Published : 24 Jun 2022 09:39 PM
Last Updated : 24 Jun 2022 09:39 PM

‘லாடம் கட்டுவது’ முதல்  தூங்க விடாமல் செய்வது வரை - காவல் நிலைய சித்ரவதைகள்

தமிழகத்தில் கடந்த ஆட்சியின்போது சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தையும் மகனும் காவல் நிலையத்தில் இறந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தது. இன்றைய ஆளும் கட்சி அப்போது அதற்கு எதிராகக் குரல்கொடுத்தது. மனித உரிமை அமைப்புகளுடனும் மனித உரிமை ஆர்வலர்களுடனும் இணைந்து அப்போதைய அரசைத் தீவிரமாக எதிர்த்தது.

இது போன்ற எதிர்ப்புகளும் ஆட்சி மாற்றத்துக்குக் காரணமாக இருந்தன. ஆனால், இப்போதைய ஆட்சியிலும் காவல் நிலைய மரணங்களும் சித்ரவதைகளும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.

திருவண்ணாமலையில் தங்கமணி, சென்னையில் விக்னேஷ் போன்றவர்களின் காவல் நிலைய மரணங்களுக்கும் சித்ரவதைகளுக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டிருந்தபோதிலும் சென்னை கொடுங்கையூரில் இந்த மாதத்தில் ஒரு காவல் நிலைய மரணம் நிகழ்ந்திருப்பது ‘சட்டத்தின் ஆட்சி’ என்பதை பெரிதும் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது.

காவல் வன்முறையை எல்லா அரசுகளும் பாதுகாத்துக்கொண்டிருக்கின்றனவோ என்ற ஐயம் ஏற்படுகிறது. ஒருவரை அச்சுறுத்தி, அவமானப்படுத்தி சித்ரவதை செய்வதும் சுட்டுக் கொல்வதும், அதை நண்பர்களையோ உறவினர்களையோ கட்டாயப்படுத்திப் பார்க்க வைப்பது போன்ற சம்பவங்களெல்லாம் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது அமைக்கப்பட்ட கூட்டு அதிரடிப்படைகள் தமிழகத்திலும் கர்நாடக எல்லைப் பகுதிகளிலும் நடத்தியதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன.

சித்ரவதையை இழைப்பவர்கள் சட்டத்தின் ஓட்டைகளையும், அரசு அதிகாரத்தையும் பயன்படுத்தி விசாரணையிலிருந்தும் தண்டனையிலிருந்து தப்பித்துவரும் நிலை தொடர்வதற்கு மத்திய - மாநில அரசுகள் இனியும் அனுமதிக்கலாகாது.

காவல் நிலைய சித்ரவதை என்பது இந்தியாவில் மோசமான மனித உரிமை மீறலாக இருக்கிறது. கீழ்வரும் சித்ரவதைகளைப் படித்துப்பார்க்கும்போதே நமக்கு நடுக்கம் ஏற்படும் என்றால், அவற்றை அனுபவிப்பவர்களுக்கு எப்படி இருக்கும்!

  • அடிப்பது
  • நிர்வாணப்படுத்துவது
  • காலின் உள்பாகத்தில் அடிப்பதற்காக ‘லாடம் கட்டுவது
  • தொங்க விடுவது
  • கழிவுகள் கலக்கப்பட்ட நீரில் தலையை மூழ்க வைத்து
  • மூச்சைத் திணற வைப்பது
  • மிளகாய்த் தூளைப் பயன்படுத்துவது
  • சிகரெட், இரும்புக் கம்பிகளால் சூடு வைப்பது
  • அந்தரங்க உறுப்பு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரத்தைப் பாய்ச்சுவது
  • நீண்ட நேரம் நிற்க வைப்பது
  • ஒற்றைக் காலில் நிற்க வைப்பது
  • காற்று புகாத சிறிய அறையில் அடைத்து வைப்பது
  • வன்புணர்வு செய்வது
  • பெண்களை இழிவான முறையில் தாக்குவது
  • அந்தரங்க உறுப்பில் காயங்களை ஏற்படுத்துவது
  • பல்லைப் பிடுங்குவது
  • நகக்கண்களில் ஊசியைச் செலுத்தி வலியை ஏற்படுத்துவது
  • தூங்க விடாமல் செய்வது
  • நீண்ட நேரம் கண்ணைக் கட்டிவைத்திருப்பது
  • கண்ணுக்கு எதிரே மிகப் பிரகாசமான மின்விளக்கை வைப்பது
  • குடிக்கத் தண்ணீர் தர மறுப்பது
  • முடியைப் பிடித்துத் தூக்குவது
  • சூடான எண்ணெயைக் குடிக்கக் கட்டாயப்படுத்துவது

இவை உள்ளிட்ட சித்ரவதைகள் எல்லாம் அரங்கேற்றப்படுகின்றன என்று குற்றம்சாட்டப்படுகிறது.

பொதுமக்களைச் சித்ரவதை செய்ததாகத் தண்டனைக்கு உள்ளாகும் போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு, அதிகபட்சமாக ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டுமென மத்திய அரசுக்குச் சட்ட ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. அதனை நடைமுறைப்படுத்துவது அவசியம்.

> இது, வழக்கறிஞர்,சி‌.சே.இராசன் எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்

> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x