Published : 27 May 2021 12:59 PM
Last Updated : 27 May 2021 12:59 PM

உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 14; புட்லூர், புற்று, குரு, மஞ்சள்! 

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்

புனர்பூச நட்சத்திரம் பற்றி சென்ற வாரம் விரிவாகப் பார்த்தோம். இந்த வாரம் பூசம் நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாகவும் விரிவாகவும் காணலாம்.

பூசம்
பூச நட்சத்திரம் வான மண்டலத்தில் அம்புக்கூடு போலவும், பெரிய புற்று போலவும், பசுவின் மடி போன்ற தோற்றத்திலும் காணப்படும். பூசம் நட்சத்திரம் என்றால் ஒளி
பொருந்திய நட்சத்திரம் என்று பொருள். இது கடக ராசி மண்டலத்தில் முழுமையாக அமைத்திருக்கும் நட்சத்திரம். இதன் அதிபதி சனி கிரகம். ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு சனி திசையே முதல் திசையாக வரும். இதன் நட்சத்திர அதி தேவதை தட்சிணா மூர்த்தி பகவான்.

முருகவேலும் விந்தணுவும்

பூசம் என்பது கடகத்தில் இருக்கும் நட்சத்திரம். இதன் வடிவம் முருகவேல். அதுபோல ஆணிண் விந்தணு வடிவமும் வேலின் வடிவமும் ஒரே மாதிரியானவை. பூசத்தில்
புத்திரக்காரகன் குரு உச்சம், செவ்வாய் நீச்சம், சந்திரன் ஆட்சி. அங்கே செவ்வாய் நீச்சம் எனில் வீரியம் குறைவு என கருதுவதால், அதனை குரு உச்சமாகி செவ்வாய்க்கு
நீச்சபங்கம் தருகிறார். ஆகவே குழந்தை பாக்கியம் பெற முருகனுக்கு வேல் சாற்றி வழிபாடு செய்ய, புத்திரக்காரகனான குரு உச்சம் பெற்று, வீரிய காரகனான
செவ்வாய்க்கு நீச்சபங்கம் கொடுத்து, வீரிய குறைவுக்கான சரியான மருத்துவ சிகிச்சை கிடைக்க அருள் செய்வார்.

பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, விசாகம், அனுஷம், கேட்டை, பூசம், ஆயில்யம், புனர்பூசம் ஆகிய நட்சத்திர நபர்களுக்கு வேல் வழிபாடு அளப்பரிய நன்மை செய்யும்.

கந்தசஷ்டி தாரை - பூச நட்சத்திர வடிவ வேல் ரகசியம்

சஷ்டி என்றால் ஆறு என்று பொருள். அதாவது வளர்பிறை அல்லது தேய்பிறையில் இருந்து வரும் ஆறாவது நாள் என்று அர்த்தம். முருகனின் நட்சத்திரம் விசாகம். அதன்
சாதக தாரைகள் உத்திராடம், உத்திரம் மற்றும் கார்த்திகை. சாதக தாரை என்பது ஒருவருக்கு தோஷம் போக்கும் தாரை என்று விவரிக்கப்படுகிறது.

அதுபோல எதிரிகளை வெல்ல சாதகமான சூழலை உருவாக்கித் தருவதற்கும் சாதக தாரை உபயோகப்படும். விசாகத்தின் சாதக தாரை உத்திராடம். ஆகவே சூரபத்மனை
வெல்ல முருகப்பெருமான், சாதக தாரை வரும் நாளான சஷ்டியைத் தேர்ந்தெடுக்கிறார்.

மேலும், உத்திராடம் என்பது அபிஜித் நட்சத்திரத்தின் ஆரம்பப்பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. முருகவேல் மறுபிரதிபலிப்பாக அபிஜித் நட்சத்திரம் அமைந்திருப்பதை நாம் வானத்தில் காண முடியும். Vega என்று லத்தீன் மொழியில் அழைக்கப்படும் அபிஜித் நட்சத்திரம் முருகனின் வேலை கீழ்நோக்கி பிடித்தது போல காட்சியளிக்கும். இது சூரனை வதம் செய்யும் காட்சியை உருவகப்படுத்துகிறது.

அழிப்பதற்கரிதான அரக்கர்களை அழிக்க தெய்வங்கள் அபிஜித் முகூர்த்தத்தில் அபிஜித் வடிவான பிரம்மாஸ்திரத்தை உபயோகித்து இருப்பதை புராண இதிகாசங்களில்
காண முடியும். முருகக் கடவுள் கையில் இருக்கும் வேல் பிரம்மாஸ்திரத்தின் மறு பிரதிபலிப்பு. பிரம்மாஸ்திரம் பெரும்பாலும் அரக்கர்களை அழிப்பதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது

இருந்தாலும் முருகப் பெருமான் கையில் இருக்கும் வேல் எதிரிகளை அழிக்காமல், வேறு விதமான வடிவங்களுக்கு மாற்றி அமைக்கிறது. பூசம் என்பது முருக வேலின் வடிவம் கொண்டது. அங்கே குரு உச்சம் என்பதால் அரக்கர்களின் உயிரை எடுக்காமல் வேறு விதத்தில் மாற்றி அமைத்து அவர்களுக்கு புத்தி புகட்டுகிறது.

புட்லூர் பூங்காவனத்தம்மன் வழிபாடு

திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் புட்லூர் எனும் ஊரில் உள்ள பூங்காவனத்தம்மன் கோயில் பூச நட்சத்திர திருத்தலம் ஆகும். பூசத்தின் அதிதேவதை புத்திரக்காரகன் குரு. மேலும் குரு பூசத்திலேயே உச்சம் பெறுகிறார். எனவே புற்று என்பது பெண்ணின் கருப்பையைக் குறிக்கும். அதுபோல குருவின் வஸ்துவான மஞ்சளை புற்றைச்
சுற்றி அதிகம் தூவும் வழக்கம் இருக்கிறது.

இந்தத் திருத்தலத்தில் புற்று வடிவிலே வீற்றிருக்கிறாள் பூங்காவனத்தம்மன் அல்லது புன்னைவனத்தம்மன். இந்த அம்மன் வடிவம் கருத்தரித்த வயிற்றுடன் இருப்பதே பூச வடிவத்தைக் காட்டும். அதாவது கருத்தரித்த பெண்கள் பூச வடிவானவர்கள். இந்தக் கோயிலில் அம்மனின் பிரசாதமாக பக்தர்களுக்கு வளையல்கள் தருவது
சிறப்பம்சம். வளையல் என்பது பூச நட்சத்திர வடிவாகும்.

குழந்தை பாக்கியம் பெற மூன்று எலுமிச்சை பழங்கள் மட்டுமே எடுத்துக்கொண்டு இந்தக் கோயிலுக்கு சென்றால் புத்திர பாக்ய அருள் பெறலாம் என்பது ஐதீகம்.

இந்தக் கோயிலுக்கு புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்த பெண்கள் சென்று அம்மனை தரிசித்து வர புத்திர பிராப்தி பெறலாம். ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இந்தக் கோயிலுக்கு அடிக்கடி செல்வது திருமண பாக்கியம் தரும்.

உத்திராடம், கார்த்திகை, உத்திர நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இந்தக் கோயிலுக்கு அடிக்கடி செல்வதால் கருப்பைக் கோளாறுகள் நீங்கும்.

அவிட்டம், சித்திரை, மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் இந்தக் கோயிலுக்கு அடிக்கடி சென்று தரிசித்து வந்தால், மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

அடுத்து... ஆயில்யம் நட்சத்திரம் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பார்க்கலாம்!

- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x