Last Updated : 18 Nov, 2023 12:14 PM

 

Published : 18 Nov 2023 12:14 PM
Last Updated : 18 Nov 2023 12:14 PM

Bigg Boss 7 Analysis: மீண்டும் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்த விசித்ரா - அர்ச்சனா கூட்டணி

இந்த வாரம் முழுக்க சிறப்பாக செயல்படாத இருவரை தேர்வு செய்யுமாறு பிக்பாஸ் கூறியதும் ஓரிருவரை தவிர ஒட்டுமொத்த வீடும் விசித்ரா - அர்ச்சனாவை நோக்கி கைகாட்டியது. ‘உன்னைப் போல ஒருவன்’ டாஸ்க்கில் இருவரும் எதுவும் செய்யவில்லை என்பதே பெரும்பாலோர் கூறிய காரணம். வாரம் முழுக்க ஓரளவு மற்றவர்களிடம் இணக்கம் பேணி வந்த விசித்ரா - அர்ச்சனா கூட்டணி ஜெயிலுக்கு போகமாட்டோம் என்று மீண்டும் ‘ஆக்‌ஷன் மோட்’க்கு மாறியது.

48ஆம் நாள் எபிசோடின் தொடக்கத்தில், கடந்த வாரம் எவிக்ட செய்யப்பட்ட ஐஷு குறித்து விசித்ரா கூறியவற்றை நிக்சனிடம் ஹஸ்கி வாய்ஸில் பற்றவைத்துக் கொண்டிருந்தார் மாயா. இதனை நன்றாக மூளையில் ஏற்றிக் கொண்ட நிக்சன், மறுநாள் காலை ‘உன்னைப் போல ஒருவன்’ டாஸ்க் அனுபவங்களை பகிரும்போது, விசித்ராவை குத்திக் காட்டும் வகையில் குதர்க்கமாக பேசினார். ’விசித்ரா கெட்அப் போடும்போது உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவது சுலபமாக இருந்தது’ என்று நக்கல் தொனியில் பேசியதை விசித்ரா ரசிக்கவில்லை. அதே போல கூல் சுரேஷ் பாத்திரம் ஏற்ற விசித்ரா கூல் சுரேஷ் குறித்தும், அர்ச்சனா பாத்திரம் ஏற்ற கூல் சுரேஷ் அர்ச்சனா குறித்தும் பேசினர். இந்த உன்னைப் போல் ஒருவன் டாஸ்க்கில் ஆச்சர்யம் அளித்தது கூல் சுரேஷ் தான். ஆரம்ப நாட்களில் பாடி ஷேமிங் நகைச்சுவைக்காக கண்டிக்கப்பட்டவர், அதனை புரிந்து தற்போது அடைந்திருக்கும் மாற்றம் பாராட்டத்தக்கது. இந்த டாஸ்ஸ்கில், அருவருத்தக்க உடல்மொழியோ, நகைச்சுவையையோ அவர் வெளிப்படுத்தவொல்லை. டாஸ்க்கில் மட்டுமின்றி பொதுவாகவே அவர் தன்னுடைய செயல்பாடுகளை பெருமளவில் மாற்றிக் கொண்டுள்ளதை காணமுடிகிறது.

ஐஷு விவகாரத்தில் விசித்ராவின் மீதான நிக்சனின் அதிருப்தி வீட்டுக்குள்ளேயும் தொடர்ந்தது. முன்னாடி ஒன்னு பேசுறீங்க, பின்னாடி ஒன்னு பேசுறீங்க, யாரை பற்றியும் நல்லவிதமாக பேசி பார்த்ததில்லை என விசித்ரா மீது அடுக்கடுக்காக குற்றம்சாட்டினார் நிக்சன். விசித்ரா நாமினேட் செய்ததுதான் ஐஷுவின் வெளியேற்றத்துக்கு காரணம் என்று ஆணித்தரமாக வாதிட்டார். தன் மீதான தவறை இப்போதுவரை அவர் உணரவே இல்லை. இந்த வார டாஸ்க்குகளில் ஓரளவு நல்லமுறையில் விளையாடிய அவர், விசித்ராவுடன் தேவையற்ற வாக்குவாதத்தை முன்னெடுத்ததன் மூலம், தன் மீது ஒரு நெகட்டிவ் இமேஜை மீண்டும் அவரே உருவாக்குவதற்கான வாய்ப்பை கொடுக்கிறார் என்று தோன்றுகிறது. உள்ளே இருந்த நாற்பது நாட்களும் ஐஷு ஒன்றும் செய்யாமல் இருந்ததற்கு நீதான் காரணம் என்று நிக்சனின் அர்ச்சனா கூறியபோதும் கூட அவருக்கு உறைக்கவில்லை.

