

அனுபவம் ஒருவனை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம்... ஆனால் அன்பு மட்டுமே ஒருவனை மனிதனாக மாற்றும் என்பதை உணர்ந்து செயல்படும் ரிஷப ராசிக்காரர்களே!
உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் இந்த பராபவ தமிழ் புத்தாண்டு பிறப்பதால் வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். புது எண்ணங்களால் வெற்றி பெறுவீர்கள். அரசாங்க பொறுப்பிருப்பவர்களின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கணவர்- மனைவிக்குள் பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உறவினர் மத்தியில் பெருமையடைவீர்கள்.
குரு பகவானால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 01.06.26 வரை குரு பகவான் 2ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் பேச்சில் முதிர்ச்சி தெரியும். குழந்தை பாக்கியம் உண்டாகும். வீடு கட்டும் பணி முழுமையடையும். 02.06.26 முதல் 31.10.26 வரை மற்றும் 25.01.27 முதல் 13.04.27 வரை குரு பகவான் குரு 3ம் வீட்டுக்கு செல்வதால் குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். அரசு காரியங்கள் முழுமையடையும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். 31.10.26 முதல் 25.01.27 வரை அதிசாரமாக குருபகவான் 4-ம் வீட்டுக்கு செல்வதால் தாயாருடன் மனஸ்தா பங்கள் வந்து போகும். வீண் விமர்சனங்கள் வேண்டாம்.
ராகு- கேதுவால் ஏற்படும் பலன்கள்: 14.04.26 முதல் 05.12.26 வரை ராகு 10-ம் வீட்டிலும், கேது 4ம் வீட்டிலும் தொடர்வதால் முக்கிய பொறுப்புகள் வந்து சேரும். வேலைப்பளு அதிகரிக்கும். தாய் வழி உறவினர்களால் மனக் கசப்புகள் அதிகரிக்கும். 05.12.26 முதல் 12.04.27 வரை ராகு 9ம் வீட்டுக்கும், கேது 3ம் வீட்டுக்கும் வருவதால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் தள்ளிப் போன சுப காரியங்கள் ஏற்பாடாகும்.
சனி பகவானால் ஏற்படும் பலன்கள்: உங்களின் லாப வீடான 11ம் வீட்டில் சனி பகவான் தொடர்வதால் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கடனை அடைக்கும் அளவுக்கு பணவரவு உண்டு. பாதியிலேயே நின்று போன கட்டிட வேலைகளை முழு மூச்சுடன் முடிப்பீர்கள். இல்லத்தரசிகளுக்கு பிள்ளைகளால் நிம்மதி கிட்டும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். பழைய சமையலறை சாதனங்களை மாற்றுவீர்கள். கணவருக்கு இருந்து வந்த ஒற்றைத் தலைவலி, வாயுக் கோளாறு நீங்கும்.
கன்னிப் பெண்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கசந்த காதல் இனிக்கும். பெற்றோரின் அறிவுரையை ஏற்பது நல்லது. மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் ஆர்வம் பிறக்கும். அலட்சியமாக இருந்தவர்கள் உற்சாகமாவார்கள். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. கடையை நவீன மயமாக்குவீர்கள். புது வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும். பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். இரும்பு, ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் லாபமடைவீர்கள்.
அனுபவம் மிகுந்த வேலையாட்களை பணியில் அமர்த்துவீர்கள். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறையாக செலுத்துவீர்கள். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் சின்னச் சின்ன கருத்து வேறுபாடுகள் வரும். கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப் போவது நல்லது. உத்தியோகத்தில் உங்களின் திறமையை கண்டு மேலதிகாரி பாராட்டுவார். வெகு நாட்களாக கேட்டும் கிடைக்காமல் இருந்த சலுகைகள், சம்பள உயர்வு இப்போது கிடைக்கும். சக ஊழியர்கள் மதிப்பார்கள்.
கணினி துறையில் இருப்பவர்களுக்கு பணிச் சுமை அதிகமானாலும் அதற்குத் தகுந்தாற்போல் சம்பள உயர்வும் உண்டு. கலைத் துறையினருக்கு இழந்த செல்வாக்கு மீண்டும் கிடைக்கும். புதுப் புது வாய்ப்புகள் தேடி வரும். மூத்த கலைஞர்களின் ஆதரவு உண்டு. இந்த புத்தாண்டு உங்களின் குறிக்கோள்களை நிறைவேற்றுவதாகவும் வசதி வாய்ப்புகளை தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: திருச்சியிலிருந்து 15 கி.மீ தொலைவில் அருள்பாலிக்கும் சமயபுரம் மாரியம்மனை அர்ச்சனை செய்து, எலுமிச்சை பழ தீபம் ஏற்றி வணங்குங்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.