Last Updated : 16 Apr, 2024 07:08 PM

 

Published : 16 Apr 2024 07:08 PM
Last Updated : 16 Apr 2024 07:08 PM

துலாம் ராசி - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 முழுமையாக

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) சுக்கிரனை ராசிநாதனாகக் கொண்ட துலா ராசி அன்பர்களே! நீங்கள் தொழில் நுணுக்கம் தெரிந்தவர்கள். கிரகநிலை: சப்தம ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஆயுள் ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது விரைய ஸ்தானம் - தனவாக்கு ஸ்தானம் - சுக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு: நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 18-ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும் - புதன்கிழமையும் - திருவோண நக்‌ஷத்ரமும் - சுப நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

துலாம் ராசியினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: இந்த குரு பெயர்ச்சியில் சமூகத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். உங்களைத் தவறாகப் புரிந்துகொண்டிருந்த நண்பர்கள் மனம் மாறி மீண்டும் நட்புடன் பழகத் தொடங்குவார்கள். கடினமான காரியங்களையும் சுலபமாக செய்து முடிப்பீர்கள். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் குறித்த நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவார்கள். வசதி படைத்தவர்கள் உங்களின் நண்பர்கள் ஆவார்கள். உங்களின் எளிமையான பேச்சினால் அனைவரையும் கவர்வீர்கள். சமூகத்தில் உங்களின் பெயரும், புகழும் படிப்படியாக உயரும். சிலருக்கு வெளியூர், வெளிநாட்டிற்கு சென்று வசிக்கும் வாய்ப்புகளும் கிடைக்கும். புதிய சூழ்நிலைகளில் வாழ உங்களைத் தயார்படுத்திக்கொள்வீர்கள்.

தொழிலாளர்களுக்கு சலுகைகள் கிடைக்கும். வருமானம் உயரும். குலதெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சிலர் புதிய தொழில் தொடங்க முயற்சி செய்வார்கள். ஸ்பெகுலேஷன் துறைகளின் மூலம் உபரி வருமானம் உண்டாகும். இதனால் சேமிப்புகள் உயரும். வேலைகளில் சிறு தடுமாற்றங்கள் ஏற்படலாம். அதனால் பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்துகொள்ளவும். பெற்றோர் தக்க சமயத்தில் உதவுவார்கள். உங்களின் முக்கியமான வேலைகளை ரகசியமாக வைத்துக்கொள்வீர்கள். ஆனாலும் நண்பர்கள் உங்கள் மீதுள்ள பொறாமையினால் பகைமை பாராட்டுவார்கள். அதைப் பெரிதுபடுத்த வேண்டாம். தேவையில்லாத விஷயங்களை மனதில் போட்டுக் குழப்பிக்கொள்வீர்கள். பழைய வழக்குகள் முடிவதில் காலதாமதம் ஏற்படும். மற்றபடி உழைப்பிற்கேற்ற வருமானம் கிடைக்கும்.

உங்களின் செயல்களைத் திட்டமிட்டு சரியாகச் செய்து முடித்து விடுவீர்கள். தற்போது வசிக்கும் வீட்டை புதுப்பிப்பீர்கள். ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்து மகிழ்வீர்கள். புதியவற்றைக் கற்றுக்கொள்ளும் வாய்ப்புகளை தவறாமல் பயன்படுத்திக்கொள்வீர்கள். தெய்வ வழிபாடுகளில் மனம் ஈடுபடும். புதிய இடங்களில் உங்களுக்கு சிறப்பான வரவேற்புகள் கிடைக்கும். ஆடம்பர கேளிக்கைகளில் குடும்பத்தாருடன் பங்கேற்று மகிழ்வீர்கள். உங்களை நம்பி வந்தவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்வீர்கள். கொடுத்த வாக்கை எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். அனைத்துப் பிரச்சினைகளையும் நுட்பமாக ஆராய்ந்து தீர்க்கமாக முடிவெடுக்கும் காலகட்டம் இது.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் ஏற்பட்ட கெடுபிடிகள் குறையும். சக ஊழியர்கள் உங்களின் வேலைகளை தாமாகவே முன் வந்து பகிர்ந்துகொள்வார்கள். மேலதிகாரிகள் உங்களின் கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலிப்பார்கள். உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கூட்டாளிகள் உங்களிடம் நட்போடு பழகுவார்கள். புதிய சந்தைகளை நாடிச் சென்று வியாபாரத்தைப் பெருக்குவீர்கள். போட்டிகளை சாதூர்யமாக சமாளிப்பீர்கள். வாகனங்களுக்கு சிறிது பராமரிப்பு செலவு செய்ய நேரிடும்.

அரசியல்வாதிகளுக்கு கட்சியில் முக்கியப் பொறுப்புகள் கிடைக்கும். தொண்டர்களின் ஆதரவுடன் பதவியைத் தக்க வைத்துக் கொள்வீர்கள். முக்கியப் பிரச்சினைகளில் வாயைக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
கலைத்துறையினருக்கு அனுகூலமான திருப்பங்கள் ஏற்படும். பாராட்டும், பணமும் ஒருங்கே கிடைக்கும். சக கலைஞர்களின் மூலம் உங்களைப் புதிய வாய்ப்புகள் தேடி வரும். ரசிகர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சுமாராகவே இருக்கும். அதனால் நிதானத்துடன் செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மற்றபடி பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்களின் குடும்பம் நல்ல நிலையை அடையும். மாணவமணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். வெளிவிளையாட்டுகளில் ஆர்வத்தைக் குறைத்துக்கொண்டு முன்னேறவும். ஆசிரியர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியால் எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்க சிறிது கால தாமதம் ஆகலாம். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேலதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.

சுவாதி: இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். அக்கம் பக்கத்தினருடன் கவனமாக பழகுவது நல்லது. வீண் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்த்தல் நன்மை தரும். நற்பெயரும் கீர்த்தியும் வந்து சேரும். பொருளாதார வசதிகள் பெருகவும் வாய்ப்பான காலமிது. சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கவும் பாக்கியம் ஏற்படும்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியால் புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவற்றைப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றி பெற உழைக்க வேண்டும். பணவரவு உண்டாகும். எதிர்பார்த்த நற்செய்திகள் தேடி வரும். பதவி உயர்வு கிடைக்கும். தேவையில்லாத பேச்சுவார்த்தைகளைத் தவிர்ப்பது நல்லது. பதவி உயர்வால் மக்களுக்கு நன்மைகள் செய்து மனம் மகிழ்வீர்கள். பண விஷயங்களை கவனமாக கையாள்வது நன்மை தரும். விற்பனையின் போது கவனம் தேவை. சக ஊழியர்களுடன் பழகும் போது கவனம் தேவை. வேலைகள் எளிமையாக தோன்றும். விருந்து கேளிக்கைகளில் கலந்து கொள்வீர்கள். நிதானமாக செயல்படுவது நன்மை பயக்கும்.

பரிகாரம்: குலதெய்வத்தை தினமும் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும் | சிறப்பு பரிகாரம்: காக்கைக்கு தினமும் சாதம் வைத்து வரவும் | சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீமஹாலக்ஷ்மியை நம” என்ற மந்திரத்தை தினமும் 15 முறை சொல்லவும் | அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 7, 9 | அதிர்ஷ்ட ஹோரைகள்: சந்திரன், செவ்வாய், சுக்கிரன், குரு |
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, வடக்கு | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், செவ்வாய், வியாழன்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x