Published : 16 Mar 2021 03:05 PM
Last Updated : 16 Mar 2021 03:05 PM

பிலவ வருடம் 2021 தமிழ்ப்புத்தாண்டு பலன்கள் ; ரிஷப ராசி அன்பர்களே! சொந்த வீடு; பதவி உயர்வு; திடீர் பண வரவு; ஆரோக்கியத்தில் கவனம்! 


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

ரிஷப ராசி வாசகர்களுக்கு இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

இந்த பிலவ ஆண்டு உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான பலன்களையெல்லாம் தர இருக்கிறது என்று பார்ப்போம்.

ராசி அதிபதி சுக்கிரன், மூன்றாம் அதிபதி சந்திரன், நான்காம் அதிபதி சூரியன் இந்த மூன்று கிரகங்களும் உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருக்கிறது. உங்கள் ராசியில் ராகு இருக்கிறார். இந்த கிரக பலம் மிகச்சிறந்த அற்புதமான பலன்களைத் தரும். சுபச்செலவுகள் ஏற்படும். முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும்.

ஒரு நிமிடத்தைக் கூட வீணாக்காமல் பம்பரமாய் சுழன்று, பரபரப்பாக இயங்கி காரியங்களில் வெற்றி அடைவீர்கள். எதிர்பாராத மிகப்பெரிய தொகை கிடைக்கும் சூழல் ஒரு சிலருக்கு உள்ளது. சிறந்த வாய்ப்புகள் தேடி வரும். பெரிய அளவில் திட்டமிட்ட கற்பனைக் கோட்டைகள் நிஜமாக மாறும் காலம் வந்துவிட்டது என்பதை நீங்கள் உணரப் போகும் ஆண்டாக இந்த பிலவ வருடம் இருக்கும்.

குடும்ப உறவுகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். சகோதர சகோதரிகள் இணக்கமாக இருப்பார்கள். தாய் தந்தையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அவர்களுடைய மருத்துவச் செலவு வெகுவாகக் குறையும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். திருமணமான தம்பதியருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். வீடு மாற்றம், வேலை தொடர்பான இடமாற்றம், போன்றவை ஏற்படும். சொந்த வீடு இல்லையே என்று ஏங்கித் தவித்த உங்களுக்கு இப்போது சொந்த வீடு அமையும்.

அரசு வேலை வாய்ப்புகள், தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் முதலானவை எதிர்பார்த்தவர்களுக்கு எதிர்பார்த்தபடியே கிடைக்கும். வெளிநாடுகளில் வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு எந்தத் தடையும் தாமதமும் இல்லாமல் மிக எளிதாக வேலைவாய்ப்பு கிடைக்கும். அயல்நாடுகளில் வசித்து வருபவர்களுக்கு குடியுரிமை தொடர்பான பிரச்சினைகள் முடிவுக்கு வந்து குடியுரிமை கிடைக்கும். பணி நிரந்தரம் இல்லாமல் தவித்தவர்களுக்கு இப்போது பணி நிரந்தரம் கிடைக்கும் சூழலும் அமையும்.

தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய பதவி உயர்வு கிடைக்கும். நிறுவனத்தின் சார்பில் வெளிநாடுகளுக்குச் சென்று வரும் வாய்ப்புகள் ஒருசிலருக்குக் கிடைக்கும். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம் கிடைக்கக்கூடிய ஆண்டாக இருக்கும்.
கட்டுமானத் தொழில், ரியல் எஸ்டேட் தொழில், பங்கு வர்த்தகத் தொழில் போன்ற தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமும் வளர்ச்சியும் கிடைக்கும். எதிர்பாராத ஒப்பந்தங்கள் தேடி வரும். அயல்நாட்டு நிறுவனங்கள் மிகப்பெரிய ஒப்பந்தங்களை உங்கள் நிறுவனத்திற்கு தரக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன.
டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட் போன்ற தொழில் துறையில் இருப்பவர்களுக்கு வருமானம் கூடும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உணவகத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் பல கிளைகளைத் தொடங்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். இதுவரை தொழில் அல்லது வியாபாரம் போன்ற விஷயங்களில் ஈடுபடாதவர்கள் கூட இப்போது தொழில் அல்லது வியாபாரம் தொடங்க சாத்தியக் கூறுகள் அதிகமாக உள்ளன.

