Published : 26 May 2022 12:09 PM
Last Updated : 26 May 2022 12:09 PM

மேஷம், ரிஷபம், மிதுன ராசி அன்பர்களே!  இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! மே 26 முதல் ஜூன் 1ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம்) - கிரக நிலை: ராசியில் புதன், ராகு, சுக்ரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் என கிரகநிலை உள்ளது. கிரக மாற்றம்: எதுவுமில்லை

பலன்கள்:
இந்த வாரம் லாபத்துடன் கூடிய காலகட்டம். ராசியாதிபதி செவ்வாய் லாபஸ்தானத்தில் மிக பலமாக இருக்கிறார். பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். சுதந்திர எண்ணம் உண்டாகும். சின்ன சின்ன விஷயங்களில் கூட மனநிறைவு ஏற்படும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். மேலிடம் உங்களிடம் நல்ல அணுகுமுறையை நீட்டிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினர் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகளுக்கு வீண் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்கள் சக மாணவர்களின் கருத்துகளுக்கு மாற்று கருத்துகளைக் கூறாமல் அனுசரித்துச் செல்வது சுமுகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். கல்வியில் முன்னேற்றம் காணப்படும்.
பரிகாரம்: செவ்வாய்க்கிழமை அன்று முருகனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்க எதிர்ப்புகள் விலகும். எல்லா நலன்களும் உண்டாகும்.
***************


ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) - கிரகநிலை: ராசியில் சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், ராகு, சுக்ரன் என கிரகநிலை உள்ளது. கிரக மாற்றம்: எதுவுமில்லை.

பலன்கள்:
இந்த வாரம் சுபநிகழ்ச்சிகள் அதிகமாக நடைபெறும். ராசிநாதன் சுக்கிரன் மறைந்திருந்தாலும் ஏனைய கிரகங்கள் அனைத்தும் அனுகூலமாக இருக்கிறது. திட்டமிட்டு செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக எதையும் செய்வது நல்லது. அதிக முயற்சிகள் செய்ய வேண்டி இருக்கும். பயணங்கள் ஏற்படலாம். குருவின் பார்வையால் அனைத்து தடைகளும் அகலும்.

தொழில், வியாபாரம் தொடர்பாக அலைச்சல் உண்டாகலாம். பணியாளர்கள் செயல்கள் உங்களுக்கு கோபத்தைத் தூண்டும்படியாக இருக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிச் சுமை காரணமாக அதிக நேரம் வேலை பார்க்க வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் மன நிறைவு ஏற்படும் வகையில் எல்லாம் நடக்கும். வாழ்க்கைத் துணையால் நன்மை உண்டாகும். குழந்தைகளுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர் வருகை இருக்கும். பெண்களுக்கு கடின முயற்சியின் பேரிலேயே காரியங்கள் பெற்றி பெறும். அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்திகள் வந்து சேரும். கலைத்துறையினர் படிப்படியான வளர்ச்சியைக் காண்பீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண அதிக முயற்சி செய்து பாடங்களைப் படிக்க வேண்டி இருக்கும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று குலதெய்வத்தை தீபம் ஏற்றி வணங்க பொருளாதாரச் சிக்கல் தீரும். பணவரத்து கூடும். மன மகிழ்ச்சி உண்டாகும்.
**********************

மிதுனம் (மிருகசிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்) - கிரகநிலை: பஞ்சம ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், குரு, சந்திரன் - லாப ஸ்தானத்தில் புதன், ராகு, சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூர்யன் என கிரகநிலை உள்ளது. கிரக மாற்றம்: எதுவுமில்லை.

பலன்கள்:
இந்த வாரம் உழைப்பு அதிகரிக்கும். ராசிநாதன் புதன் ஆறாமிடத்தில் மறைந்திருந்தாலும் குரு சாரம் பெற்றிருப்பது நல்ல பலன்களைத் தரும். குழப்பங்கள் நீங்கி மனதில் தெளிவு உண்டாகும். முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். தொழில் ஸ்தானத்தை அதன் அதிபதி குருவே பார்ப்பதால் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் உண்டாகலாம். உழைப்பு அதிகரிக்கும். அரசாங்க அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களின் வீண் பேச்சால் மனவருத்தம் உண்டாகலாம். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் பழகும்போது கவனம் தேவை. பெண்களுக்கு குழப்பங்கள் நீங்கள் மனதில் தெளிவு உண்டாகும். கலைத்துறையினருக்கு காரிய வெற்றிக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம். மாணவர்களுக்கு முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது.
பரிகாரம்: புதன்கிழமை அன்று பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வணங்குவது வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும்.
******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x