Last Updated : 25 May, 2023 04:20 PM

 

Published : 25 May 2023 04:20 PM
Last Updated : 25 May 2023 04:20 PM

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ மே 25 - 31 வரை

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் புதன், குரு, ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - தைரிய ஸ்தானத்தில் சுக்ரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 30-05-2023 அன்று சுக்ர பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும். தாயின் உடல்நலத்தில் சிறுசிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல் நலம்பெறும். வெகுகாலம் தீராத பிரச்சினைகள் மனதுக்கு சந்தோஷம் தரும் தீர்வைத் தரும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். ஆயுள் அபிவிருத்தி பெறுவதற்கான வகையில் இருக்கும். திருமண வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு உறவினர் சார்நத வகையில் சில தடைகள் வந்நது விலகும்.

உத்தியோகஸ்தர்கள் அரசு தனியார் துறைகளில் உள்ளவர்களும் இது வரை இருந்த ஆடம்பர செலவினங்களை தவிர்த்து தங்களின் குடும்பத்தினர் மகிழ்க்கிக்காக சுபமங்களச் செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். உங்களுக்கு தேவையான பொருளாதாரம் நிறைந்த வகையில் கிடைக்கும். தொழிலதிபர்கள் உணவுப்பொருள் உற்பத்தி செய்பவர்கள் நிறைவான விளைச்சல் காரணமாக புதிய சந்தை வசதிகளையும் அதிக பொருளாதார வரவுகளையும் பெறுவார்கள். ஆடம்ப பர்னிச்சர் பொருட்களை உற்பத்தியாளர்கள் ஊழியர்களின் மிகுந்த ஒத்துழைப்பை பெற்று உற்பத்தியிலும் விற்பனையிலும் தகுந்த மேன்மை பெறுவார்கள்.


பெண்களுக்கு கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொண்டு பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் தொழில் மேன்மை பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காக காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும். மாணவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சி பெறும் மாணவர்கள், காவல்துறை மற்றும் நாட்டின் பாதுகாப்புத்துறை பணிகளில் ஈடுபட்டு மேலும் பணிகளைச் செய்ய தகுதியான படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், தங்களது படிப்பினால் உயர்ந்த மதிப்பெண் பெற்று தகுதியான பணிகளைச் செய்யும் சிறந்த வாய்ப்புகளை பெறுவார்கள்.

பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், குரு, ராகு என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 30-05-2023 அன்று சுக்ர பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். நிலுவையில் இருந்த பணம் உங்களுக்கு திரும்ப கிடைக்கும். சமூக காரியங்களில் தலையிட்டு திறம்பட பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். அரசு சார்ந்த மற்றும் தனியார் வங்கிகளின் உதவிகளை பெற்று வீடு மற்றும் மனைகளை வசதிக்கேற்ப மாறுதல் செயவீர்கள். திருமணம் ஆனவர்களுக்கு புத்திரப்பேறு கிடைத்தாலும் வயது வந்த புத்திரர்கள் உள்ளவர்களுக்கு நல்உதவிகளும் கிடைக்கபெறும்.

உத்தியோகஸ்தர்கள் துறை சார்ந்த பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி உங்கள் செயலில் கனிவான தன்மை நிறைந்து இருக்கும். இதனால் நற்பெயர் பெறுவதுடன் ஊழியர்களின் எதிர்பாராத உதவிகளும் உங்கள் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும். வியாபாரிகள் பொருட்களை குத்தகை முறையில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். மின்சாரம் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்பவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவர். தொழிலில் ஏற்பட்ட நிலுவை கடன்கள் அடைவதற்கு வாய்ப்புகள் ஏற்படும்.

பெண்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். குழந்தைகளின் கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். இருப்பினும் உடல்நிலையில் கவனமுடன் இருக்க வேண்டி வரும். மாணவர்களுக்கு தங்கள் படிப்பில் தகுந்த கவனம் செலுத்தி முதல்தர மாணவராக தேர்ச்சி பெறுவார்கள். சக மாணவர்களின் பாடம் தொடர்பான சந்தேகங்களுக்கு உதவும் வழியில் செயல்படுவீர்கள்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும். மல்லிகை மலரை சாத்தி வழிபடவும்

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் புதன், குரு, ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 30-05-2023 அன்று சுக்ர பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் செயல்படாமல் முடங்கிக் கிடந்த திட்டங்கள் அனைத்தும் முழுமையான செயல்பட்டுக்கு வந்து விடும். உங்கள் செயல்பாட்டின் ஒவ்வொரு வெற்றிக்கும் உறவினர்கள், நண்பர்களின் உதவிக்கரம் முழுகாரணமாக இருச்கும். பொருளாதாரத்தில் தகுந்த உயர்வு உண்டாகும். குடும்பத்தில் கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் அனுகூல பயன்கள் உண்டாகும். தந்தை வழி உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு சிறிது பொறாமைப்படுவார்கள்.

