

புதுச்சேரியில் புதிதாக 64 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று (அக். 7) வெளியிட்ட தகவலில், “புதுச்சேரி மாநிலத்தில் 5,246 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-35, காரைக்கால்- 23, மாஹே- 6 பேர் என மொத்தம் 64 பேருக்கு (1.22 சதவீதம்) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாருக்கும் தொற்று இல்லை.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 26 ஆயிரத்து 806 ஆக அதிகரித்துள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் 102 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 553 பேரும் என 655 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,844 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 சதவீதமாகவும் உள்ளது. புதிதாக 48 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனால் வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 307 (98.03 சதவீதம்) ஆக உள்ளது. மாநிலத்தில் இதுவரை 10 லட்சத்து 36 ஆயிரத்து 889 பேருக்கு (இரண்டு டோஸ் உட்பட) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.