Published : 21 Jan 2020 03:55 PM
Last Updated : 21 Jan 2020 03:55 PM

இடுப்பைச் சுற்றிக் கூடுதல் சதை போட்டால் மாரடைப்பு, ஸ்ட்ரோக் ஏற்படுமா? -சமீபத்திய மருத்துவ ஆய்வு கூறுவது என்ன?

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்தவர் தங்கள் உடலின் இடுப்புப் பகுதியில் கூடுதல் சதை போடாமல் பார்த்துக் கொள்வது அவசியம், ஏனெனில் இதனால் மீண்டும் இவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் முடிவுகள் எச்சரிக்கின்றன.

ஏற்கெனவே வந்த ஆய்வுகள் வயிறு, இடுப்புப் பகுதி பருமன் அதிகரிப்பினால் முதல் முறை மாரடைப்பு ஏற்படும் அபாயத்தினை சுட்டிக்காட்டியுள்ளன. ஆனால் ஒருமுறை இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டு உயிர்பிழைத்து வாழ்ந்து வருபவர்களுக்கு இடுப்புச் சதை, அடிவயிறு சதை கூடினால் மீண்டும் மாரடைப்பு ஏற்படுமா என்பது இதுவரை அறியப்படாத ஒரு பகுதியாக இருந்து வந்தது.

கரோலின்ஸ்கா ஸ்தாபனத்தின் ஹனீ மொகமதி கூறும்போது, “முதல் மாரடைப்புக்குப் பிறகே நோயாளிகள் கடும் மருத்துவ சிகிச்சை நடைமுறையில் வைக்கப்படுகின்றனர். இதற்கு இரண்டாம் நோய்த்தடுப்பு உத்தி என்று பெயர்.

இந்த இரண்டாம் தடுப்பு உத்தி சிகிச்சை முறை மாரடைப்பு தொடர்பான நோய் வாய்ப்பு இடர்பாட்டுக் காரணிகளைக் குறைப்பதற்காக செய்யப்படுகிறது. உதாரணமாக ஸ்ட்ரோக், மாரடைப்பு ஏற்படுத்தும் காரணிகளான ரத்தத்தில் அதிக சர்க்கரை, கொழுப்புகள், ரத்தக் கொதிப்பு ஆகியவை குறைக்கப்படுகின்றன.

இந்நிலையில் இந்த ஆய்வை ஸ்வீடனில் நடத்தியுள்ளனர், இதில் முதல் முறையாக மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிழைத்த 22,000 நோயாளிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டனர்

அடிவயிறு, இடுப்பு பருமன் என்பதை இடுப்புப் பகுதி சுற்றளவை மதிப்பிடுவதன் மூலம் அறுதியிடுகின்றனர். இதற்கும் மீண்டும் மாரடைப்பு ஏற்படுவதற்குமான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன.

ரத்த நாளங்களில் அடைப்பு, உயிரைப்பறிக்கும் மாரடைப்பு, அல்லது உயிரைப் பறிக்காத மாரடைப்பு நிகழ்வுகள், சந்தர்ப்பங்கள் இந்த ஆய்வில் உற்று நோக்கப்பட்டன.

22,000 நோயாளிகளில் ஆண்களில் 78% பெண்களில் 90% நபர்களுக்கு இடுப்புப் பகுதியில் அதிகமாகச் சதை போட்டிருந்தது. அதாவது இடுப்பின் சுற்றளவு 94 செமீ அல்லது அதற்கும் கூடுதலாக ஆண்களுக்கும் 80செமீ மற்றும் அதற்குக் கூடுதலாக பெண்களுக்கும் சதை பெருகியிருந்தன.

இதனால் ஸ்ட்ரோக், மாரடைப்பு வாய்ப்புகள் இன்னும் அதிகரித்துள்ளதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது, அதாவது புகைப்பிடித்தல், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பு, பிஎம்ஐ உள்ளிட்ட மற்ற ரிஸ்க் காரணிகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாமலேயே இவர்களுக்கு இடுப்பு கூடுதல் சதையினால் ஸ்ட்ரோக், மாரடைப்பு ஏற்படும் சாத்தியக் கூறுகள் இந்த ஆய்வில் கண்டு பிடிக்கப்பட்டன,

மீண்டும் மாரடைப்பு ஏற்படுவதில் இடுப்பின் சுற்றளவு என்பது ஒரு முக்கியமான அடையாளமாக உள்ளது.

இந்நிலையில் இந்த ஆய்வில் ஈடுபட்ட மொகமதி கூறும்போது, ரத்தக்குழாய்களில் தடை ஏற்படுத்தும் சூழ்நிலையுடன் தொடர்புடைய தமனித்தடிப்பு (அதாவது ரத்தக்குழாய்களில் கொழுப்பு, கால்சியம், மற்றும் சில நச்சினால் ஏற்படும் அடைப்பு) அல்லது அதிரோஸ்லெரோசிஸ் நிலைமைகளை அதிகரிக்கிறது, அதாவது இடுப்புச் சதை போடுதல் இந்த ரிஸ்கை அதிகரிக்கிறது, என்கிறார்.

ரத்தக்குழாய்களில் தடையேற்படுத்துவதில் பிரதான பங்கு வகிப்பது அதிகரித்த ரத்தக் கொதிப்பு, அதிக சர்க்கரை, இன்சுலினுக்கும் அடங்காத நீரிழிவு , ரத்த கொழுப்பு அதிகரித்தல் ஆகியவையாகும், இடுப்புப் பகுதியில் தேவையற்ற சதைத் தொகுப்பு இவற்றுக்கு வழி வகுப்பதால் ஸ்ட்ரோக், மாரடைப்பு ரிஸ்க் அதிகரிக்கிறது என்கிறது இந்த ஆய்வு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x