உத்தியோகஸ்தர்கள், அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும். நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ள தேவையான பயிற்சி படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். தங்கநகைகளை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் தொழிலதிபர்கள், ரத்தினகற்கள் விற்பனையாளர்கள் புதிய வாடிக்கையாளர்களை நிரம்ப பெற்று நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள். பித்தளை எவர்சில்வர் அலுமினியம் போன்ற உலோகம் சார்ந்த வீட்டு உபயோகப் பொருட்களை விற்வனை செய்பவர்கள் வியாபாரத்தில் உயர்வு பெறுவார்கள்.

பெண்களுக்கு அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். திருமணம் ஆன பெண்கள் புத்திரதோஷம் அமைப்பிற்குள் வருவதால் உரிய முறையில் பரிகாரம் செய்து நிறைவான வகையில் சந்தான பாக்கியம் அடையலாம். மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்ப மாணவர்களும் ஆரம்ப நிலை மாணவர்களும் படிப்பில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர் வாங்கித்தருவர்.

பரிகாரம்: முடிந்த வரை புதன்கிழமையில் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் புதன், குரு, ராகு - லாப ஸ்தானத்தில் சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்ரன் என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 30-05-2023 அன்று சுக்ர பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் குடும்பத்தில் ஒற்றுமை கூடும். அரசாங்க அதிகாரிகளின் அனுகூலமான செயல்கள் உங்களுக்கு தேவையான சமயத்தில் கிடைக்கும். பூமி தொடர்பான விற்பனை தொழில் வாய்ப்புகளைப் பெற்றவர்கள் சுமாரான அளவில் லாபம் பெறுவார்கள். பெற்ற புகழுடன் புதிய புகழும் வந்து சேரும். ஆன்மீக எண்ணங்களில் மனம் ஈடுபாடு கொள்ளும். எதிரிகள் மறைந்திருந்து கெடுதல் செய்வார்கள். கவனமுடன் இருந்தால் வெற்றி பெறலாம்.

உத்தியோகஸ்தர்கள் அரசுத்துறைகளில் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் சிலரது குறுக்கீடுகளின் காரணமாக சோர்வு மனப்பான்மைக்கு ஆளாவார்கள். பின்னர் வரும் காலங்களில் தகுந்த ஆலோசனைகள் கிடைக்கப்பெற்று தங்கள் பணியில் சிறந்து விளங்குவார்கள். தொழில் ரீதியாக புதிய ஆலோசகர்கள் கிடைத்து தொழில் சிறக்க வழி காட்டுவார்கள். வாகனங்களில் செல்லும் பொழுது மிகுந்த கவனமுடன் செயல்படுவது நல்லது. உடல்நலத்தில் சிறிய பாதிப்பு வந்தாலும் சிகிக்சை எடுத்துக் கொள்வது நலனைத்தரும்.


பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் சிறிது மந்தநிலை காண்பார்கள். அரசிடம் கேட்டிருந்த கடனுதவிகள் மற்றும் வரவேண்டிய நிலுவைத்தொகைகள் எளிதாகக் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் இடைஞ்சல் செய்யும் நோக்குடன் சிலர் செயல்படுவார்கள். அவர்களை இனம்கண்டு மேலதிகாரிகளிடம் புகார் செய்து தகுந்த நிவாரணம் பெறுவீர்கள். மாணவமணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

பரிகாரம்: திங்கள்கிழமை அன்று அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்கு சென்று எழுமிச்சை தீபம் ஏற்றி வழிபடவும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் புதன், குரு, ராகு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன் - லாப ஸ்தானத்தில் சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 30-05-2023 அன்று சுக்ர பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் உங்களின் மனக்கவலைகள் மாறிவிடும். நல்லவர்களிள் உதவி உங்கள் மனதை மகிழ்விக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு பேச்சும் மற்றவர்களால் வேதவாக்காக ஏற்றுக்கொள்ளப்படும். ஆன்மீக உணர்வுடன் செய்த நற்செயல்கள் தகுந்த பலனைத்தரும். வீடு மனை வாகன வகைகள் புதியவை வாங்கவும் இருப்பவற்றை சீர்திருத்தம் செய்யவும் நல்வாய்ப்புகள் வந்து சேரும். புத்திரர்கள் வகையில் செலவுகள் அதிகரிக்கும். வழக்கு தொடர்பானவைகள் அனுகூலமாகும்.

