

விழுப்புரம் மாவட்டத்தில் 120 அரசு டாஸ்மாக் கடைகளும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 102 டாஸ்மாக் கடைகளும் என ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 222 டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.
கடந்த மே 9-ம் தேதி முதல் முழு ஊரடங்கை அரசு அறிவித்தது. இதையடுத்து டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன. இதையடுத்து 35 நாட்களுக்குப் பிறகு இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு, காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை இயங்கும் என அரசு அறிவித்தது. இதையடுத்து இன்று டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிக அளவில் கூடும் என்பதால் கடைகள் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
எனினும் விழுப்புரம் ஜானகிபுரம் கடை, கூட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் காணப்பட்டது. மேலும் பெரும்பாலான கடைகளில் மது இருப்பும் இல்லை எனத் தெரியவருகிறது. நேற்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் இன்றுதான் கடைகளுக்கு மது வகைகள் சப்ளை செய்யப்பட்டு வருகின்றன. இதனால் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் எதிர்பார்த்த அளவுக்குக் கூட்டம் இல்லாமல் காணப்பட்டன.
இதுகுறித்து டாஸ்மாக் பணியாளர்களிடம் கேட்டபோது, ''கடந்த 8-ம் தேதி புதுச்சேரியில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. விழுப்புரம் நகரில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் புதுச்சேரி மாநில எல்லை தொடங்குகிறது. எல்லையிலேயே மதுபானக் கடைகளும் உள்ளன. மேலும் தமிழகத்தைவிடப் புதுச்சேரியில் மதுபான விலை தற்போது குறைவாக உள்ளது. இதனாலும் இன்று கடைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இரண்டொரு நாளில் கடைகள் வழக்கம்போல இயங்கும்'' என்று தெரிவித்தனர்.