

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் சாலையை சீரமைக்காததை கண்டித்து பொதுமக்கள் சமையல் செய்து போராட்டம் நடத்தினர்.
காரைக்குடியில் கீழஊரணி, செஞ்சை, பள்ளிவாசல், தேவகோட்டை ரஸ்தா, கணேசபுரம், சத்யா நகர் போன்ற பகுதிகளில் பாதாளச் சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் மூடப்படாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள், வியாபாரிகள் சிரமப்படுகின்றனர்.
சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதை கண்டித்து அப்பகுதி மக்கள், சமூக ஆர்வலர்களுடன் இணைந்து, இன்று காரைக்குடி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை தடுத்ததால் போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு,முள்ளு ஏற்பட்டது.
தொடர்ந்து போலீஸாரின் சமாதானத்தை ஏற்காமல் நகராட்சி அலுவலக வளாகத்தில் அடுப்பு வைத்து சமையல் செய்து போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.