

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில், வாக்குப்பதிவு நேரம் தெரியாத அதிகாரிகளை ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி கண்டித்தார்.
மானாமதுரை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் இன்று நடந்தது.
தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி தலைமை வகித்தார். இதில் வாக்குச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டால் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.
உதவி தேர்தல் நடத்தும் மாணிக்கவாசகம் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். இதில் 951 பேர் பங்கேற்றனர். இப்பயிற்சி முகமை மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன்ரெட்டி பார்வையிட்டார்.
அப்போது அங்கிருந்த அலுவலர்களிடம் வாக்குப்பதிவு நேரம் குறித்து கேட்டார். அலுவலர்கள் பலரும் காலை 7 முதல் மாலை 6 மணி வரை என்று தெரிவித்தனர்.
அதிர்ச்சி அடைந்த ஆட்சியர் கரோனா காரணமாக இந்த தேர்தலில் வாக்குப்பதிவு நேரம் காலை 7 முதல் இரவு 7 மணி வரை என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனால் தேர்தல் நடைமுறைகளை முறையாக தெரிந்து கொள்ளுங்கள், அலட்சியமாக இருக்காதீர்கள் என கண்டிப்புடன் தெரிவித்தார்.