Published : 16 Dec 2015 10:48 AM
Last Updated : 16 Dec 2015 10:48 AM

பீத்தோவன்10

உலகப் புகழ்பெற்ற ஜெர்மானிய இசை மேதை லுட்விக் வான் பீத்தோவன் (Ludwig Van Beethoven) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l ஜெர்மனியின் பான் நகரில் (1770) பிறந்தார். இவரது தந்தை இசை ஆசிரியர். தாத்தா, பெரிய அண்ணன் ஆகியோர் இசைக் கலைஞர்கள். தந்தைதான் இவரது முதல் இசை ஆசான். தொடர்ந்து பல பிரபல கலைஞர்களிடம் இசை கற்றார்.

l சிம்பொனி இசை மேதையாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவும் பகலும் இவருக்கு கடும் பயிற்சி அளித்தனர். 6-வது வயதில் அவரது முதல் இசை நிகழ்ச்சிக்கு தந்தை ஏற்பாடு செய்தார். இசைத் துறையில் இவர் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக 10 வயதிலேயே பள்ளிப் படிப்பும் நிறுத்தப்பட்டது. இதனால் பெருக்கல் வகுத்தல்கூட தெரியாமல் போனது.

l இசையமைப்பது பற்றி கிறிஸ்டியன் கோட்லாப் நீப் என்ற இசை நிபுணரிடம் கற்றார். அவரது உதவியுடன் தன் முதல் இசைப் படைப்பை 1783-ல் வெளியிட்டார். இவரது இசைத் திறமையால் கவரப்பட்ட மாக்ஸ் மில்லன், இசை கற்க நிதி உதவி வழங்கினார்.

l சிறந்த பியானோ, வயலின் இசைக் கலைஞராக, சிறந்த இசை இயக்குநராகவும் திகழ்ந்தார். 17 வயதில் இசை நிகழ்ச்சி நடத்த மேற்கத்திய இசைக்குப் பிரபலமான வியன்னாவுக்கு சென்றார். ‘சிம்பொனி இசையின் தந்தை’ என்று போற்றப்பட்ட ஜோஸப் ஹைடனிடம் இசை கற்றார்.

l சிறு வயது முதலே கல்லீரல் நோய், பெருங்குடல் அழற்சி, வாதநோய், தோல் நோய்கள், கண், இதய பாதிப்பு, என பலவற்றால் அவதிப்பட்டு வந்தார். ஆனாலும், அவரது இசைப் பயணம் மட்டும் சீராகத் தொடர்ந்தது.

l பல மாணவர்களுக்கு பியானோ இசை கற்பித்தார். 27 வயதில் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது. இது தீவிரமாகி கடைசியில் முற்றிலுமாக காது கேட்காமல் போனது. ஆனால் அதற்கு முன்பாகவே மிகச் சிறந்த பல சிம்பொனி இசை வடிவங்களை உலகுக்கு வழங்கிவிட்டார்.

l ‘மூன்லைட் சொனாட்டா’ என்ற இவரது இசை நிகழ்ச்சி மாபெரும் வெற்றி பெற்றது. இவரது 3-வது சிம்பொனியான ‘எரோய்கா’, மாவீரன் நெப்போலியனுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. ஒன்பதாவதும், இறுதி சிம்பொனியுமான ‘ஓடே டு ஜாய்’ மிகவும் பிரபலமானது. இந்த இசை நிகழ்ச்சி நடத்தும்போது அதை அவராலேயே கேட்க முடியவில்லை.

l ரசிகர்களின் ஆர்ப்பரிப்பு, கைதட்டல் ஓசைகூட அவரது காதுகளில் விழவில்லை. அவர்கள் கைதட்டுகிறார்கள் என்பதை சுற்றிலும் பார்த்துதான் தெரிந்துகொண்டாராம். அதன் பிறகு, பொது நிகழ்ச்சிகளில் வாசிப்பதை நிறுத்திக்கொண்டார்.

l காது கேட்காமல் போனதால் நோட்டுப் புத்தகத்தில் எழுதி உரையாடத் தொடங்கினார். அவர்கள் சொல்ல விரும்புவதை இவரது உரையாடல் டைரியில் எழுதுவார்கள். அதற்கு இவர் சைகை அல்லது எழுத்து மூலம் பதிலளிப்பார். இவ்வாறு 400 கையேடுகளை வைத்திருந்தார்.

l பல அற்புத இசை வடிவங்களை உலகுக்கு வழங்கிய இசை மேதை பீத்தோவன் உடல்நலம் பாதிக்கப்பட்டு 57-வது வயதில் (1827) மறைந்தார். இவரது இறுதி ஊர்வலத்தில் 2 லட்சம் பேர் கலந்துகொண்டனராம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x