அரசுத்துறை மற்றும் தனியார் துறைகளில் உள்ளவர்கள் தங்கள் பணியின் பொருட்டு பல்வேறு இடங்களுக்கு சென்று வர நேரலாம். ஒரு பலனும் இல்லையே என்று ஏங்கிய உங்களுக்கு மனதில் புதிய உற்சாகமும் பொருளாதார வரவுகள் எதிர்கால வாழ்க்கையை உயர்த்தும் வகையில் பலன்கள் நடக்கும். உங்கள் உத்தரவுக்கு கட்டுப்பட தயக்கம் காட்டிய ஊழியர்கள் கூட உங்கள் சொல்லை மதித்து நடக்கும் நிலைகள் உண்டாகும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். லாப விகிதங்களை கணக்கில் கொண்டு புதிய மூலதன்ததை தொழிலில் போடுவார்கள். சொகுசான ஆடம்பர பொருட்கள் விற்பனை செய்பவர்கள் தங்கள் தொழில் நல்ல முன்னேற்றம் அடைந்து மேன்மை பெறுவார்கள்.

பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளிளல் பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்திடமிருந்து தேவையான சலுகைகளைப் பெறுவார்கள். சேமிப்பு செய்து பணத்தை குடும்பத்தின் சுப செலவுகளுக்காக பயன்படுத்துவார்கள். குடும்ப நிர்வாகத்தில் உள்ள பெண்கள் தங்கள் உறவினர்களிடம் அன்புடன் நடந்து கொள்வதால் உறவினர்களின் பாசப்பிணைப்பு குடும்ப மேன்மைக்கு உதவிக்காரமானதாக இருக்கும். மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். கல்விச் செலவுக்கு தேவையான பொருளாதார தேவைகள் எளிதாகக் கிடைக்கும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - அஷ்டம ஸ்தானத்தில் புதன், குரு, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் சுக்ரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 30-05-2023 அன்று சுக்ர பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் வீண் செலவுகள் குறைந்து சுபகாரிய செலவுகள் நிகழும். இருப்பினும் அலைச்சலான சூழ்நிலைகள் உருவாகும். உங்கள் பேச்சும் செயலும் தெய்வாம்சம் பொருந்தியதாக இருக்கும். தைரியமான செயல்களைச் செய்து தகுந்த புகழை அடைவீர்கள். வீடு மனை வாகனம் ஆகியவற்றில் ஏற்படும் பராமரிப்பு செலவுகளை மனமுவந்து செய்வீர்கள். புத்திர வகை அனுகூலம் உண்டு.

அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ளவர்களு பல்வேறு விரயமான செலவுகள் வரலாம். அனைவரையும் அரவணைத்து வேலை வாங்கும் புதிய சிந்தனைகள் உருவாகும். எதிரிகள் கெடுதல் முயற்சிகளை செய்வதால் சிறு சிறு இறக்கங்கள் உருவாகும். வியாபாரிகள் எந்த வியாபாரம் செய்பவராக இருந்தாலும் அவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மனதில் நல்ல உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அறச்செயல்கள் செய்வதில் மனம் ஈடுபாடு கொள்ளும்.

பெண்களுக்கு குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்கள் கடந்த காலங்களில் ஏற்பட்ட விரையமான செலவுகளைப் பற்றி மனதில் எதுவும் எண்ணாமல் நற்பலன்கள் முழுதும் பெற ஆயத்தமாகுங்கள். ஆன்மிக எண்ணங்கள் வளர்ச்சி பெற்று புதிய சக்தியை உருவாக்கித்தரும். சமூகத்திலும் உறவினர்களிடமும் நற்புகழ் கிடைக்கும். மாணவர்கள் சிறப்பாக படிப்பர். விளையாட்டுகளில் சாகசம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பயிற்சி பெறும் மாணயவர்கள் புகழும் விருதும் பெறுவார்கள். மனம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும்

