முதல் முறையாகத் தேர்தல் களத்தில் சுந்தர்.சி: குஷ்புவுக்கு வாக்குகள் சேகரித்தார்

முதல் முறையாகத் தேர்தல் களத்தில் சுந்தர்.சி: குஷ்புவுக்கு வாக்குகள் சேகரித்தார்
Updated on
1 min read

முதல் முறையாகத் தேர்தல் களத்தில் சுந்தர்.சியைக் காண முடிந்தது. மனைவி குஷ்புவுக்காக வாக்குகள் சேகரித்தார்.

தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநராக வலம் வருபவர் சுந்தர்.சி. தற்போது ஆர்யா, ஆண்ட்ரியா, ராஷி கண்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'அரண்மனை 3' படத்தை இயக்கியுள்ளார். இதன் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

எப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்தாலும், அரசியல் குறித்த கேள்விகளைத் தவிர்த்துவிடுவார் சுந்தர்.சி. குஷ்புவின் அரசியல் வருகை, குஷ்புவை மையப்படுத்தி அரசியல் கேள்விகள் என என்ன கேட்டாலும், "அதை நீங்கள் அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள். அவருடைய அரசியல் களத்துக்குள் நான் தலையிடுவதில்லை" என்று கூறிவிடுவார் சுந்தர்.சி.

தற்போது முதல் முறையாகச் சட்டப்பேரவைத் தேர்தலில் களம் காண்கிறார் குஷ்பு. ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். மனைவி முதல் முறையாக வேட்பாளராகி இருப்பதால், அவருக்காக வாக்குகள் சேகரித்தார் சுந்தர்.சி. இது திரையுலகினர் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுந்தர்.சியுடன் நடிகர் விச்சு உள்ளிட்ட சிலரும் ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவுக்கு வாக்கு சேகரித்துள்ளனர். அங்குள்ள மக்கள் இயக்குநர் சுந்தர்.சி என்றவுடன் அவருடன் புகைப்படத்துடன் எடுத்துக் கொண்டனர். சுந்தர்.சி வாக்கு சேகரிக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in