Published : 29 Apr 2015 10:24 AM
Last Updated : 29 Apr 2015 10:24 AM

ராஜா ரவிவர்மா 10

காலத்தால் அழியாப் புகழுடைய ஏராளமான ஓவியங்களைப் படைத்த பிரபல ஓவியர் ராஜா ரவிவர்மா (Raja Ravi Varma) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l கேரள மாநிலம் திருவாங்கூர் சமஸ்தானத்தில் உள்ள கிளிமானூரில் (1848) பிறந்தவர். சிறு வயதிலேயே கதகளி ஆட்டத்திலும் சங்கீதத்திலும் பயிற்சி பெற்றார். ஓவியம் தீட்டுவதை தன் உறவினரிடம் கற்றார். திருவனந்தபுரம் அரண்மனை ஓவியர் ராமசாமி நாயுடுவிடம் எண்ணெய் வண்ண ஓவியக்கலையை 9 ஆண்டுகள் பயின்றார். மரப்பட்டைகள், மலர்கள், மண் ஆகியவற்றில் இருந்து ஓவியத்துக்கான வண்ணங்கள் தயாரிக்கப்பட்டன.

l ஐரோப்பியர்களின் ஓவிய உத்தி குறித்து அறிய விரும்பினார். 1868-ல் அரண்மனைக்கு வந்திருந்த டச்சு ஓவியர் தியடோர் ஜென்சனின் அருகில் இருந்து கவனித்துப் பார்த்து, நுணுக்கங்களை உள்வாங்கிக்கொண்டார்.

l 1870 முதல் 1880 வரை காலத்தால் அழியாப் புகழ்கொண்ட ஏராளமான ஓவியங்களைப் படைத்தார். அன்னப்பட்சியுடன் உரையாடும் தமயந்தி, யசோதா கிருஷ்ணன் ஆகியவை மிகவும் பிரசித்தி பெற்றவை.

l அவர் சிருஷ்டித்த ஓவியங்கள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றன. இந்தியாவில் மட்டுமல்லாது, சர்வதேச ஓவியக் கண்காட்சிகளிலும் பல பரிசுகள், பதக்கங்களைப் பெற்றார்.

l தன் உருவத்தை மிகச் சிறப்பாக வரைந்ததற்காக திருவாங்கூர் மகாராஜா இவருக்கு ‘வீரஸ்ருங்கலா’ என்ற விருது வழங்கிச் சிறப்பித்தார். 1904-ல் ‘கெய்ஸர்-இ-ஹிந்த்’ என்ற பதக்கத்தை ஆங்கிலேய அரசு வழங்கியது. நாடு முழுவதும் இருந்து பாராட்டுக் கடிதங்கள் குவிந்த வண்ணம் இருந்ததால் இவருக்காகவே கிளிமானூரில் ஓர் அஞ்சலகம் திறக்கப்பட்டது.

l அவரது அசல் ஓவியங்கள் தங்கள் வீடுகளை அலங்கரிப்பதை உயர்ந்த அந்தஸ்தின் அடையாளமாக மக்கள் கருதினர். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார். அவரது கற்பனைத் திறன் மேம்பட இது சிறந்த வாய்ப்பாக அமைந்தது.

l சுற்றுப்பயணம் முடிந்து திரும்பியவுடன் பல தலைசிறந்த ஓவியங்களுக்கு உயிர் கொடுத்தார். நள தமயந்தி, சந்தனு மகாராஜா- மீனவப் பெண் சத்யவதி, சந்தனு - கங்கா தேவி, ராதா கிருஷ்ணன், கிருஷ்ணன்- தேவகி, அர்ஜுனன்- சுபத்திரை, திரவுபதி துகில் உரியும் காட்சி உட்பட பல ஓவியங்களைத் தீட்டினார்.

l ஆரம்பத்தில் மலையாளம், சமஸ்கிருதம் மட்டுமே அறிந்திருந்த இவர் பிறகு இந்தி, குஜராத்தி, ஆங்கிலம், ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் புலமை பெற்றார்.

l இவரது யசோதா கிருஷ்ணன் ஓவியம் 2002-ல் ரூ.56 லட்சத்துக்கு ஏலம் போனது. இவரது ஓவியங்களுக்குப் பெரும் வரவேற்பும் மதிப்பும் இருந்ததால் பரோடாவின் திவான் மாதவ் ராவ் யோசனையின் பேரில் லித்தோகிராஃப் அச்சகம் உருவானது. இதன்மூலம் அச்சடிக்கப்பட்ட இவரது ஓவியப் பிரதிகள் உலகம் முழுவதும் சென்றடைந்தன. வசதி குறைந்தவர்கள்கூட இவரது ஓவியப் பிரதிகளை வாங்க முடிந்தது.

l காலண்டர் படங்கள் என்னும் ஓவியத் துறை இந்தியாவில் தோன்ற மூலகாரணமாக இருந்தவர் ரவிவர்மா. உயிரோட்டம் நிறைந்த ஓவியங்களை வரைந்து, இந்தியாவின் பெருமையை உலகம் முழுவதும் பரவச்செய்த ஓவிய மேதை ராஜா ரவிவர்மா 58 வயதில் (1906) மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x