Last Updated : 27 Feb, 2019 03:41 PM

 

Published : 27 Feb 2019 03:41 PM
Last Updated : 27 Feb 2019 03:41 PM

வாடகை வீடு - ’டூலெட்’ போர்டு - அனுபவங்கள்!

மூச்சை முட்டும் நெருக்கடி மிகுந்த நகரங்கள் கூட்டுக் குடும்பத்திலிருந்து தனிக்குடித்தனம் போவது போல் தனி வீடுகள் எல்லாம் கூட்டு வீடுகளாக, அபார்ட்மெண்ட்டுகளாக மாறியிருக்கின்றன. அடுக்கடுக்காக அத்தனை வீடுகள் கண்ணுக்குத் தெரிந்தாலும், ‘டூலெட்’ போர்டும் தெரிவதில்லை. வாடகைக்கு வீடு தேடுவதும் பெரும் கவலை!

ஃப்ளாட்ஃபாரத்தில் வசிப்பவர்களும், விண்ணை முட்டும் உயர்ந்த ப்ளாட்களில் வசிப்பவர்களும்,  அப்பர் மிடில் கிளாஸ் மக்களும் ’என் வழி தனி வழி’ என்று எவ்வித பிரச்சினையிலும் பொருந்திக்கொள்ளுகிறார்கள். ஆனால் வேலை மாற்றல், குழந்தைகள் கல்வி, கட்டுப்படியாகாத வாடகை என்று சிக்கல்கள் வரிசைகட்டி அடிக்கும் போது, விழிபிதுங்கி, கைபிசைந்து, கால்வலிக்க வீடு தேடுபவர்கள் மிடில் கிளாஸ் என்கிற  பாவப்பட்ட மக்கள்தான்.

’வீடு பிரமாதமா, எல்லா வசதிகளோடயும் இருக்கணும்’ என்பது ஒருவகை. ‘வீடு சுமாரா, குறைச்சலான வசதியோட இருந்தாலும் பரவாயில்ல. ஹவுஸ் ஓனர் டார்ச்சர் கொடுக்காதவரா இருந்தாப் போதும். அதுவே நிம்மதி’ என்று அலைபவர்கள் இன்னொருவகை.

இதில், இரண்டாவது வகைக்காரர்கள்தான், எக்கச்சக்கம்.

இருக்கிறவனுக்கு ஒரு வீடு.. இல்லாதவனுக்கு  பல வீடு என்கிற பழமொழி, சாதாரண தருணங்களில் இனிக்கலாம். ஆனால், ஒரு வீட்டில் இருந்து இன்னொரு வீட்டுக்குக் குடிபெயர்வதற்காக, வாடகை வீட்டைத் தேடி அலைபவர்களிடம் இதைச் சொன்னால், அவர்கள் பார்வையிலேயே நம்மை எரித்துவிடுவார்கள்.

’வேலை தேடுறது, கல்யாணத்துக்கு பொண்ணு தேடுறது, குடியிருக்க வீடு தேடுறதுன்னு மூணு தேடுதல் வாழ்க்கைல பெரிய அவஸ்தை. இதுல வீடு தேடுறது போல கொடுமை எதுவுமே இல்ல’ என்று தத்துவம் பேசுகிறவர்கள், பல வீடுகள் மாறி மாறி, குடியிருந்தவர்கள் என்பதை அந்தப் பேச்சு அனுபவத்திலேயே உணர்ந்துகொள்ளலாம்.

முதலில் ஏரியா பிடிக்கணும். அடுத்து அந்த ஏரியாவுக்கு வந்து செல்ல, பஸ், ரயில் வசதிகள் பார்க்கணும். மழைக்காலத்துல சிக்கலும் தண்ணீரும் வீட்டுக்குள்ளே வருமான்னு கவனிக்கணும். அப்புறம் தெரு. சாக்கடை, கழிவு நீர், குப்பைத்தொட்டின்னு சகலமும் கவனிக்கணும். இதுவும் ஓகேன்னு டிக் அடிச்ச பிறகு, வீடு.

அந்தக் காலத்துல, ‘வீடுன்னா வெளிச்சமா இருக்கணும்’ என்றார்கள். இப்போது ‘24 மணி நேரமும் லைட் போட்டுக்கிட்டே இருக்கணும்ங்கற மாதிரிதான் வீடு இருக்கு’ என்றாகிவிட்டது. ஆக, இருட்டு வெளிச்சம், லைட் என்பதை கணக்கில் சேர்க்கவேண்டாம்.

