Last Updated : 21 Sep, 2013 05:38 PM

 

Published : 21 Sep 2013 05:38 PM
Last Updated : 21 Sep 2013 05:38 PM

தண்டனையா தூக்கு?

அது '22 ஃபீமேல் கோட்டயம்' படம். "கேன் ஐ ஹேவ் செக்ஸ் வித் யூ" என்று கேட்டபடியே இரு தடவை வன்புணர்வு செய்துவிட்டு பின்னர் வீண்குற்றம் சுமத்தி அவளைச் சிறைக்கும் அனுப்பும் ஒருவனை இளம்பெண் இப்படிப் பழிவாங்குவாள்: அவனைக் கட்டிவைத்து, உள்ளிருப்பது வெளியே தெரியக் கூடியதான பிளாஸ்டிக் உறையில் இருக்கும் நாகப்பாம்பை அவனைக் காண வைத்து, அந்த உறையில் அவனது இடது காலை விட்டு, உறையோடு அந்தக் காலைச் சேர்த்துக் கட்டி. காலில் பாம்பு ஊர்ந்தபடி, அரைமணி நேரத்தில் பயந்துகொண்டே இறப்பான் கடிபட்டு.

அக்காட்சி தந்த இன்பம் பயங்கரத்தைப் பூச்சூடிய இன்பம். ‘நன்றாக வேண்டும் இவனுக்கு.’ கதாபாத்திரத்தோடு ஒன்றிப்போன பழிவாங்கும் உணர்ச்சி, வெறி அது. ஆனால் இந்த நியாயம்போலும், பழிவாங்கும் உணர்ச்சியையும் கடக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

உணர்ச்சிவயப்பட்ட தனிப்பட்ட நபர்களாக இருக்கும் நமக்கு இது பல சமயம் சாத்தியமில்லாமல் போவதால் நீதிமன்ற நிறுவனம் மனிதப் பெரும்பான்மையின் உணர்ச்சிப் பேரலைகளைத் தாண்டி இயங்க வேண்டும்.

ஏனெனில் பழிவாங்கும் உணர்ச்சி ஒரு வகையில் குற்றத்தையும் குற்றத்துக்கு எதிரான நடவடிக்கையையும் சமப்படுத்திவிடுகிறது, ஏனெனில் மனிதர்கள் அவர்களின் செயல்களாலேயே உருவாவதால், அறியப்படுவதால், குற்றத்துக்குச் சமமான, பயங்கரமான தண்டனையைக் கோருபவர்களும் குற்றவாளி தந்ததேயொப்ப வலியை அவனுக்குத் தரமுனைபவர்களும் குற்றவாளிக்கு ஈடான சமன்பாட்டுக்குள் வந்துவிடுகிறார்கள்.

குற்றவாளி தர மறுத்த இரக்கத்தை, கருணையை அவனுக்குத் தருவதே ஆதர்ச மனித விழுமியங்களை நம்புபவர்களை இச்சமன்பாட்டுக்கு வெளியே நிறுத்தும்.

பௌத்தம் சொல்வதுபோல, மனிதர் கொள்ள வேண்டிய இரக்கத்துக்கும் கருணைக்குமான அளவுக்கு எல்லையே கிடையாது; என்றாலும், குற்றத்தின் கொடூரம் என்கிற பேய் வெளிச்சத்தில் விழிகள் மயங்கி, பார்க்க முடியாமல் போகும்போது விழுமியங்களைத் தனிநபர்களால் கைக்கொள்ள முடியாது என்பதாலேயே நீதிமன்ற நிறுவனமாவது இவ்விழுமியங்களை நினைவூட்டுவதாக செயல்பட வேண்டும். திபெத்தில் பௌத்தக் கோயில்களில், விகாரைகளில் வேண்டுதல்களை, மந்திரங்களைத் தத்தம் குரல்களில் சொல்லாமல், சொல்ல வேண்டியில்லாமல் இயந்திரப் பொறிகளின் இயக்கத்தில் அவை எழுத்துகளாக ஓட, வாசிப்பது வழக்கம்.

அதேபோல ஆதர்ச விழுமியங்களை நம்மால் நினைவுகூர முடியாமல் போகும்போது நீதிமன்ற நிறுவனமாவது அவற்றைப் பொறுப்போடு நினைவூட்ட வேண்டும். ஆனால்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x