Last Updated : 16 Apr, 2024 08:15 PM

 

Published : 16 Apr 2024 08:15 PM
Last Updated : 16 Apr 2024 08:15 PM

தனுசு ராசி - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 முழுமையாக

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) குரு பகவானை ராசிநாதனாகக் கொண்ட தனுசு ராசி அன்பர்களே! நீங்கள் பழமையான விஷயங்களில் அதிக நம்பிக்கை கொண்டவர்கள். கிரகநிலை: பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது தொழில் ஸ்தானம் - விரைய ஸ்தானம் - தனவாக்கு ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு: நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 18-ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும் - புதன்கிழமையும் - திருவோண நக்‌ஷத்ரமும் - சுப நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

தனுசு ராசியினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: குருப் பெயர்ச்சியில் குரு பகவான் உங்களின் தேகத்தை பொலிவடையச் செய்வார். இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் சூழ்ந்திருந்த பிரச்சினைகள் விலகி தெளிவு பிறக்கும். குறிக்கோளை சுலபமாக அடைவீர்கள். பணக்கஷ்டம் நீங்கும். பொதுக்காரியங்களில் உங்கள் நேரத்தை செலவிடுவீர்கள். தாய் வழி உறவினர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

வெளியூர் அல்லது வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேர்ந்து உங்களை மகிழ்ச்சிப்படுத்தும். சமுதாயத்தில் உயர்ந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பு உண்டாகும். போட்டியாளர்களின் சதிகளை தவிடுபொடியாக்கி விடுவீர்கள். அதேநேரம் அவ்வப்போது உடல் உபாதைகள் தோன்றி மறையும். குறிப்பாக வயிறு, தோல் சம்பந்தப்பட்ட உபாதைகள் உண்டாகலாம். அதனால் உடல் நலத்தில் கவனமாக இருக்கவும். மற்றபடி உங்கள் திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும்.

சட்டப் பிரச்னைகள் பெரிதாகாமல் பார்த்துக்கொள்வீர்கள். வம்பு, வழக்குகளை விட்டுக்கொடுத்து நடந்து கொண்டு முடித்துக்கொள்வீர்கள். உங்களைப் பற்றி வீண் புரளி சொல்பவர்களிடமிருந்து விலகி இருப்பீர்கள். உங்களின் நுண்ணிய அறிவால் புதிய ஆற்றலைப் பெறுவீர்கள். குடும்பத்தினருடன் விருந்து, கேளிக்கைகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். பொருளாதாரத்தில் சிறப்பான வளர்ச்சியை அடைவீர்கள். தனிப்பட்ட முறையிலும், கூட்டுத் தொழிலிலும் நல்ல நிலை ஏற்படும். உங்களின் தெய்வ நம்பிக்கை பலப்படும். பிறரைச் சார்ந்து செய்து வந்த காரியங்களை தனித்துச் செய்து பெருமையடைவீர்கள். போட்டியாளர்களை சமாளிப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தில் குதூகலம் நிறையும். உற்றார், உறவினர்களிடம் பக்குவமாக நடந்துகொண்டு அவர்களின் ஆதரவைத் தக்க வைத்துக்கொள்வீர்கள். உங்களின் செல்வாக்கு உயரும். வீட்டைப் பழுது பார்ப்பது போன்ற காரியங்களை செய்ய வேண்டாம். ஷேர் மார்க்கெட், ஸ்பெகுலேஷன் துறைகளில் அதிக வருமானத்தை எதிர்பார்க்க முடியாது. அவசியமில்லாத பயணங்களைத் தவிர்க்கவும். அதோடு முக்கிய முடிவுகளை உயர்ந்தோரின் ஆலோசனைகளைக் கேட்டு எடுக்கவும். உடல் ஆரோக்கியம், மனநலம் சீராக யோகா, பிராணாயாமம் போன்றவற்றைச் செய்வீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாவீர்கள். ஆனால் சக ஊழியர்களின் ஒத்துழைப்பினால் அனைத்து இடையூறுகளையும் தாண்டி வந்து விடுவீர்கள். சிலருக்கு அலுவலக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகலாம். மற்றபடி முயற்சி மேற்கொண்டால்தான் உங்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். வியாபாரிகள் புதிய முயற்சிகளை மேற்கொண்டு பலன் அடைவீர்கள். அதேநேரம் கூட்டாளிகளிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொள்ளவும். மற்றபடி கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். புதிய திட்டங்களை செயல்படுத்தி வாடிக்கையாளர்களின் கவனத்தைக் கவர்வீர்கள்.

