ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரியவரை கரோனா நிவாரண நிதி அளிக்க உத்தரவிட்ட நீதிபதி

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரியவரை கரோனா நிவாரண நிதி அளிக்க உத்தரவிட்ட நீதிபதி
Updated on
1 min read

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் முன்ஜாமீன் கோரியவர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு கரோனா நிவாரண நிதி அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் 1,820 கிலோ ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் ஒருவர் மீது கோவை சிஎஸ்சிஐடி (சிவில் சப்ளை குற்ற விசாரணைப் பிரிவு) போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். போலீஸார் தன்னைக் கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கோரி, அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதி, கரோனா நிவாரண நிதியாகக் கோவை சிங்காநல்லூரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனைக்கு ரூ.10 ஆயிரம் அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட போலீஸார் முன்பு இரண்டு வாரங்களுக்கு தினமும் காலை 10.30 மணிக்கு நேரில் ஆஜராக வேண்டும். அதன்பிறகு, தேவைப்படும்போது விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் முன்ஜாமீன் வழங்கி கடந்த 17-ம் தேதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, நிபந்தனையாக விதிக்கப்பட்ட தொகையை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், இஎஸ்ஐ மருத்துவமனையின் டீன் ரவீந்திரனிடம் இன்று அளித்தார்.

இதேபோல, இதற்கு முன்பு மூன்று வெவ்வேறு வழக்குகளில் ஜாமீன் கோரியவர்களுக்கு ஜாமீன் வழங்க நிபந்தனையாக இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மொத்தம் ரூ.45 ஆயிரம் வழங்க நீதிபதி எம்.தண்டபாணி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in