பரிகாரம்: புதன்கிழமை அன்று அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தா கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வரவும்


துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி - களத்திர ஸ்தானத்தில் புதன், குரு, ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 30-05-2023 அன்று சுக்ர பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் குடும்பத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. நீங்கள் பேசும் வார்த்தைகள் மற்றவர்களுக்கு அக்னியைப் போல சுடலாம். ஆனால் வார்த்தைகளில் வழிகாட்டும் ஒளி நிறைந்திருக்கும். நல்ல செய்கைகளினால் மட்டுமே புகழை தக்க வைக்க முடியும். வீடு மனை வாகன வகைகளில் திருப்தியான நடைமுறைகள் இருக்கும்.

உத்தியோகஸ்தர்கள் அரசு ஊழியர்கள் பொதுமக்களின் கண்டனத்திற்கு ஆளாகும் நிலைகள் உருவாகும். தனியார் ஊழியர்கள் தெய்வபலத்தை நம்புங்கள். பொருளாதாரம் சரளமாக கிடைக்கும். இருக்கும் புகழை தக்க வைக்க நேரம் சரியாக இருக்கும். வீடு மனை வாகனங்களில் நல்ல முன்னேற்றம் உண்டு. வியாபாரிகள் தங்கள் தொழிலில் மிகுந்த ஆர்வமுடன் செயல்பட்டு தகுந்த பொருளாதாரம் பெறுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கடந்த காலங்களில் ஆதாயமாய் கிடைத்த பொருளாதாரம் சுபமங்களச் செலவுகளை உருவாக்கித்தரும்.


பெண்களுக்கு அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் தங்கள் கைசேமிப்பை குடும்பச் சுபசெலவுகளுக்காக பயன்படுத்தும் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தெய்வ காரியங்களில் பங்கெடுக்கும் மார்க்கங்கள் நிரம்பவே உண்டு, மாணவர்கள் நல்ல முறையில் படித்து தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் எல்லா வகையிலும் உதவி புரிவார்கள். ஆயுள் பலம் பெறும். தந்தை மகன் உறவு சீராக இருக்கும். சுற்றுலா சென்றுவரும் வாய்ப்புகள் மனநிறைவைத் தரும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று குல தெய்வ பூஜை மற்றும் முன்னோர் வழிபாடு செய்யுங்கள்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், குரு, ராகு - களத்திர ஸ்தானத்தில் சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 30-05-2023 அன்று சுக்ர பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் நீங்கள் செய்கிற எல்லா செயல்களும் ஒன்றுக்கு பத்தாக லாபத்தை தரும். சாதனைகள் பல நிகழ்த்தி புகழ் பெறும் யோகம் உண்டாகும். வாழ்க்கைத்துணை வகையில் தகுந்த ஒத்துழைப்பும் கிடைக்கும். பொருளாதார நிலை உயர்வு தருவதாக அமையும். வீடு மனை வாகனம் தொடர்பான இனங்களில் அனுகூலமான நிகழ்வுகள் நடக்கும். திருமணவானவர்களுக்கு புத்திர பாக்கிய அனுகூலம் உண்டு.

அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்கள் கடந்த காலங்களில் இருந்த சிறப்பற்ற செயல்நிலைகள் மாறி மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையிலான பணிவாய்ப்புகளைப் பெறுவார்கள். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் உங்கள் நிலை மேன்மையை தரும். தொழிலதிபர்கள் சிறந்த முன்னேற்றம் காண்பார்கள். நல்ல வியாபார வாய்ப்புகள் பெற்று முன்னேற்றம் பெறுவார்கள். புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்று பொருளாதார முன்னேற்றம் அடைவர். வியாபாரத்திற்கு புதிய வாகனம் வாங்குவீர்கள். பொதுவாக அனைத்து தொழிலதிபர்களும் நல்ல நிலைக்கு வருவர்.

