கோவையில் தடுப்பூசிக்கு பயந்து ஓடி ஒளிந்த கிராம மக்கள்

கோவை சிறுவாணி செல்லும் வழியில் உள்ள சர்க்கார் போரத்தில் பழங்குடியின கிராமத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பயந்து மரத்தில் ஏறிப் பதுங்கிய இளைஞர்கள்.
கோவை சிறுவாணி செல்லும் வழியில் உள்ள சர்க்கார் போரத்தில் பழங்குடியின கிராமத்தில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பயந்து மரத்தில் ஏறிப் பதுங்கிய இளைஞர்கள்.
Updated on
1 min read

கோவையில் உள்ள பழங்குடி கிராமங்களில் தடுப்பூசி செலுத்த வந்த சுகாதாரத்துறை அதிகாரிகளைக் கண்டு தப்பி ஓடிய கிராம மக்கள், ஒளிந்து கொண்டனர்.

கோவையில் கரோனா பரவல் படிப்படியாகக் குறைந்துவரும் நிலையில், தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாநகர் மற்றும் ஊரகப் பகுதியில் தினமும் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளைச் சுகாதாரத் துறையினர் செலுத்தி வருகின்றனர். சில இடங்களில் தடுப்பூசிக்காகப் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபடும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், கோவை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மலை கிராமங்களில் பழங்குடி மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தயக்கம் காட்டுவதால் அந்த கிராமங்களுக்கே நேரடியாகச் சென்று தடுப்பூசி செலுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் திட்டமிட்டனர்.

அதன்படி, தொண்டாமுத்தூரை அடுத்த முள்ளாங்காடு, கல்கொத்திபதி, சர்க்கார் போரத்தி, வெள்ளைபதி, சீங்கப்பதி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு 500 தடுப்பூசிகளுடன் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர் நேற்று (ஜூலை 2) சென்றனர். தடுப்பூசி மீதுள்ள பயம் காரணமாக மருத்துவக் குழுவினரைக் கண்டதும், கிராம மக்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

சிலர் தோட்டப் பகுதிகளுக்குச் சென்று ஒளிந்து கொண்டனர். இளைஞர்கள் சிலர் தடுப்பூசிக்கு பயந்து மரத்தில் ஏறிக்கொண்டு இறங்க மறுத்தனர். முதியவர்கள் தங்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட வேறு சில நோய்கள் உள்ளதாகக் கூறி தடுப்பூசி வேண்டாமென சுகாதாரத் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்த பின்னர், சிலருக்கு மட்டும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in