Last Updated : 13 Apr, 2023 01:05 PM

 

Published : 13 Apr 2023 01:05 PM
Last Updated : 13 Apr 2023 01:05 PM

சோபகிருது தமிழ்ப் புத்தாண்டு பலன்கள் 2023 - மீனம் ராசியினருக்கு எப்படி?

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) பலன்கள்: உங்களுக்கு இந்த ஆண்டு வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவ போய் வீண் பிரச்சினையில் சிக்கி கொள்ளலாம். கவனமாக இருப்பது நல்லது. திடீர் கோபம் ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளும் உண்டாகும். ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். ரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரியத் தடைகளை சந்திப்பீர்கள். கவனம் தேவை. வீண் வாக்குவாதங்கள், அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை உண்டாகலாம். மனோதைரியம் அதிகரிக்கும். செலவுக்கு ஏற்ற வரவும் இருக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்களது பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. வாகனங்களால் செலவு ஏற்படும். தந்தையுடன் கருத்து வேற்றுமை வரலாம். சொத்துக்களை அடைவதில் தாமதம் ஏற்படும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியானநிலை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்யாவிட்டால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். லாபம் கிடைப்பது குறையலாம். சரக்குகளை விற்பதில் மிகவும் வேகம் காட்டுவீர்கள். தொழில், வியாபாரம் விரிவாக்கம் செய்வது தொடர்பாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி வரலாம். சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பின் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் பேசும்போது நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகளின் செயல்பாடுகளில் கவனம் தேவை. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும்.

பெண்களுக்கு மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கும் சந்திப்பு உண்டாகும். வீண் செலவும் ஏற்படலாம். கோபத்தை குறைப்பது நல்லது. நம்பிக்கையுடன் காரியங்களில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. விவசாயிகளுக்கு நீர்வரத்து நன்றாக இருக்கும். எனவே குறித்த காலத்தில் விதைத்து அறுவடை லாபத்தை அள்ளுங்கள். விளைபொருட்களின் விற்பனை மிகவும் நன்றாகவே இருக்கும். அதேசமயம் கால்நடைகளால் பலன்கள் உண்டாகாது. மாற்று பயிர்கள் மூலம் பொருளாதாரம் மேலோங்கும்.

கலைத்துறையினருக்கு வாகனங்களில் செல்லும் போதும் பயணங்களின் போதும் கூடுதல் கவனம் தேவை. நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை குறையும். எந்த ஒரு காரியமும் சாதகமாக முடியும். உங்களுக்கு இருந்த போட்டிகள் குறையும். புதிய வாய்ப்புகள் பெறுவதில் தடுமாற்றம் உண்டாகும். எந்த வேலையை முதலில் கவனிப்பது என்று குழப்பம் வரும். அரசியலில் உள்ளவர்களுக்கு எந்த இக்கட்டான சூழ்நிலையையும் மனஉறுதியுடன் சமாளித்து வெற்றி காண்பீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். பணவரத்து மனமகிழ்ச்சியை தரும். எதிர்பார்த்த இடங்களில் வெற்றியை அடைய முடியும். எடுத்தகாரியத்தை எளிதில் முடிக்கக் கூடிய சந்தர்ப்பம் வாய்க்கும்.

மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். அதே நேரத்தில் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். கல்வி தொடர்பான பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். சக மாணவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த ஆண்டு எப்போதும் ஒரே கருத்தை கொள்ளாமல் அவ்வப்போது எண்ணங்களும் கருத்துக்களும் மாறிக்கொண்டே இருக்கும். நீங்கள் எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள். தொழில் தொடர்பான விஷயங்களில் தீர ஆலோசித்து ஒரு முடிவுக்கு வருவீர்கள். பலராலும் செய்ய முடியாத காரியங்களை வெற்றிகரமாக முடிக்கும் நிலை வரலாம். பணவரத்து திருப்தி தரும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வாக்கு வன்மையால் எளிதாக தங்களது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்க பெறுவார்கள்.

உத்திரட்டாதி: இந்த ஆண்டு பிரச்சினைகளை பேசியே தீர்த்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு கூடுதல் பொறுப்பு கிடைக்க பெறுவார்கள். எதிலும் திட்டமிட்டு செயலாற்றுவதால் மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களால் கூடுதல் வருமானம் கிடைக்கும். முக்கிய நபர்களின் அறிமுகத்தால் நன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே சுமூகமான நிலை காணப்படும். பிள்ளைகளுக்காக கூடுதல் நேரம் செலவு செய்ய வேண்டி இருக்கும்.

ரேவதி: இந்த ஆண்டு சுறுசுறுப்பாகவும் அடுத்தவரை அடக்கி ஆளும் திறமையும் வெளிப்படும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கப்பூர்வமான யோசனைகள் தோன்றும். கடித போக்குவரத்து அனுகூலமான பலனை தரும். பயணம் லாபகரமாக இருக்கும். புதுவியாபாரம் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் முன்னேற்றம் காணப்படும். கடித போக்குவரத்து மூலம் தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சாமர்த்தியமாக வாடிக்கையாளர்களுடன் பேசி அவர்களை தக்க வைத்துக் கொள்வீர்கள்.

பரிகாரம்: வியாழன்தோறும் அருகிலிருக்கும் நவக்கிரக கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்யவும். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x