அதேபோல், காற்றோட்டமான வீடு என்பதையெல்லாம் மறந்து மாமாங்கமாகிவிட்டது. ‘ஜன்னல் திறந்து வைச்சா, லேசா வெளிச்சமும் கொஞ்சமா காத்தும் நிறையவே கொசுவும் உள்ளே வந்துரும்’ என்பதுதான் லேட்டஸ்ட் நிலவரம்.

வாடகைக்கு வீடு தேடுபவர்களின் நிலையை அப்படியே ‘கட்’ செய்துவிட்டு, ஹவுஸ் ஓனர்கள் பக்கம் கொஞ்சம் வருவோம்.

‘எத்தினி பேரு’ என்பது முதல் கேள்வி. ‘எங்கே வேலை’ என்பது அடுத்த கேள்வி. ‘மாசம் பொறந்தா அஞ்சாம்தேதி வாடகை கொடுத்துடணும்’ என்பார்கள்.

‘பசங்க ரெண்டுங்களா? ரொம்ப வாலுத்தனம் போல இருக்கே? இந்த செவுத்துல கிறுக்குறது, பூனை வரையறதுன்னு செய்யக்கூடாது. ஆணி அடிக்கவே கூடாது. தண்ணியை சிக்கனமாத்தான் செலவு செய்யணும்’ என்பார்கள்.

‘முக்கியமா, மச்சினன் வேலைக்கு வந்துருக்கான். தங்கச்சி படிக்க வந்திருக்கு’ன்னு வந்து தங்கற பிஸ்னஸ்லாம் கூடாது. அப்படி தங்கறதா இருந்தா, வாடகையை ஏத்துவோம். அதை இப்பவே சொல்லிப்புட்டேன்’ என்று பிபி ஏற்றுவார்கள்.

அதேபோல, ஊர்லேருந்து அப்பா அம்மா, மாமனார் மாமியார்னு அடிக்கடி வர்றதா இருந்தா, தண்ணி செலவுதான் அதிகமாகும். அதனால, இதையெல்லாம் மைண்ட்ல வைச்சுக்கங்க’ என்று கிறுகிறுக்கவைப்பார்கள். இதில் முக்கியமான விஷயம்... இந்தப் பேச்சின் போதே, நாம் எந்த ஜாதி, என்ன பிரிவு, குலம் என்ன, கோத்திரம் என்ன, சைவமா, அசைவமா என்பதையெல்லாம் ‘மானேதேனே’ கேள்விகளால், கறந்திருப்பார்கள்.

’அட்வான்ஸ் எப்போ தர்றீங்க?’ என்று கேட்டுவிட்டு நம்மை உற்றுப் பார்ப்பார்கள். ‘இன்னும் ரெண்டுநாள்ல தரேன்’, ‘அஷ்டமி, நாளைக்கி நவமி. அது முடிஞ்சு தர்றேன்’ என்று சொன்னால்... ‘ஏற்கெனவே ரெண்டுபேர் பாத்துட்டு ஓகே சொல்லிட்டுப் போயிட்டாங்க. பாத்துக்கங்க’ என்று டிமாண்ட் காட்டுவார்கள்.

அட... இதுமட்டுமா?

ரொம்ப டெர்ரர் ஹவுஸ் ஓனர், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் புதிய ஒப்பந்தம் போடற மாதிரி  பத்திரத்துல அக்ரிமெண்ட் போடுவாரு. வேறென்ன...வீட்டை காலி பண்ணிட்டுப் போகும்போது, நீங்க அழுக்காக்குனதுக்கு இவ்ளோ கலரடிச்சேன்..குழாயை மாத்தினேன்..இப்படி நீளமான பட்டியலைப் போட்டு, குளிர்ஜூரம் வரவைப்பாங்க.

நமக்கு வீடு வேணுமில்ல. அதனால தகராறு  பண்ணாம தலையாட்டிடுவோம்னு மாட்டிக்கிட்டு முழிக்கிறவங்க நிறைய பேரு இருக்காங்க. ஆனா எல்லா வீட்டுக்காரரும்  இப்படி இல்லங் கறதையும்சொல்லியே ஆகணும்,

என் தோழி ஒருத்தி, சமீபத்துலதான்  ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டு வந்தா. வரும்போது அவங்க ஹவுஸ் ஓனரம்மாவும் இவளும் ஒரே அழுகாச்சிதான். அன்புன்னா அப்படியொரு அன்பு. அவ குழந்தைகளுக்கு அப்பத்தா, அம்மாச்சியோடு, இந்தப் பாட்டியும் சேர்த்து மூணு பாட்டியாம். இப்படி அனுசரணையா ஒருத்தருக்கொருத்தர் தாயா பிள்ளையா பழகுறவங்களும் இருக்காங்க.

