

கோவிட் தொற்றால் சென்னை போலீஸார் தொடர்ந்து பாதிக்கப்படுவதால் போலீஸாருக்கென தனி கோவிட் சிகிச்சை மையம் சென்னையில் திறக்கப்பட்டது.
சென்னை, கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழக புதிய ஏசி டெக் நியூ பிளாக் விடுதி வளாகத்தில் கரோனா தொற்றால் பாதிப்படைந்த காவல்துறையினர் மற்றும் காவல்துறையினருடைய குடும்பத்தினருக்கு சிகிச்சை அளிக்கும் மையம் கோவிட்-19 கேர் சென்டர் PHASE- II மையத்தை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் இன்று திறந்து வைத்தார்.
அந்த மையத்தில் நோய்த்தொற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 39 காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வாட்ஸ் அப் வீடியோ காலில் நலம் விசாரித்தார். அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் பெருநகர சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிவோருக்கு சென்னை பெருநகரக் காவல் துறையின் சார்பாக நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.
இந்தக் காவலர் சிகிச்சை மையத்தில் 360 படுக்கை வசதிகளுடன் 24 மணி நேர மருத்துவர்கள் பராமரிப்புடன் ஆம்புலன்ஸ் வசதி, இலவச தரமான உணவு, மருந்துகள் வழங்கப்படுகின்றன.