அரசியல்வாதிகளுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். பயணங்களால் நன்மைகள் உண்டாகும். உங்களின் அனைத்து வேலைகளையும் சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். அதேநேரம் தொண்டர்கள் உங்களை சிறிது அலட்சியப்படுத்துவார்கள். எனவே அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும். கலைத்துறையினருக்கு அதிக முயற்சிகளுக்குப் பிறகே புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ரசிகர்களின் பாராமுகத்தால் வேதனை அடைவீர்கள். சக கலைஞர்கள் உங்களுக்கு உதவ மாட்டார்கள். எனவே அவர்களிடம் எந்தக் கோரிக்கையையும் எடுத்துச் செல்ல வேண்டாம். மற்றபடி பொறுப்புடனும், பொறுமையாகவும் நடந்துகொண்டு செயல்படவும்.

பெண்மணிகள் இந்த குரு பெயர்ச்சியால் கூடுதல் வருமானத்தைக் காண்பீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவரிடம் விட்டுக்கொடுத்து நடந்துகொண்டு அவரின் அன்பைப் பெறவும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடத்த வாய்ப்பு உண்டாகும். மாணவமணிகள் படிப்பில் முழுமையான கவனத்தைச் செலுத்தினால் நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். எனவே படிப்பைத் தவிர வேறு எதையும் நினைக்க வேண்டாம்.

மூலம்: இந்த குரு பெயர்ச்சியால் வியாபாரிகளுக்கு லாபம் உண்டாகும். பண விஷயங்களை கையாளுவதில் கவனம் தேவை. உடனிருப்பவர்களுடன் முக்கியமான விஷயத்தை பகிர்வதில் கவனம் தேவை. விற்பனையில் லாபத்தை ஈட்டுவீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெற்றொர்களின் சொல்படி நடப்பது நன்மை தரும். பொன்பொருள் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். எந்த ஒரு விஷயத்திலும் அவசரம் காட்ட வேண்டாம். நன்மை தீமைகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்பது அவசியம். காரிய அனுகூலம் உண்டாகும். காரிய தடைதாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும்.

பூராடம்: இந்த குரு பெயர்ச்சியால் மனம் மகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும். தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். குடும்பத்தில் இருப்பவர்களிடம் இருந்து மனம் நோகும்படியான வார்த்தைகள் வெளிப்படலாம். அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த குரு பெயர்ச்சியால் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. தெய்வ வழிபாடுகள் உங்களுக்கு வெற்றி உண்டாகும். பொறுப்புகள் வாய்ந்த பதவிகள் கிடைக்கும். மேலிடத்தின் உத்தரவுகளை கேட்டு நடந்தால் முன்னேற்றம் காணும் காலம். நண்பர்கள் அனுகூலம் கிடைக்கும். உங்களுக்குக் கீழ் வேலை செய்பவர்கள் உண்மையாக இருப்பார்கள். அதிக ஆர்வத்துடன் வேலை செய்வார்கள். முன்னேற்றம் காணப்படும். வியாபாரிகளுக்கு ஆர்டர்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். ஆனாலும் லாபம் ஏற்படும்.

பரிகாரம்: முருகனுக்கு தீபம் ஏற்றி வழிபடுவதும் கஷ்டங்களை போக்கி மனதில் நிம்மதியை தரும் | சிறப்பு பரிகாரம்: வியாழக்கிழமை தோறூம் தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக்கடலை மாலை சாத்தி வழிபடவும் | சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் சத்குருவே நம” என்ற மந்திரத்தை தினமும் 12 முறை சொல்லவும் | அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9 | அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், குரு | அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், வியாழன்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x