

கியூபாவில் உணவு, மருந்துக்கான தட்டுப்பாடு தேசிய அளவில் நிலவியதைத் தொடர்ந்து தற்போது அங்கு தற்காலிகமாக சுங்கவரி நீக்கப்பட்டது.
பொருளாதாரச் சரிவு, உணவுப் பற்றாக்குறை, கரோனா நெருக்கடியைத் தவறாகக் கையாண்டதன் காரணமாக கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக கியூபாவில் ஞாயிற்றுக்கிழமை திரளாக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உணவு, மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக அவர்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தில் பங்கேற்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.
கியூபாவில் நடந்த போராட்டத்தைத் தொடர்ந்து மக்களுக்கு ஆதரவாக சர்வதேச அளவில் குரல்கள் எழுந்தன. அமெரிக்காவும், நாங்கள் கியூபாவின் மக்கள் பக்கம் நிற்பதாகத் தெரிவித்தது.
ஐ.நா.சபையும் பொதுமக்கள் குரல்களுக்கு மதிப்பளியுங்கள் என்று தெரிவித்தது. இந்த நிலையில் போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் சுற்றுலாப் பயணிகள் கொண்டுவரும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களுக்கான சுங்க வரியை கியூபா அரசு தற்காலிகமாக நீக்கியுள்ளது.
கியூபா அரசின் இந்த நடவடிக்கைகளுக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.