விலைவாசி ஏறினாலும் நியாயமான வாடகைக்கு விடற தங்கமான வீட்டுக்காரங்களும் இருக்கத்தான் செய்றாங்க. ஒரு காலத்தில அவங்களும் வாடகை வீட்டில இருந்தவங்களா கூட இருக்கலாம்தானே. ஒரு பொண்ணோட மனசு மட்டும்தான் இன்னொரு பொண்ணுக்குத் தெரியுமா. ஒரு வாடகை வீட்டுக் காரங்களோட மனசு முன்னாள் வாடகை வீட்டுக்காரங்களுக்குத் தெரியலாமே!

 20 வருடங்களுக்கு முன்பு, டூலெட் போர்டில் வாடகைக்கு வீடு.. அடைப்புக்குறிக்குள் குடும்பத்தினர் மட்டுமே அணுகவும்னு கொட்டை எழுத்தில் போட்டிருப்பார்கள். பேச்சிலர்களை பேசக் கூட அனுமதிக்க மாட்டாங்க. ஆனா இப்போ நிலைமையே வேற!

ஆனா என்னிக்கு குடும்பத்துல இருந்து வெளியூரு வந்து தனியா தங்கி வேலை  பார்க்கிற ஆணும் பெண்ணும் அதிகரிச்சாங்களோ... அப்ப எல்லாமே தலைகீழா மாறிப் போச்சு. இப்பவும் டூலெட் போர்டு வைக்கிறாங்க. ஆனா அதில், ‘பேச்சிலர்ஸ் ஒன்லி’ எனும் வார்த்தை கண்டிப்பாக இருக்கும்.

’ஆமாம்... ஐடி பசங்க வீட்டுக்குள்ளே இருந்தா, அடிச்சுப் போட்டா மாதிரி தூங்கிட்டிருக்காங்கன்னு அர்த்தம். வெளியே பூட்டு போட்டிருந்தா, வேலைக்குப் போயிட்டாங்கன்னு அர்த்தம். கிச்சன்ல கறையாகாது. தண்ணிச் செலவு கம்மியாத்தான் இருக்கும். அப்பா, அம்மாலாம் வந்து ரெண்டுநாலு நாள் தங்கமாட்டாங்க. முக்கியமா, கேக்கற அட்வான்ஸை தந்துருவாங்க. சொல்ற தேதில வாடகையைக் கொடுத்துருவாங்க.

அதனால, பேச்சிலர்ஸ்தான் இப்ப பெஸ்ட் சாய்ஸ்’ என்கிறார்கள் ஹவுஸ் ஓனர்கள் பலரும்!  

வருடந்தோறும்  வாடகை ஏற்றினாலும் கேள்வியே கேட்காமல் அப்படியே ஆகட்டும் என்று வரமளிப்பது போல் வாடகையை தந்துவிடுவார்கள்.

பட்ஜெட்டுக்குள் அடங்கவில்லையென்றாலும் பரவாயில்லை. கொஞ்சம் கூடக்குறைஞ்சு என்றாலும் பரவாயில்லை   என்ற மனநிலைக்கு இன்றைய மிடில்கிளாஸ் மக்கள் வந்துவிட்டார்கள். கிடைத்ததைக் கொண்டு திருப்தி அடையும் மனப்பாங்கோடு பல ஹவுஸ் ஓனர்களும்  இருக்கவே செய்கிறார்கள்.

ஆனாலும் பேச்சிலர்களுக்கான டூலெட் போர்டுகள் ஒருபுறமும்.. பந்தாக்களை அள்ளிவீசும் வீட்டு ஓனர்களும் தமிழகம் முழுக்க இருந்தாலும் எங்களைப் போன்று நீங்களும் கூடிய சீக்கிரம் வீட்டை வாங்கி விடுவீர்கள். அதுவரை இங்கேயே இருக்கலாம் என்னும் புதிய பந்தத்தை தரும் வீட்டு உரிமையாளர்களும் அன்புள்ளம் கொண்டவர்களாக இருக்கத்தான் செய்கிறார்கள்.

’டூலெட்’... ‘வீடு வாடகைக்கு’ விளம்பரங்களைப்   பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x