அடுத்து ’ஒரு கலர் சொல்லட்டா சார்’ என்ற ஒரு மொக்கையான டாஸ்க் கொடுக்கப்பட்டது. எல்கேஜி பிள்ளைகளுக்கு கூட இப்படி ஒரு டாஸ்க்கை கொடுப்பார்களா என்று தெரியவில்லை. இதையெல்லாம் யோசித்து ஒரு போட்டி என்று கொடுக்கிறார்கள். ஒரு ஐந்து நிறங்களை மனப்பாடம் செய்து கொண்டு எதிரே இருக்கும் போட்டியாளர்களிடம் மற்றொரு போட்டியாளர் சொல்ல வேண்டும். அவர் சொல்ல சொல்ல அந்த நிறங்களை சரியான வரிசையில் அடுக்க வேண்டும். இந்த போட்டிதான் சுவாரஸ்யம் என்றால், அதை விளையாடிய மணி, விஷ்ணு, பூர்ணிமா, விக்ரம், ரவீனா அதை விட சுவாரஸ்யம் இல்லாமல் விளையாடினார்கள். போட்டியின் முடிவில் தோற்பவர்கள் நேரடியாக நாமினேட் செய்யபடுவார்கள் என்று சொல்லியும் கூட ஒருவர் கூட தவறாக பதில் சொல்லவில்லை. போட்டி முடிந்து வெளியே வந்த பூர்ணிமாவிடம் இதே காரணத்தைச் சொல்லி டோஸ் விட்டார் மாயா.

வாரம் முழுக்க சிறப்பாக செயல்பட்ட போட்டியாளர்களாக தினேஷ், நிக்சன், கூல் சுரேஷ் மூவரையும் ஹவுஸ்மேட்ஸ் தேர்ந்தெடுத்தனர். இன்னொரு பக்கம், சிறப்பாக செயல்படாத இருவராக அர்ச்சனாவும் விசித்ராவும் பெரும்பாலான ஹவுஸ்மேட்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ’உன்னைப் போல ஒருவன்’ டாஸ்க்கில் விக்ரமின் கெட்-அப் போட்ட அர்ச்சனா சும்மாவே இருந்தார் என்பது ஹவுஸ்மேட்களின் குற்றச்சாட்டு. சட்டியில் இருந்தாதானே அகப்பையில் வரும் என்ற ரீதியில் எல்லாருக்கும் பதில் கொடுத்துக் கொண்டிருந்தார் அர்ச்சனா. அனைவரும் ஒட்டுமொத்தமாக சேர்ந்து தங்களை டார்கெட் செய்துவிட்டதாக விசித்ரா அர்ச்சனா இருவரும் வாதிட்டனர்.

அடுத்த வாரத்துக்கான கேப்டன்சி டாஸ்க்கில், சிறந்த போட்டியாளர்களாக தேர்வு செய்யப்பட்ட போட்டியாளர்களாக தினேஷ், நிக்சன், கூல் சுரேஷ் மூவரும் போட்டியிட்டனர். இதில் தினேஷ் வெற்றிபெற்ற மீண்டும் தலைவர் ஆனார். மோசமான போட்டியாளர் என்று தங்களை தேர்ந்தெடுத்த அனைவரும் இரண்டு முகம் கொண்டவர்கள். இதனால் தான் சிறைக்கு செல்ல விரும்பவில்லை என்று விசித்ராவிடம் கூறிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. அதற்கு ஏற்றபடியே சிறைக்கு செல்ல மாட்டோம் என்று பிக்பாஸின் உத்தரவையே எதிர்த்து இருவரும் வெளிநடப்பு செய்தனர். சில வாரங்களுக்கு முன்பு ஸ்மால் ஹவுஸிலிருந்து ரூல்ஸை மீறி வெளிநடப்பு செய்த விசித்ராவுக்கு வார்னிங் கொடுத்தார் கமல். ஆனால் இந்த முறை பிக்பாஸ் சொன்னாலும் கேட்கப் போவதில்லை என்று அர்ச்சனா - விசித்ரா இருவரும் விதிமீறலில் ஈடுபட்டதற்கு வார இறுதியில் கமல் என்ன சொல்லப் போகிறார் என்று பார்க்கலாம்.

முந்தைய அத்தியாயம்: நரி vs அமுல்பேபி... சீரியசாக மாறிய சீக்ரெட் டாஸ்க்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x