சுவாதி திருநாள் ராமவர்மா 10

சுவாதி திருநாள் ராமவர்மா 10
Updated on
2 min read

திருவிதாங்கூர் சமஸ்தான மன்னரும், சிறந்த இசை வல்லுநருமான சுவாதி திருநாள் ராமவர்மா (Swathi Thirunal Rama Varma) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 16). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் குடும்பத்தில் (1813) பிறந்தார். இவர் ஒன்றரை வயது குழந்தையாக இருந்தபோது தாய் இறந்தார். சிற்றன்னையின் பராமரிப்பில் வளர்ந்தார். இசையில் தேர்ச்சி பெற்ற அவரிடம் குழந்தைப் பருவம் முதலே இசை கற்றார். சமஸ்கிருத அறிஞரான தந்தை இவருக்கு கல்வி கற்பித்தார்.

* மலையாளம், தமிழ், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், வங்காள மொழி, ஒரியா, பாரசீகம், ஆங்கிலத்தில் சரளமாகப் பேசும் வல்லமை பெற்றி ருந்தார். மொழிகளை இவர் கற்றுக்கொள்ளும் வேகம் ஆசிரியர் களையும், வெளிநாட்டு விருந்தினர்களையும் வியக்கவைத்தது.

* வடிவியலிலும் சிறந்து விளங்கினார். இலக்கணம், கவிதை, நாடகத்திலும் ஆர்வம் கொண்டிருந்தார். கரமண சுப்பிரமணிய பாகவதர், பத்மநாப பாகவதரிடம் இசை கற்றார். இசைக்கருவிகளும் வாசிக்கக் கற்றார். சுப்பாராவிடம் ஆங்கிலம், இசை கற்றார். பிரபல இசைக் கலைஞர்களின் இசையைக் கேட்டும் பயிற்சி பெற்றார்.

* சமஸ்தான மன்னராக 16-வது வயதில் பதவியேற்றார். சிறந்த ஆட்சியாளராகத் திகழ்ந்தார். லஞ்சத்தை ஒழிக்க பல்வேறு வழி முறைகளை வகுத்தார். ஒரு ஆங்கிலப் பள்ளி தொடங்கினார். பின் னாளில் இது மஹாராஜா மேல்நிலைப் பள்ளி, மஹாராஜா கல்லூரி யாக உயர்ந்தது. மேலும் பல இடங்களில் பள்ளிகள் தொடங்கினார்.

* சட்டத் துறையில் பல சீர்திருத்தங்கள் கொண்டுவந்தார். இவர் தொடங்கிய முன்சீப், மாவட்ட, மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் சிறந்த முன்மாதிரிகளாகத் திகழ்ந்தன. நில சச்சரவுகளைத் தீர்க்க மறு நிலஅளவை மேற்கொண்டார். 1836-ல் முதன்முதலாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தினார்.

* நவீன மருத்துவத்தை அறிமுகப்படுத்தினார். ஐரோப்பிய மருத்துவரை அரண்மனை வைத்தியராக நியமித்தார். கேரள மாநிலம் உருவாகும் வரை இந்தப் பதவி ‘சர்ஜன் ஜெனரல்’ எனக் குறிப்பிடப்பட்டது. பல மருத்துவமனைகள் தொடங்கினார். பொறியியல் துறையையும் நிறுவினார். இவரது ஆட்சிக்காலத்தில்தான் கரமண பாலம் கட்டப்பட்டது.

* இசை வல்லுநர், இசைப் புரவலராகவும் திகழ்ந்தார். இவரது மாளிகை இசைக் கலைஞர்களின் தாயகம் போல விளங்கியது. நாடு முழுவதும் இருந்து ஏராளமான இசைக் கலைஞர்கள் இங்கு வந்தனர். இசையை ஆதரித்ததோடு கலைகள், கலைஞர்களையும் ஆதரித்தார்.

* இந்துஸ்தானி, கர்னாடக இசை இரண்டையும் ஆதரித்தாலும் கர்நாடக இசை மரபின் பெரும் ரசிகராகத் திகழ்ந்தார். தானாகவே பாடல்கள் புனையும் திறன் பெற்றிருந்தார். கர்னாடக இசை, இந்துஸ்தானியில் 400-க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். நவராத்திரி விழாவுக்கு என்றே பல கிருதிகளை இயற்றினார். பல இசை நாடகங்களும் எழுதினார்.

* இசையுடன் அறிவியல், வானியல், கல்வி, பொறியியல் வளர்ச்சிக்கும் அடித்தளமிட்டார். திருவனந்தபுரத்தில் வானிலை ஆய்வகம், அருங்காட்சியகம், விலங்கியல் தோட்டம், அரசு அச்சகம், பொது நூலகம் தொடங்கினார். ராயல் ஏஷியாடிக் சங்க உறுப்பினராகவும் செயல்பட்டார்.

* ‘சுவாதி சங்கீதோற்சவம்’ என்ற பெயரில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 2-வது வாரம் முழுவதும் இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்தார். மிக குறுகிய காலமே வாழ்ந்தாலும், அரசு நிர்வாகத்திலும் இசைத் துறையிலும் அளப்பரிய பல சாதனைகளை நிகழ்த்திய சுவாதி திருநாள் ராமவர்மா 33-வது வயதில் (1846) மறைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in