

உக்ரைனில் 2022-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பாதி மக்கள் தொகைக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உக்ரைன் அரசுத் தரப்பில், “ 2022 ஆம் ஆண்டுக்குள் உக்ரைனில் 40 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுவிடும். கடந்த வாரத்தில் மட்டும் 20 மில்லியன் கரோனா தடுப்பு மருந்துகள் சேகரிக்கப்பட்டுள்ளன” என்றார்.
உக்ரைனில் இதுவரை 10 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 20 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
உக்ரைனில் கடந்த சில நாட்களாக கரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உக்ரைன் சில நாட்களுக்கு முன்னர் ரஷ்ய கரோனா தடுப்பு மருந்துக்கு தடை விதித்தது.
கரோனா லாக்டவுனால் பல நாடுகள் பொருளாதாரச் சீரழிவையும், பாதிப்பையும் தாங்க முடியாமல் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இயல்பு வாழ்க்கையை அனுமதித்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தெற்கு இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகாணத்தில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது.
இந்த உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ், ஏற்கெனவே இருந்த கரோனா வைரஸ் பரவும் வேகத்தைவிட 70 சதவீதம் வேகமாகப் பரவும் தன்மை கொண்டது என அறியப்பட்டது.
இதையடுத்து, பிரிட்டன் உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
கரோனா பரவல் ஒருபுறம் இருக்க, பல நாடுகளில் கரோனா தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.