

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடிப்பூர விழா கொடியேற்றம் இன்று (ஆக.1-ம் தேதி) காலை நடைபெற்றது.
அண்ணாமலையார் கோயிலில் நடைபெறும் விழாக்களில் பிரசித்தி பெற்றது ஆடிப்பர விழா. இவ்விழாவுக்கான கொடியேற்றம் இன்று (1-ம் தேதி) காலை நடைபெற்றது. மங்கள இசை ஒலிக்க, வேத மந்திரம் முழங்க, மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் கொடியேற்றினர். அப்போது அங்கிருந்த கோயில் ஊழியர்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என முழக்கமிட்டனர்.
இதையடுத்து, கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் பராசக்தி அம்மன் உற்சவம் நடைபெற்றது. அப்போது சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி அருள் பாலித்தார். 10 நாட்களுக்கு பராசக்தி அம்மன் உற்சவம் நடைபெற உள்ளது. விழாவின் நிறைவாக, கோயில் வளாகத்தில் உள்ள சிவகங்கை குளத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.
கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதால், கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய 3 நாட்களுக்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் இல்லாமல் ஆடிப்பூர விழா கொடியேற்றம் நடைபெற்றது. மேலும், விழாவின் நிறைவாக வழக்கமாக நடைபெறும் தீமிதி விழாவும், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, இந்த ஆண்டு நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.