Published : 13 Feb 2022 09:45 AM
Last Updated : 13 Feb 2022 09:45 AM

‘நலமான இந்தியாவை உருவாக்குவோம்’ எனும் முயற்சியில் டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ இணைய வழி சுகாதார விழிப்புணர்வுத் தொடர் நிகழ்வு வரும் பிப். 15-ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது

சென்னை.

டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா வழங்கும் ‘சுத்தம் சுகாதாரம்’ இணைய வழி சுகாதார விழிப்புணர்வுத் தொடர் வரும் பிப்ரவரி 15-ம் தேதி முதல் ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தில் ஒளிபரப்பாகவுள்ளது. 2015-ஆம் ஆண்டில் பள்ளி மாணவர்கள் மத்தியில் சிறந்த சுகாதாரப் பழக்க வழக்கங்கள் மற்றும் அன்றாட நடைமுறைகளில் மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில் டெட்டால் பநேகா ஸ்வஸ்த் இந்தியா, இந்த சுகாதார திட்டத்தைத் தொடங்கியது. இந்தியாவிலுள்ள 8 மாநிலங்களில் சுகாதாரக் கல்வி மூலம் புதிய சுகாதாரக் கலாச்சாரத்தை உருவாக்கும் வகையில் இந்த தனித்துவமான பரிசோதனையானது பள்ளிகளில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு, தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட அளவிலான சமூக ஊடகக் குழுக்களை உருவாக்குவதன் மூலம் ஆன்லைன் வழியே இத்திட்டம் பள்ளி மாணவ-மாணவிகளையும், அவர்களது பெற்றோர்களையும் சென்றடையும் வகையிலான ஒரு புதிய முறையை பின்பற்றியுள்ளது. சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய அறிவையும் நடைமுறையையும் அணுகுவதை தீவிரப்படுத்தவும், நிலைநிறுத்தும் முயற்சியாகவும் இந்த சுகாதார திட்டத்தை ‘இந்து தமிழ் திசை’ நாளிதழும் உடன் இணைந்து முன்னெடுக்கிறது. இந்த கூட்டமைப்பின்கீழ் கலெக்ட்டிவ் குட் பவுண்டேஷன், அவ்வை வில்லேஜ் வெல்ஃபர் சொஸைட்டி ஆகியவை இணைந்து நடத்துகின்றன.

5 வாரங்கள் – 5 தலைப்புகள் - 15 பகுதிகள்

இந்த ‘சுத்தம் சுகாதாரம்’ எனும் இணைய வழி தொடர் சுகாதார விழிப்புணர்வு நிகழ்வில் ‘ஆரோக்கியமாக வாழ…’ எனும் நோக்கில் ‘வளமான வாழ்வுக்கு வழிகாட்டி’ எனும் தலைப்பிலான சுகாதார நடவடிக்கைகள் பற்றிய வீடியோக்கள் ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தில் தொடர்ந்து ஒளிபரப்பாகவுள்ளன. மேலும், கொரோனா போன்ற பெருந்தொற்று பரவல் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார பாதுகாப்பு முறைகள் குறித்தும், நாம் சுத்தமாக இருப்பதோடு, நமது சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பதனால் நோயின்றி வாழ்வதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன.

இந்த சுகாதார நிகழ்வில், நோயுற்ற சமயங்களில் நாம் பின்பற்ற வேண்டிய சுகாதார செயல்பாடுகள், பள்ளிகளில் சுகாதாரம், தனிநபர் சுத்தம், வீடுகளில் சுகாதாரம், சுற்றுப்புற சுகாதாரம் ஆகிய 5 தலைப்புகளின் கீழ் சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்தும், வாழ்வில் இவற்றை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை உணரும் வகையிலும் 5 வாரங்களுக்கு 15 பகுதிகள் கொண்ட நிகழ்வாக இது ஒளிபரப்பாகவுள்ளது.

மருத்துவர்களின் கேள்வி - பதில்

இந்த சுகாதார நிகழ்வில் புகழ்பெற்ற குழந்தை நலன் மருத்துவர் ராதாலெட்சுமி செந்தில் பங்கேற்று, பல்வேறு சுகாதார விழிப்புணர்வு கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவுள்ளார். பொது சுகாதாரம் மற்றும் கொரோனா போன்ற நோய்த்தொற்று பரவும் காலங்களில் எழும் மருத்துவ ரீதியான பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளிக்க இருக்கிறார். இதனால் சுகாதாரம் குறித்த நமது சந்தேகங்கள் பலவற்றிற்கும் விளக்கங்களும் தீர்வும் கிடைக்கும்.

