அரியலூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவி தூக்கிட்டுத் தற்கொலை

அரியலூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவி தூக்கிட்டுத் தற்கொலை
Updated on
1 min read

அரியலூர் அருகே ஊராட்சி மன்றத் தலைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் அடுத்த ரெட்டிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவியாக முனியங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் மனைவி ராஜேஸ்வரி (32) என்பவர் இருந்து வந்தார்.

இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே குடும்பப் பிரச்சினை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று (அக்.22) மதியம் 3 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாதபோது, வீட்டினுள் ராஜேஸ்வரி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வெளியில் சென்றிருந்த கணேசன் வீட்டுக்கு வந்தபோது, மனைவி தூக்கில் தொங்கியது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில், விக்கிரமங்கலம் போலீஸார் ராஜேஸ்வரியின் உடலைக் கைப்பற்றி, அரியலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட ஊராட்சித் தலைவி ராஜேஸ்வரிக்கு 2 மகன்கள், 1 மகள் உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in