Last Updated : 07 Dec, 2023 02:24 PM

1  

Published : 07 Dec 2023 02:24 PM
Last Updated : 07 Dec 2023 02:24 PM

Bigg Boss 7 Analysis: புயலால் எலிமினேஷன் இல்லை... நிக்சனை காப்பாற்றும் முயற்சியா?

மிக்ஜாம் புயல் சென்னையை கபளீகரம் செய்துவிட்டதால் பெரும்பான்மையான மக்கள் வாக்களித்திருக்க முடியாது என்பதை காரணமாக வைத்து இந்த வார எலிமினேஷனை ரத்து செய்துள்ளது பிக்பாஸ் குழு. நாமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களில் வெளியே செல்வதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்த நிக்சனை காப்பாற்றவே இந்த முயற்சி என்ற குற்றச்சாட்டு பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது.

சென்ற எபிசோடில் கொடுக்கப்பட்ட பொம்மை டாஸ்க்கில் தனக்கு ஏற்பட்ட அவமதிப்புகள் குறித்து 66ஆம் நாளில் பேசிக் கொண்டிருந்தார் விசித்ரா. தன் மேல் இருந்த மொத்த வன்மத்தையும் கக்கிவிட்டதாக தினேஷிடம் அவர் முறையிட்டபோது, லைட்டை அர்ச்சனாவின் பக்கம் அப்படியே திருப்பிவிட்டார் தினேஷ். தினேஷ் சொல்லித்தான் தான் பேசினேன் என்பது போல விசித்ராவுக்கு ஆறுதல் கூறிய அவர், இந்த எபிசோடில் நானாகத்தான் விசித்ராவை அவமதிப்பது போல பேசினேன் என்று தன் வாயாலேயே ஒப்புக் கொண்டார். இது விசித்ராவிடம் அவர் ஆடிய டபுள் கேமை வெளிச்சம் போட்டுக் காட்டியது. பின்னர் அதனை என்னன்னவோ பேசி சமாளித்தார் அர்ச்சனா. முன்னால் ஒன்று பின்னால் ஒன்று பேசுவது குறித்து மற்றவர்களுக்கு பாடம் எடுக்கும் அர்ச்சனா, விசித்ரா விஷயத்தில் இவ்வாறு நடந்து கொண்டது ரசிக்கத்தக்கதாக இல்லை.

அடுத்து கொடுக்கப்பட்ட கல்லூரி டாஸ்க்கில் மாயா, அர்ச்சனா, தினேஷ், நிக்சன், விஷ்ணு ஆகியோருக்கு ஆசிரியர் கதாபாத்திரமும் மற்றவர்களுக்கு மாணவர்கள் கதாபாத்திரமும் கொடுக்கப்பட்டது. வழக்கமான போரிங் டாஸ்க்குகளுக்கு மத்தியில் இந்த டாஸ்க் ஓரளவு சுவாரஸ்யமாகவே சென்றது. கணக்கு டீச்சராக வந்த மாயா, தியரங்களுடன் பிக்பாஸ் வீட்டின் கதாபாத்திரங்களை ஒப்பிட்டு பாடமெடுத்ததை ரசிக்க முடிந்தது. இந்த சீசனில் நகைச்சுவை கேட்டகிரியில் அழைத்து வரப்பட்ட கூல் சுரேஷ், அதற்கான முயற்சியிலேயே ஈடுபடாமல் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த சீசனில் ஓரளவு நகைச்சுவை திறனுடன் இருப்பவர் மாயா மட்டுமே. குழு சேர்த்துக் கொண்டும், அடுத்தவரின் ஆட்டத்தை கெடுக்கும் வன்மத்தையும் விடுத்து, மீதமிருக்கும் நாட்களில் சரியாக ஆடினால் பார்வையாளர்களின் ஆதரவை மாயா பெறுவதற்கான வாய்ப்பு நிறைய உள்ளது.

