அந்த ஆண்டில்| 1939: இரண்டாம் உலகப் போர்

அந்த ஆண்டில்| 1939: இரண்டாம் உலகப் போர்
Updated on
1 min read

1939 செப்டம்பர் 1 முதல் உலகப் போர் நடந்து முடிந்து 21 ஆண்டுகளுக்குப் பின்னர், 1939-ல் இதே நாளில் இரண்டாம் உலகப் போர் தொடங்கியது. இந்தப் போரின் தொடக்கமாக போலந்தை ஜெர்மனி ஊடுருவியது. சரியாக இரண்டு நாட்கள் கழித்து, ஜெர்மனி மீது பிரிட்டனும் பிரான்ஸும் போர்ப் பிரகடனம் செய்தன. தொடர்ந்து ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளும் ஜெர்மனி மீது போர் தொடுத்தன. அந்தக் காலகட்டத்தில் ஜெர்மனியும் ரஷ்யாவும் ஒன்றை ஒன்று தாக்கிக்கொள்வதில்லை என்று ஒப்பந்தம் செய்திருந்தன. ஜெர்மனியைத் தொடர்ந்து ரஷ்யாவும் செப்டம்பர் 17-ம் தேதி போலந்தை ஊடுருவியது.

நவம்பர் 30-ல் சோவியத் ஒன்றியம் பின்லாந்து மீது போர் தொடுத்தது. இந்தப் போர், குளிர்காலப் போர் என்று அழைக்கப்படுகிறது.

இதே ஆண்டு அக்டோபர் 10-ல் போலந்து ராணுவம் ஜெர்மனியிடம் சரணடைந்தது. இதையடுத்து, நார்வே மீதும் போர் தொடுக்கலாம் என்று ஹிட்லருக்கு ஜெர்மனி கடற்படை அதிகாரிகள் ஆலோசனை கூறினர். போர் சூடுபிடித்த நிலையில் போலந்தின் லுப்ளின் நகரில் முதன்முதலாக யூதர்களுக்கு என்று தனியாக ஒரு குடியிருப்பை (கெட்டோ) உருவாக்கினார் ஹிட்லர். நவம்பர் 1-ல் போலந்தின் சில பகுதிகள் ஜெர்மனியுடன் இணைக்கப்பட்டன.

அதே ஆண்டின் நவம்பர் 8-ம் தேதி, மியூனிக் நகரின் பீர் அருந்தகத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, ஒரு குண்டுவீச்சில் உயிர்தப்பினார் ஹிட்லர். அது நடந்திருந்தால், உலகத்தின் தலையெழுத்தே மாறியிருக்கக் கூடும்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in