Published : 05 Jan 2017 10:18 AM
Last Updated : 05 Jan 2017 10:18 AM

ஜோசஃப் எர்லாங்கர் 10

நோபல் பரிசு பெற்ற நரம்புசார் மருத்துவர்

நரம்பணுவியல் துறையில் மகத்தான பங்களிப்பை வழங்கியவரும் மருத்துவத்துக்கான நோபல் பரிசை வென்றவருமான ஜோசஃப் எர்லாங்கர் (Joseph Erlanger) பிறந்த தினம் இன்று (ஜனவரி 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் யூதக் குடும்பத்தில் பிறந்தார் (1874). சொந்த ஊரில் ஆரம்பக் கல்வி பயின்றார். 1895-ல் பெர்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதி யியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.

* மேரிலாண்டில் உள்ள ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசின் கல்லூரியில் மருத்துவத்தில் பட்டம் பெற்றார். அதே கல்லூரியில் உடல் இயங்கலியல் சோதனைக்கூடத்தில் உதவியாளராகச் சேர்ந்தார். அங்கே நரம்பணுவியல் (neuroscience) குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டார்.

* மேடிசானில் உள்ள விஸ்கோசின் பல்கலைக்கழகத்தில் உடலியல் துறையின் முதல் தலைவராகப் பதவியேற்றார். இதய நோய்கள் தொடர்பாக, அதுவும் குறிப்பாக இதய மேலறையிலிருந்து (atrium) இதயத்தின் கீழறைக்கு (ventricle) கிளர்ச்சி எவ்வாறு இடமாற்றம் செய்யப்படுகிறது என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டார்.

* புயத் தமனியிலிருந்து (Brachial artery) ரத்த அழுத்தத்தை அளவிடும் நாடி அழுத்தமானி என்ற கருவியை மேம்படுத்தி அதற்கான உரிமம் பெற்றார். நாய்களின் ஜீரண முறை குறித்து ஆராய்ந்து கட்டுரை வெளியிட்டார். ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் கல்லூரியின் உடலியல் பேராசிரியர் வில்லியம் ஹெச் ஹாவெல்சை இந்த ஆய்வுக் கட்டுரை கவர்ந்தது. எனவே அவர் அந்தக் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இவரை நியமித்தார்.

* காயம் பட்ட அதிர்ச்சிக்கான சிகிச்சைக்குக் குளுகோஸ் திரவத்தை நோயாளிக்குச் செலுத்தலாம் என்ற இவரது ஆலோசனை நல்ல பலன் தந்தது. இருதய அடைப்பு குறித்த தனது ஆய்வு விவரங்களை அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் ஃபிசியாலஜி இதழில் கட்டுரையாக வெளியிட்டார். ஹெர்பெர்ட் ஸ்பென்சர் காஸருடன் இணைந்து சில வகையான நரம்பு இழைகளை அடையாளம் கண்டார்.

* அவற்றின் செயல்பாட்டுத் திறன் (action potential) வேகம் மற்றும் இழையின் விட்டத்துக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தார். நரம்பு மண்டலத்தின் மின்உடலியங்கலியல் (electrophysiology) குறித்து ஆராய்ந்தார். ஒரே இடத்தில் இருக்கும் வெவ்வேறு நரம்பு இழைகள் வெவ்வேறு செயல்பாடுகளை மேற்கொள்கின்றன என்பதைக் கண்டறிந்தனர்.

* நரம்புசார் அறிவியல் களத்தில் இவர்களது பங்களிப்புக்காக 1944-ல் மருத்துவத்துக்கான நோபல் பரிசு இவர்கள் இருவருக்கும் கூட்டாக வழங்கப்பட்டது. 1910-ல் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

* இங்கும் காஸருடன் இணைந்து மின்னணுவியல் துறையை உடலியல் ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்தார். பிரத்யேகமாக மேம்படுத்தப்பட்ட ஆக்சிலோஸ் கோப் (oscilloscope) சாதனத்தைக் கொண்டு நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டார்.

* மேலும் உந்துவிசையை உருவாக்க மாறுபட்ட அளவிலான தூண்டுதல்கள் தேவைப்படுகின்றன என்பதையும் கண்டறிந்தார். விமானம் தரையிறங்குவதற்கான சாதனங்கள் விமான ஓட்டியின் பார்வையில் படும்படியும், கைக்கெட்டும் துரத்தில் இருக்குமாறும் வடிவமைக்க வழிவகுத்தார். அதற்கு முன்னர் விமானங்கள் தோராயமாகவே தரையிறக்கம் செய்யப்பட்டன.

* கலிபோர்னியா, விஸ்கோசின், பென்சில்வேனியா, மிச்சிகன் பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின. உடலியல் குறித்த அனைத்து விதமான நுட்பங்கள் குறித்து ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார். உடலியல் ஆராய்சிகளின் முன்னோடி எனப் போற்றப்படும் ஜோசஃப் எர்லாங்கர் 1965-ம் ஆண்டு 91-ம் வயதில் மறைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x