பெண்களுக்கு சக ஊழியர்களின் மறைமுக நெருக்கடிக்கு உள்ளாவார்கள். உங்கள் வார்த்தைகளுக்கு மதிப்பு குறைவாக இருக்கும். தைரியமான குணங்களுடன் பணி செய்வதால் மட்டுமே இருக்கும். வேலையில் இடர்களை எதிர்கொள்ள முடியும். தோழிகள் சந்திப்பு நிகழ்ச்சிகள் மன ஆறுதலைத் தரும். மாணவர்கள் படிப்பினில் சிறப்பான பலனைக் காணலாம். அதிக உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் படிப்பில் சாதனைகள் புரியலாம். உங்களின் கவனம் படிப்பை விட்டு சிதறாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனெனில் படிப்பில் இடையூறு வரலாம்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று அம்பாள் கோவிலுக்குச் சென்று காலையில் 3 முறை வலம் வரவும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய ஸ்தானத்தில் சனி - பஞ்சம ஸ்தானத்தில் புதன், குரு, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 30-05-2023 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பொருளாதார மேன்மையும் புகழும் நிறைவாக கிடைக்கும். புத்திரர்கள் தவறான பழக்க வழக்கம் உள்ள நபர்களுடன் சேர்த்து சிரமப்படும் வாய்ப்புகள் உள்ளதால் விழிப்புடன் செயல்படுவது நன்மை தரும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சிலரது குறுக்கீடுகளில் மனக்கசப்புகள் தோன்றி பின்னர் படிப்படியாக நிலைமை சீராகும்.

உத்தியோகஸ்தர்கள் இடம் மாற்றம் அல்லது துறைசார்ந்த அதிகாரிகளின் நெருக்குதல்கள் ஆகியவற்றுக்கு ஆளாகி புதிய அனுபவ பாடங்களைப் பெறுவார்கள். அரசு மற்றம் தனியார் வங்கிகளில் உயர் பதவி வகிப்பவர்கள் தங்கள் கீழ்பணிபுரியும் ஊழியர்களின் தன்னிச்சையான செயல்களால் மனவருத்தம் அடைவார்கள். தொழிலதிபர்கள் தங்கள் தொழிலில் சிறிது சுணக்கமான நிலை அடைவார்கள். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வார்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெற்று முன்னேறுவர். பொருளாதார வரவுகள் சமச்சீராக இருக்கும். நற்செயலுக்கேற்ப புகழ் கிடைக்கும். தொழில் துறையில் தகுந்த கவனம் செலுத்த வேண்டும்.

பெண்கள் முன்னேற்றம் காண்பர். வாழ்க்கைத் துணையுடன் இருந்து வந்த வீண் வாதங்களைத் தவிர்க்கவும். அடிக்கடி அவசியமில்லாமல் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். பெற்றோருக்கு உதவி செய்வதால் மிகுந்த நன்மைகள் உண்டாகும். குழந்தைகளிடம் அன்புடன் பழகுங்கள். மாணவர்கள் மிகுந்த ஆர்வமுடன் படித்து நல்ல தேர்ச்சியும் புகழும் பெறுவார்கள். தங்கள் திறமையை நன்கு வெளிப்படுத்தி பெயரும் புகழும் பெறுவார்கள். படிப்புக்கு தேவையான பெருளாதார வசதிகள் தாராளமாக கிடைக்கும்.

பரிகாரம்: ஞாயிறு, வியாழக்கிழமை அன்று சிவன் கோவிலை வலம் வரவும்


மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் புதன், குரு, ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 30-05-2023 அன்று சுக்ர பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் நன்மைகள் கிடைக்கக் கூடிய காலகட்டமாகும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். தாயின் உடல்நலத்தில் தகுந்த அக்கறை காட்ட வேண்டும். வழக்கு தொடர்பான விவகாரங்களில் உங்கள் மனம் விரும்பும் படியான வெற்றிகள் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பிற இடங்களுக்கு மாற்றலும் கிடைக்கும். உங்கள் மேல் இருக்கும் நம்பிக்கையும் உயரும். உங்களது கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேறும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்களுக்கு கடந்த காலங்களில் மனதில் இருந்த சஞ்சலங்கள் மாறி நம்பிக்கை ஒளிபிறக்கும். புதிய சந்தை வாய்ப்புகளைப் பெற்று சிறந்த முன்னேற்றம் காண்பர். மனிதாபிமான செயல்கள் அதிகம் செய்வதால் சமூசத்தில் அந்தஸ்தும் புகழும் ஏற்பட்டு கவுரவமான பதவிகள் கிடைக்கும்.


