Published : 23 Nov 2023 06:15 AM
Last Updated : 23 Nov 2023 06:15 AM

நிலம் வாங்க குறைந்த வட்டியில் கடன்: தாட்கோ மேலாண் இயக்குநர் கந்தசாமி அறிவிப்பு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் குறைந்த வட்டியில் கடன்பெற்று நிலம் வாங்க இணைய வழியாக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தாட்கோ மேலாண் இயக்குநர் க.சு.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலம் விவசாய தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு விவசாய நிலம் வாங்கமானியத்துடன் கிரையத் தொகை யானது, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுகிறது.

நிலமற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் சமூக பொருளாதார நிலையில் மேம்பாடு அடையும் வகையில்,அவர்கள் விவசாய நிலம் வாங்க நிலத்தின் சந்தை மதிப்பின்படி, திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை மானியம் விடுவிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வாங்கப்படும் நிலங்களுக்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக்கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. தற்போது பயனாளிகள் பங்குத்தொகை இல்லாமல் மானியத்தொகை போக மீதமுள்ள கிரையத் தொகை தேசிய பட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டுக்கழக நிதியில் இருந்து பயனாளிகளுக்கு 6 சதவீதம் மிகக் குறைந்த வட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மூலம் கடனாக பெற்று நிலம் வாங்கவிண்ணப்பங்கள் வரவேற்கப்படு கிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பினர் தாட்கோவின் ‘www.tahdco.com’ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x