கரோனாவின் தீவிரத்தை உணராத அரசியல்வாதிகள்! படை திரட்டிச் செல்வதால் தொற்று பரவும் அபாயம்

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

மக்களின் துயர்மிகு வலிகளின் போது துணை நிற்பது அரசியல்வாதிகளின் அடிப்படைக் கடமைகளில் ஒன்று. அதன்படி தமிழக அரசியல்வாதிகள் கரோனா களத்தில் தங்களால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறார்கள்.

ஆனால், இந்த சமயத்தில் கரோனா நிவாரணம் தருதல், கோரிக்கை மனு அளித்தல், அடையாளப் போராட்டம் உள்ளிட்டவற்றுக்காக அரசியல்வாதிகள் ஆங்காங்கே மக்களைத் திரட்டுவதால் அவர்களுக்கு மட்டுமின்றி மற்றவர்களுக்கும் நோய் தொற்றும் அபாயம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்கு உள்ளான திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ஜெ.அன்பழகன் அண்மையில் உயிரிழந்தார். ரிஷிவந்தியம், செய்யூர், பரமக்குடி, உளுந்தூர்பேட்டை, கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளின் சட்டப்பேரவை உறுப்பினர்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.

இத்தனை சங்கடங்களைச் சந்தித்தும் அரசியல்வாதிகள் மத்தியில் இன்னும் கரோனா பரவல் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பல இடங்களில் விஐபிக்கள் வருகைக்காக தனிமனித இடைவெளி இல்லாமல் திரளும் கூட்டத்தைப் பார்த்தால் அச்சமே மேலோங்குகிறது. கரோனா களத்தில் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் மக்களை நேரில் சந்தித்து அரிசி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி வருகின்றன.

இவர்கள் செய்யும் கரோனா சேவைகள் ஏழை மக்களுக்கு இப்போது மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட பகுதிகளுக்குப் போய் நலத்திட்ட உதவிகளை வழங்கும் இவர்கள் தங்களோடு பெரும்படையைத் திரட்டிச் செல்கின்றனர். இதனால் போகும் இடங்களில் தொற்றுப் பரவுவதற்கும் அங்கிருந்து தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகம். அத்துடன் திருமணம், இறுதிச்சடங்கு உள்ளிட்ட நிகழ்வுகளிலும் அரசியல்வாதிகள் தலைக்காட்ட வேண்டி இருக்கிறது.

இந்த நேரத்தில் அரசியல்வாதிகளின் சேவை மக்களுக்கு அவசியமான ஒன்றுதான். ஆனால், அதேசமயம் தமிழகத்தில் கரோனா பரவல் உச்சத்தில் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். நிவாரணம் கொடுக்கும் இடத்தில் கூடிய கூட்டத்தால் கூடுதலாக நான்கு பேருக்குத் தொற்று ஏற்பட்டாலோ அல்லது நிவாரணம் வழங்கியவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலோ நாமே போய் வம்பை விலைக்கு வாங்கி விநியோகித்த கதையாகிவிடும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இனி வரும் காலங்களிலாவது மக்களுக்கு நிவாரணம் வழங்கும் அரசியல்வாதிகள் தேவையற்ற கூட்டத்தைக் கூட்டாமல் விளம்பர வெளிச்சத்தை எதிர்பார்க்காமல் சேவை செய்தால் அனைவருக்குமே நல்லது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in