பெண்களுக்கு, நீண்ட நாட்களாக சந்தான பாக்கியம் இல்லாதவர்களுக்கு தெய்வ அனுகூலத்தில் குழந்தைகள் பிறக்கும். வாழ்க்கைத்துணை அன்புடன் இருப்பர். பிறமொழி பேசுபவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள். நீங்கள் பறிகொடுத்த பொருட்கள் மீண்டும் திரும்ப உங்களிடமே வந்து சேரும். மாணவர்கள் தொழில்நுட்பப் பயிற்சி மாணவர்கள் தங்கள் படிப்பில் தகுந்த அக்கறை செலுத்தி தேர்ச்சி பெறுவார்கள். நண்பர்கள் படிப்பு ரீதியிலும் குடும்ப ரீதியிலும் தகுந்த ஒத்துழைப்பு தருவார்கள். சமூக சேவைகளில் அதிக ஆர்வம் இருக்கும். எல்லோரும் நட்புடனே பழகுவர்.

பரிகாரம்: சனிக்கிழமை அனுமான் கோவிலை வலம் வரவும். வெற்றிலை மாலை கட்டி அனுமனுக்கு சூட்டவும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி - தைரிய ஸ்தானத்தில் புதன், குரு, ராகு - சுக ஸ்தானத்தில் சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 30-05-2023 அன்று சுக்ர பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வ புண்ணிய சொத்துக்களால் வருமானம் கிடைக்கும். எதிரிகளால் இருந்த தொந்தரவுகளை சமாளிக்க கடந்த காலங்களில் பணம் விரையமானது. அந்நிலை அடியோடு அழிந்து விட்டது. மேலும் நோய்களுக்கான சிகிக்சைக்கோ வீணான செயல்களுக்கோ கிரகநிலை இடம் தராது.

உத்தியோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்களின் வேலைகளை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகமாகும். உங்கள் வேலைகளுக்கு உரிய அங்கீகாரத்தை மேலதிகாரிகள் வழங்குவார்கள். தொழிலதிபர்கள் அடுக்குமாடி கட்டடங்களை கட்டி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் ஆதாயம் பெற்று முன்னேற்றம் அடைவார்கள் பணப்புழக்கம் தங்கு தடையின்றி இருக்கும். நிறுவனத்தின் புகழ் எட்டுத்திக்கும் பரவும்.

மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், தகவல் தொழிற்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகியோர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். விரும்பிய துறைகளை எடுத்து படிப்போருக்கு சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் அறிவுரைகளை உதாசீனப்படுத்தாமல் அதன்படி நடக்கவும். தடைபட்டிருந்த கல்வியைத் தொடர்வதற்கு ஏற்ற காலமிது.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று சிவன் கோவிலை வலம் வரவும். நவகிரகத்திற்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், குரு, ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன் - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 30-05-2023 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் சொல்லால் மகத்துவமும் செயலால் புகழ் கீர்த்தி ஆகியனவும் ஏற்படும். வீடு மனை வாகனம் ஆகியவற்றில் பணிகள் செய்வதற்கு முன் யோசித்து செய்யவும். உத்தியோகஸ்தர்களுக்கு, பெற்றோரின் மூலமாக வேலை கிடைக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களிடம் அனுசரனையாக செல்லவும். வீணான பிரச்சினைகளும் மனக்குழப்பங்களும் வேண்டாம். நீங்கள் செய்யும் உத்தியோகத்தில் சிறந்து விளங்குவீர்கள்.

பதவி உயர்வு, பணிஇடமாற்றம், சம்பள உயர்வு ஆகியவைகளைக் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு செய்து வரும் தொழிலில் சிறப்பான பலன்களைக் காணலாம். கடந்த காலத்தை விட கூடுதல் லாபம் கிடைத்தாலும் தொழிலை விரிவுபடுத்துவற்குண்டான வேலைகளை இப்போது ஆரம்பிக்கலாம். தொழில் நிமித்தமாக சிலர் தூர தேச பயணம் மேற்கொள்ள வேண்டி வரலாம்.

பெண்கள் உடல்நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். கணவரை விட்டுப் பிரிந்தவர்கள் கணவருடன் மீண்டும் சேர்வார்கள். உங்களின் கணவருக்கு உங்களால் அனுகூலம் உண்டாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். நீங்கள் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வாய்ப்புகள் கைகூடிவரும். மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். அதிக உழைப்பும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் இருந்தால் படிப்பில் சாதனைகள் புரியலாம். உங்களின் கவனம் படிப்பை விட்டு சிதறாமல் பார்த்துக் கொள்ளவும்.

பரிகாரம்: வியாழன் அன்று அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x