மதுரையில் சாலையோரங்களில் பசியோடு வாடும் ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் காவல்துறை

மதுரையில் சாலையோரங்களில் பசியோடு வாடும் ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் காவல்துறை
Updated on
1 min read

மதுரையில் சாலையோரங்களில் பசியோடு வாடும் ஆதரவற்றவர்களுக்கு தினமும் மதிய உணவளிக்கும் திட்டத்தை பட்டாலியன் போலீஸார் இன்று தொடங்கினர்.

தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்த தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

மதுரை நகரில் இந்த ஊரடங்கால் சாலையோரங்களில் வசிக்கும் ஆதரவற்றவர்கள் உணவின்றி தவிக்கும், சூழலைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு இலவசமாக உணவளிக்க மதுரை பட்டாலியன் போலீஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவின்பேரில், தமிழ்நாடு சிறப்புக்காவல் படை கூடுதல் டிஜிபி ஜெயந்த்முரளி, ஐஜிக்கள் லோகநாதன், தமிழ்ச்சந்திரன் ஆலோசனையின்படி, மதுரை 6 வது பட்டாலியன் கமாண்டன்ட் இளங்கோவன் இதற்கான ஏற்பாட்டினை செய்தார்.

மதுரை கோரிப்பாளையம், பனகல் ரோடு, அண்ணா பேருந்து நிலையம் பகுதியில் சுமார் 500 பேருக்கு இன்று மதிய உணவளிக்கப்பட்டது. பட்டாலியன் ஏடிஎஸ்பி முருகேசன் உணவுப் பொட்டலங்களை வாகனத்தில் ஏற்றிச் சென்று நேரில் வழங்கினார். இதில் பட்டாலியன் காவல்துறையினரும் பங்கேற்றனர்.

மேலும் ஏடிஎஸ்பி கூறுகையில், ‘‘ முழு ஊரடங்கு நீடிக்கும் வரை, மதுரை நகரில் சாலையோர ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்க திட்டமிட்டுள்ளோம்.

ஒவ்வொரு நாளும் எங்களுக்குள் நன்கொடை பணம் வசூலித்து, நாங்களே உணவு சமைத்து, பொட்டலங்களாக தயாரித்து, வாகனங்களில் ஏற்றிச் சென்று விநியோக்க உள்ளோம்.

தினமும் வெவ்வெறு இடங்களில் சென்று சாலையோரங்களில் பசியோடு இருப்பவர்களுக்கு உணவளிக்கப்படும்,’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in