

புதுச்சேரியில் இன்று புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று(ஜன 29) தெரிவித்திருப்பதாவது:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் 2,961 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-16, காரைக்கால்-3, மாஹே-12 என மொத்தம் 31 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை. உயிரிழப்பும் ஏற்படவில்லை.
இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 647 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 ஆகவும் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை தற்போதுவரை 39 ஆயிரத்து 4 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் மருத்துவமனைகளில் 108 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 187 பேரும் என மொத்தம் 295 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்று 27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 62 (97.58 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 5 லட்சத்து 70 ஆயிரத்து 695 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 5 லட்சத்து 27 ஆயிரத்து 286 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது''.
இவ்வாறு சுகாதாரத் துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.