானிகளின் பணி நேர வரம்பு (எப்டிடிஎல்) குறித்து கடந்த மாதம் திருத்தப்பட்ட விதிமுறைகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி, விமானிகளுக்கு பணிநேரம், ஓய்வுநேரம் நிர்ணயிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், விமானிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இது மட்டுமின்றி, இண்டிகோ விமான இயக்கத்தில் தொழில்நுட்பக் கோளாறுகள், பயண அட்டவணை மாற்றங்கள், மோசமான வானிலை, விமானப் போக்குவரத்தில் அதிகரித்த நெரிசல் போன்றவற்றால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக இண்டிகோ தலைமை செயல் அதிகாரி பீட்டர் எல்பர்ஸ் கூறியிருந்தார்.
இதன் காரணமாக, டெல்லியில் 220, ஹைதராபாத்தில் 90, பெங்களூருவில் 100 உட்பட நாடு முழுவதும் நேற்று 4-வது நாளாக 1,000-க்கும் மேற்பட்ட இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள் தவித்து வருகின்றனர். சென்னை உள்ளிட்ட அனைத்து முக்கிய விமான நிலையங்களிலும் இண்டிகோ நிறுவன கவுன்ட்டர்கள் முன்பு ஏராளமான பயணிகள் குவிந்து, ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சோர்வடைந்த பயணிகள் விமான நிலையத்தில் ஆங்காங்கே தரையில் படுத்துக் கிடக்கின்றனர். இதனால் டெல்லி, மும்பை, சென்னை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட விமான நிலையங்களில் கூச்சல், குழப்பம் நிலவுகிறது. இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
அதேநேரம், ஏர் இந்தியா, ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களின் விமானங்கள் தொடர்ந்து இயங்கி வருவதால், அந்த விமானங்களில் டிக்கெட் கட்டணம் வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. அவசர வேலையாகச் செல்பவர்கள் அதிக கட்டணம் கொடுத்து வேறு நிறுவனங்களின் விமானத்தில் பயணம் மேற்கொள்ள டிக்கெட் வாங்கிச் செல்கின்றனர்.
டெல்லி - மும்பைக்கு ஞாயிற்றுக்கிழமை பயணிக்க எகானமி டிக்கெட் விலை ரூ.21 ஆயிரத்தில் இருந்து ரூ.39 ஆயிரம் வரை உள்ளது. பெங்களூரு - கொல்கத்தா டிக்கெட் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.23 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சென்னையில் இருந்து டெல்லிக்கு ரூ.21 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது.
சென்னையில் போராட்டம்: சென்னையில் இருந்து கோவை செல்ல வழக்கமாக ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே வசூலிக்கப்படும் நிலையில், தற்போது ஏர் இந்தியா விமானத்தில் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ரூ.60 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை - திருச்சி இடையே இன்று நேரடி விமானம் இல்லை என்று கூறி, மும்பை, பெங்களூரு வழியாக 36 மணி நேரம் பயணம் செய்து, திருச்சி செல்ல ரூ.40,800 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, சேலத்துக்கு நேற்று விமானம் இல்லை. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்ட ஏராளமான பயணிகள், சென்னை விமான நிலையத்தில் கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த பிரச்சினைகளுக்கு டிச.10-ம் தேதிக்குள் தீர்வு காணப்படும் என்று விமானப் போக்குவரத்து இயக்குநரகத்திடம் இண்டிகோ தெரிவித்துள்ளது. அந்த நிறு
வனத்தின் கோரிக்கையை ஏற்று, புதிதாக அமல்படுத்திய விமானிகள் பணி நேர விதிமுறைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு நேற்று தெரிவித்தார்.
‘‘பயணிகளின் பாதுகாப்பு,விமானப் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, விமானிகளுக்கான பணிநேர வரைமுறை விதிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதன்மூலம் 8-ம் தேதிக்குள் இண்டிகோ விமான சேவை இயல்புநிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றும் கூறினார்.