அசாமில் மரணமடைந்த ராணுவ வீரர் உடல் மதுரையில் 21 குண்டுகள் முழங்க தகனம்

அசாமில் மரணமடைந்த ராணுவ வீரர் உடல் மதுரையில் 21 குண்டுகள் முழங்க தகனம்

Published on

அசாமில் மரணமடைந்த ராணுவ வீரர் உடல் மதுரையில் 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் துரைப்பாண்டி என்பவரின் மகன் கதிர்வேல் (36).

ராணுவவீரரான இவருக்கு திருமணமாகி சண்முகப்பிரியா ( 25) என்ற மனைவியும் .ஹனிஸ்க் (7), பார்த்திவ் ( 3) ஆகிய 2 மகன்கள் உள்ளனர் .

கதிர்வேல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு அசாமில் பணியில் இருந்தபோது, ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மரணமடைந்தார். ராணுவ அதிகாரிகள் அவரது உடலை மீட்டு அசாம் ராணுவ தலைமையகத்துக்கு கொண்டு வந்தனர்.

பின், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வழியாக மதுரைக்கு நேற்று இரவு கொண்டு வரப்பட்டது. விமான நிலையில் அவரது உடலுக்கு ஆட்சியர் அனீஷ்சேகர், காவல் துணை ஆணையர் தங்கதுரை, காவல் கண்காணிப்பாளர் வீ. பாஸ்கரன் உள்ளிட்ட அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து அவரது உடல் வில்லாபுரத்திலுள்ள அவரது வீட்டில் குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு திருச்சி பிராந்திய ராணுவ மையத்தில் இருந்து கேப்டன் குல்தீப் ராணா தலைமையில் 22 ராணுவ வீரர்கள் இறுதி அஞ்சலி செலுத்திய நிலையில் மதுரை கீரைத்துறை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது .

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in