இன்று அன்று | 23 அக்டோபர் 1966: ஐ.நா. சபையில் ஒலித்த எம்.எஸ்.ஸின் குரல்!

இன்று அன்று | 23 அக்டோபர் 1966: ஐ.நா. சபையில் ஒலித்த எம்.எஸ்.ஸின் குரல்!
Updated on
1 min read

ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தின் தொடக்க நாளில் உலகின் தலைசிறந்த கலைஞர்கள் கலந்துகொள்ளும் கலை நிகழ்ச்சி நடத்தப்படும்.

1965 செப்டம்பரில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு அழைப்புவிடுத்தது ஐ.நா. எனினும், அப்போது இந்திய-பாகிஸ்தான் போர் நடந்துகொண்டிருந்ததால், அந்நிகழ்ச்சியை ரத்துசெய்தார் எம்.எஸ். 1966-ல் அவருக்கு மீண்டும் அழைப்பு விடுத்தது ஐ.நா. அந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார் எம்.எஸ்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐ.நா. சபையின் அரங்கில் 1966 அக்டோபர் 23-ல் அவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. காஞ்சி மகா பெரியவர் இயற்றிய, ‘மைத்ரீம் பஜத’ என்ற பாடலைத்தான் அன்று பாடினார் எம்.எஸ்.

அப்பாடலுக்கு ஆங்கிலத்தில் பொழிப்புரை எழுதப்பட்டு, அதன் பிரதிகள் பார்வையாளர் அரங்கில் இருந்த பன்னாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்பட்டன. அவர் பாடி முடித்தபின் அனைவரும் எழுந்து நின்று பலத்த கரகோஷம் எழுப்பினர். கரகோஷம் அடங்க ஏறக்குறைய ஒரு நிமிடம் ஆனது!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in