மாயாவை தொடர்ந்து நல்லொழுக்க வகுப்பு ஆசிரியையாக வந்த அர்ச்சனா, பிக்பாஸ் வீட்டார் மீது, குறிப்பாக மாயா - பூர்ணிமா கூட்டணி மீது இருந்த மொத்த வன்மத்தையும் இறக்கினார். பாடம் எடுப்பது போல பிக்பாஸ் வீட்டாரின் நெகட்டிவ் அம்சங்களை ஒரு டீச்சராகவே மாறி புட்டுப் புட்டு வைத்தார். அர்ச்சனாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அடுத்து வந்த நிக்சன், தன் பங்குக்கு வன்மத்தை கக்கினார். கடைசியாக அவருக்கே சிறந்த பங்கேற்பாளருக்கான கோல்டன் ஸ்டார் கிடைத்தது. சிறந்த மாணவருக்கான ஸ்டார் ரவீனாவுக்கு.

நிக்சன் பேசியதன் தொடர்ச்சியாக, தான் விசித்ரா குறித்து என்ன மாற்றி மாற்றி பேசினேன் என்று பஞ்சாயத்தை தொடங்கினார் அர்ச்சனா. ஜெயிலுக்கு அனுப்பியபோது, உள்ளே ஒரு மாதிரியும், வார இறுதி எபிசோடில் கமல்ஹாசன் முன்பு வேறு மாதிரியும் அர்ச்சனா சொன்னதை ஒரு குறும்படம் போல அக்குவேறு ஆணிவேறாக எடுத்து வைத்தார் நிக்சன். சாட்சிக்கு அங்கே இருந்த தினேஷையும் கூப்பிட்டுக் கொண்டார். அர்ச்சனா - நிக்சன் இடையே நடந்த காரசார உரையாடலை அமைதியாக தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்தார் விசித்ரா.

இந்த விவாதத்தில் மிகுந்த ஆச்சர்யம் அளித்தது நிக்சன் தான். வழக்கமாக ஒரு பிரச்சினையில் கோபத்தில் வார்த்தைகளை விடும் நிக்சன், இந்த முறை மிக நிதானமாக தன்னுடைய வாதத்தை எடுத்துவைத்தார். ஆனால் அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாத விரக்தி அர்ச்சனாவிடம் நன்றாகவே தென்பட்டது. சரியான பதில் சொல்லமுடியாமல் கோபத்தை வெளிப்படுத்தினார். கேள்விகளுக்கு பதில் சொல்வதை விடுத்து ‘நீ பெரிய யோக்கியமா?’ என தொடர்ந்து எதிர்கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தது சிறுபிள்ளைத்தனமாக இருந்தது.

இந்த புயலின் இடையே, மிக்ஜாம் புயலின் தாக்குதலால் பெரும்பான்மை (?) மக்கள் வாக்களிக்க முடியாத காரணத்தால் இந்த வார எலிமினேஷன் ரத்து செய்யப்படுவதாக ஒரு புதிய குண்டை தூக்கிப் போட்டுள்ளது பிக்பாஸ் குழு. பிக்பாஸின் இந்த முடிவுக்கு, நிக்சன் - அர்ச்சனா இடையே கிளம்பியுள்ள இந்த புதிய பிரச்சினையும் கூட காரணமாக இருக்கலாம். தேடிவந்த அதிர்ஷ்டத்தை எதற்கு வீணாய் விரட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்கள் இந்த எலிமினேஷன் ரத்தை அறிவித்திருக்கலாம். காரணம், நாமினேஷன் பட்டியலில் இருப்பவர்களில், இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு நிக்சனுக்குத்தான் இருந்தது. தற்போது இந்த அறிவிப்பு, நிக்சனை காப்பாற்றுவதற்கு முயற்சியோ என்ற அங்கலாய்ப்புகளை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது. பின்னே, வீட்டில் இருக்கும் கன்டென்ட் தருபவர்களையும் அனுப்பிவிட்டால் நிகழ்ச்சி ஈயாடும் என்று பிக்பாஸ் நிர்வாகத்துக்கு தெரியாதா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x