Published : 19 May 2015 06:30 PM
Last Updated : 19 May 2015 06:30 PM

யூடியூப் பகிர்வு: உன்னை அறிந்தால்... செல்ஃபி குறும்படம்

ரயில் வண்டி ஓடிக்கொண்டிருக்கிறது. குறுக்கெழுத்துப் போட்டியின் ஒரு கட்டத்தை நிரப்ப யோசித்துக் கொண்டிருக்கிறார் ஒரு பயணி. பதிலைக் கூறிவிட்டு, செல்பேசி அழைத்ததும் எழுந்து வெளியே வருகிறார் நம் கதாநாயகன்.

பேசி முடித்துப் பாக்கெட்டில் போட எத்தனிக்கும் சமயத்தில் தவறுதலாக முன்னால் நிற்கும் பயணியின் பேண்டில் கை படுகிறது. கண் முன்னேயே பிக்பாக்கெட்டா எனக் கேட்டு அசிங்கப்படுத்துகிறார் அப்பயணி. சுற்றி இருப்பவர்கள் எல்லோரும் சிரிக்கின்றனர்.

ரயிலை விட்டு இறங்கியதும், பரிசோதகர் எல்லோரையும் விட்டுவிட்டு இவரிடம் மட்டும் டிக்கெட்டைக் காட்டச்சொல்கிறார். சிறிது தூரம் சென்று டாக்ஸி அருகில் நிற்பவரிடம், டிரைவர் என்று நினைத்து வண்டி வருமா என இளம்பெண்ணொருத்தி கேட்கிறாள். இது போல வரிசையாய் நடக்கும் சில சம்பவங்கள் அவரைக் காயப்படுத்துகின்றன.

எப்போதுமே நமக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்றெண்ணி வருந்துகிறார் அவர். அவமானமாய் உணர்ந்து கலங்கி நிற்பவரின் முன்னால் நடக்கும் அந்த சம்பவம், மனவோட்டத்தையும், அவரின் மீதேயான மொத்த மதிப்பீடுகளையும் ஒற்றை நொடியில் தகர்த்தெறிந்து செல்கிறது. அப்படி என்ன நடந்தது? விடை, குறும்படத்தில்!