பத்திரிகை மற்றும் ஊடகத் துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமான ஆண்டாக இந்த பிலவ ஆண்டு இருக்கப்போகிறது! மிகப் பெரிய சாதனைகளை செய்யப் போகிறீர்கள்! உங்களுடைய புகழ் வெளிச்சம் பரவும். மிகப் பெரிய பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். வருமானம் உயரும்.

கலைஞர்களுக்கு மிகச் சிறப்பான வாய்ப்புகள் தேடி வரும். மிகப்பெரிய நிறுவனங்களில் பணிபுரியும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும். உங்களுடைய படைப்புகள் மிகப் பரவலாக பேசப்படும், உரிய அங்கீகாரம் கிடைக்கும். இசை, நாட்டியம் முதலான கலைஞர்களுக்கு வருவாய்க்கு குறைவில்லாத அளவிற்கு வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். உங்களுடைய துறை சார்ந்த பயிற்சி வகுப்புகள் தொடங்கும் சூழலும் ஏற்படும்.

பெண்களுக்கு மிகச் சிறப்பான பலன்களை தரக்கூடிய ஆண்டாக இருக்கும். முயற்சிகள் அனைத்தும் முழுமையான வெற்றியைத் தரும். சுய தொழில் தொடங்கும் வாய்ப்பு பலருக்கும் கிடைக்கும். சுய தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு மேலும் தொழிலை விரிவுபடுத்தக் கூடிய அளவிற்கு புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வாய்ப்புகள் தேடிவரும்.
வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் மூலமாக தொழில் அல்லது வியாபார வாய்ப்புகள் கிடைக்கும். திருமண முயற்சிகள் கைகூடும். திருமணமான பெண்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். கடன் என்பதே இல்லாத நிலை உருவாகும்.
சொந்த வீடு வாங்குதல் ஆடை ஆபரணச் சேர்க்கை போன்றவை மிக எளிதாக நடக்கும். கணவன் வழி உறவினர்களிடம் ஏற்பட்ட ஒரு சில சங்கடங்களும் இப்போது முடிவுக்கு வந்து ஒற்றுமை பலப்படும். மூத்த சகோதரர் பக்கபலமாக இருப்பார். இளைய சகோதரர் தேவையான உதவிகளை செய்து தருவார்.
பூர்வீகச் சொத்து பாகப்பிரிவினைகள் உங்களுக்கான பங்கு எந்தச் சிக்கலும் இல்லாமல் எளிதாக வந்து சேரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். ஆனாலும் உணவு விஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது.

மாணவர்களுக்கு கல்வியில் நல்ல வளர்ச்சியும் முன்னேற்றமும் இருக்கும். அதேசமயம் கல்விக்காக பெற்றோரை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள் ஒரு சிலருக்கு ஏற்படலாம். உயர்கல்வி வாய்ப்பு மிக எளிதாகக் கிடைக்கும். தேர்வுகளில் மிகச் சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும். விரும்பிய கல்வி விரும்பியபடியே கிடைக்கும்.

பொதுவாக ரிஷப ராசியினருக்கு ஆரோக்கியத்தில் ஒருசில அச்சுறுத்தல்கள் அவ்வப்போது வந்து செல்லும். அறுவை சிகிச்சை வரை சென்று, ஆனாலும் அறுவைசிகிச்சை இல்லாமலேயே நலம் பெறக்கூடிய நிலை ஏற்படும். எனவே உணவு விஷயத்தில் கவனம் தேவை. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவர்கள் தங்களுடைய தொடர்ச்சியான மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்வதும் நல்லது. அதிகப்படியான வெயிலில் சுற்ற வேண்டாம். பித்த மயக்கம், உடலில் நீர்ச்சத்துக் குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. எனவே உடல்நலத்தில் சற்றுக் கவனமாக இருக்க வேண்டும்.

வணங்கவேண்டிய தெய்வம் - மதுரை மீனாட்சியம்மனை தொடர்ந்து வணங்கி வாருங்கள். அருகில் இருக்கக்கூடிய சிவாலயங்களில் அம்பாளை புதன்கிழமை அன்று வணங்குவது அதிகப்படியான நன்மைகளைத் தரும். ஆரோக்கிய பாதிப்புகளை குறைக்கும்.
*******************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x