சுகாதார வீடியோக்கள்

பள்ளி மாணவ-மாணவிகள் மட்டுமல்லாது, இந்த சுகாதார ஒளிபரப்பை பார்க்கும் அனைவரின் மனதிலும் பதியும் வண்ணமாக எளிய முறையிலான சுகாதார செயல்பாடுகளை விளக்கும் வீடியோக்களோடு இந்த தொடர் நிகழ்வு ஒளிபரப்பாகவுள்ளது. ஒவ்வொரு நிகழ்விலும் 2 முதல் 4 வரையிலான வீடியோக்கள் ஒளிபரப்பாகும்.

தமிழகம் – புதுச்சேரி அரசுகள் ஆதரவு

கொரோனா பெருந்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகள் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு சுகாதார நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருகிறது. அரசின் இந்த விழிப்புணர்வு செயல்களுக்கு துணை நிற்கும் வண்ணமாக ஒளிபரப்பாகவுள்ள ‘சுத்தம் சுகாதாரம்’ இணைய வழி விழிப்புணர்வு தொடர் சுகாதார நிகழ்வுக்கு தமிழக – புதுச்சேரி மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இரு மாநிலங்களின் சுகாதாரத் துறை மற்றும் கல்வித்துறை இந்த நிகழ்விற்கு ஆதரவைத் தந்துள்ளன.

இந்த சுகாதார விழிப்புணர்வு தொடர் நிகழ்வினை புதுச்சேரியில் நடைபெற்ற விழாவில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், புதுச்சேரி மாநில முதல்வர் என்.ரங்கசாமி இருவரும் தொடங்கி வைத்தனர்.

சென்னை மேற்கு சைதாப்பேட்டை பெண்கள் மேனிலைப் பள்ளியில் நடைபெற விழாவில் தமிழக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.

பள்ளிக் குழந்தைகள் எவ்வாறு பயனடையலாம்?

இந்த ‘சுத்தம் சுகாதாரம்’ ஆன்லைன் நிகழ்ச்சி ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தில் ஒளிபரப்பாகும். இந்த நிகழ்வை ஆசிரியர்கள் வழிகாட்டுதலுடன் மாணவ-மாணவிகள் பார்ப்பதோடு, இந்த நிகழ்வில் சொல்லப்படும் சுகாதார செயல்பாடுகளை அன்றாட வாழ்விலும் பயன்படுத்தி, நோயற்ற ஆரோக்கியமான வாழ்வினைப் பெறலாம். இந்த சுகாதார செயல்பாடுகள் உங்களது அன்றாட வாழ்வில் எவ்விதம் பயனளிக்கிறது என்பதையும், அதன் மூலமாக நீங்கள் பெற்ற சுகாதார நலன் குறித்த உங்களது அனுபவங்களையும் எங்களுக்கு எழுதி அனுப்பலாம்.

பதிலளிக்கும் பள்ளிகளுக்கு பரிசுகள்

இந்த சுகாதார நிகழ்வில் ஒளிபரப்பாகும் வீடியோக்களில் இடம்பெறும் சுகாதாரம் தொடர்பான கருத்துக்களை முன்வைத்து ஒவ்வொரு பகுதியின் முடிவிலும் ஒரு கேள்வி கேட்கப்படும். எந்த பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் சரியான பதிலைத் தருவதோடு, அதிக அளவில் பங்கேற்கிறார்களோ அந்த பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழோடு, சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படவுள்ளன. மேலும், இந்த நிகழ்வில் பங்கேற்கும் மருத்துவரிடம் உங்களது ஏற்படும் சந்தேகங்களை கேள்விகளாக மின்னஞ்சல் வழி அனுப்பி வைக்கலாம். உங்கள் கேள்விகளுக்கு அடுத்தடுத்த வாரங்களில் பதில்கள் கிடைக்கும்.

‘இந்து தமிழ் திசை’யில் லிங்க்

வரும் பிப்ரவரி 15-ம் தேதி முதல் ‘இந்து தமிழ் திசை’ ஈவன்ட்ஸ் யூ-டியூப் பக்கத்தில் https://www.htamil.org/00220 என்ற லிங்கில் ஒளிபரப்பாகவுள்ள இந்த ‘சுத்தம் சுகாதாரம்’ ஆன்லைன் தொடர் நிகழ்வினை அனைவரும் பார்க்கலாம். ‘இந்து தமிழ் திசை’ நாளிதழில் நிகழ்வு ஒளிபரப்பாகும் நாளன்று இந்த இணைய வழி நிகழ்வுக்கான இணைப்பும் (லிங்க்), ஒவ்வொரு பகுதியிலும் கேட்கப்படும் கேள்வியும் தொடர்ந்து வெளியாகும். அந்த லிங்கின் வழியே நிகழ்ச்சியில் பங்கேற்று, மருத்துவர் கூறும் சுகாதார ஆலோசனைகளையும், சுகாதார வீடியோக்களையும் பார்த்து வாழ்வில் பயன்பெறுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x