

புதுச்சேரியில் புதிதாக 14 பேருக்குக் கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று(பிப்.19) வெளியிட்டுள்ள தகவல்:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் 1,837 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி- 11, காரைக்கால்- 1 மாஹே- 2 என மொத்தம் 14 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை. மேலும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 662 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.67 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 39 ஆயிரத்து 540 ஆக உயர்ந்துள்ளது. இதில் மருத்துவமனைகளில் 100 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 77 பேரும் என 177 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 34 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 701 (97.88%) ஆக உள்ளது.
இதுவரை 6 லட்சத்து 15 ஆயிரத்து 362 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 5 லட்சத்து 71 ஆயிரத்து 377 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. மேலும், 7,274 சுகாதாரப் பணியாளர்கள், 387 முன்களப் பணியாளர்கள் என 7,661 பேருக்குக் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.’’
இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.