கிருஷ்ணகிரி அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்னால் ஆம்னி கார் மோதி விபத்து: 6 பேர் பலி; 3 பேர் படுகாயம் 

கிருஷ்ணகிரி அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்னால் ஆம்னி கார் மோதி விபத்து: 6 பேர் பலி; 3 பேர் படுகாயம் 
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அருகே நின்று கொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்னால் ஆம்னி கார் மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த 8 பேர் பெங்களூரிலுள்ள ஒன்டர்லா சுற்றுலாத் தளத்திற்கு ஆம்னி கார் மூலம் சென்று கொண்டிருந்தனர். இவர்கள் வாகனம் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அருகே வந்துகொண்டிருந்தபோது, தேசிய நெடுஞ்சாலை ஓரம் நின்ற அரசுப் பேருந்தில் இருந்து இறங்கிய தேவராஜ் என்பவர் சாலையைக் கடக்க முயன்றபோது அவர் மீது மோதியது. மேலும், ஆம்னி கார் கட்டுப்பாட்டை இழந்து நின்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் பின்னால் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்குள்ளானதில் முழுவதும் நொறுங்கிய கார்
விபத்துக்குள்ளானதில் முழுவதும் நொறுங்கிய கார்

இந்த விபத்தில் சாலையைக் கடந்த தேவராஜ், ஆம்னி காரில் வந்த பிரசாந்த், லிங்கா, சுரேந்தர், சிவகுமார், ஆம்னி கார் ஓட்டுநர் பூபதி ஆகிய ஆறு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

மேலும் இந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த கௌதம், பரணி, அசோக் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவேரிப்பட்டினம் போலீஸார் உடனடியாக காயமடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த 6 பேரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை நடந்த இந்தக் கோர விபத்தில் 6 பேர் பலியான சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in