Last Updated : 16 Apr, 2024 05:59 PM

 

Published : 16 Apr 2024 05:59 PM
Last Updated : 16 Apr 2024 05:59 PM

சிம்மம் ராசி - குரு பெயர்ச்சி பலன்கள் 2024 - 2025 முழுமையாக

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) சூரியனை ராசிநாதனாகக் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே! நீங்கள் தன்மானம் அதிகம் கொண்டவர்கள். கிரகநிலை: பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். உங்களது தனவாக்கு ஸ்தானம் - சுக ஸ்தானம் - ரண ருண ரோக ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார்.

மேஷத்தில் இருந்து ரிஷபத்துக்கு: நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீகுரோதி வருஷம் உத்தராயணம் வஸந்த ரிது சித்திரை மாதம் 18-ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 01.05.2024 அன்றைய தினம் கிருஷ்ணபக்‌ஷ அஷ்டமியும் - புதன்கிழமையும் - திருவோண நக்‌ஷத்ரமும் - சுப நாமயோகமும் - பவ கரணமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 28.22-க்கு - மாலை 05.01-க்கு துலாம் லக்னத்தில் குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு மாறுகிறார்.

சிம்மம் ராசியினருக்கான குரு பெயர்ச்சி பலன்கள்: குரு பகவானால் முயற்சிகள் பல செய்து நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். குடும்பத்திலும் சிறு சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன் வாங்க நேரிடலாம். சகோதர, சகோதரி வகையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம். உங்களுக்குக்கீழ் பணிபுரிபவர்களும் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த நினைப்பார்கள். மற்றபடி மனதில் ஊக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு செயல்படுவீர்கள். கடினமாக முயற்சி செய்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள்.

குடும்பத்தில் பாகப்பிரிவினை சுமுகமாக நடக்கும். அசையாச் சொத்துக்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும். பல விஷயங்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குறைந்த உழைப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். அதேசமயம் புறம் பேசுபவர்களை இனம் கண்டு ஒதுக்கவும். குடும்பத்தில் ஏற்படும் சில அனாவசியப் பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் இருக்கவும். செய்தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நவீன பொருட்களை வாங்கி இல்லத்தை அலங்கரிப்பீர்கள். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவி செய்து பெருமையடைவீர்கள். மற்றபடி அலைச்சல் தரும் வேலைகளைக் குறைத்துக்கொள்ளவும். அனாவசியப் பயணங்களையும் தவிர்க்கவும்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரித்தாலும் உங்கள் வேலைகள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் பண வரவு உண்டாகும். அதேநேரம் சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு இந்த பெயர்ச்சியால் விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகும்.

வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். தொழில் ரீதியாக புதிய திருப்பங்கள் ஏற்படும். புதிய சந்தைகளை நாடிச் செல்லும்போது அதீத கவனத்துடன் செயல்பட்டு காரியமாற்றவும். கூட்டுத்தொழில் புரிவோர் சற்று உஷாராக இருப்பது நல்லது. சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயம் செய்து விற்றால் நல்ல வருமானத்தைப் பெற முடியும்.

அரசியல்வாதிகள் இந்த பெயர்ச்சியின் மூலம் பொதுச்சேவையில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள். கட்சி மேலிடத்தின் பாராட்டைப் பெறுவீர்கள். இதனால் உங்களுக்கு புதிய பதவிகள் கிடைக்கும். எதிரிகளும் உங்களிடம் அடங்கியே நடப்பார்கள். கலைத்துறையினரைத் தேடிப் புதிய ஒப்பந்தங்கள் வரும். ஆனாலும் ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். எனவே ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து அவர்களை உற்சாகப்படுத்தவும். தொழிலில் கவனமும், செயல்பாட்டில் நிதானமும் தேவை.

பெண்மணிகளுக்கு குழந்தைகளால் பெருமை உண்டாகும். அதேசமயம் கணவருடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். அதனால் பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்துகொள்ளவும். மற்றபடி பொருளாதார நிலையில் எந்தக் குறைவும் ஏற்படாது. எனவே ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். சிலர் முதல் தரம் வாங்குவார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள்.

மகம்: இந்த குரு பெயர்ச்சியால் குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். எதிலும் கவனமாக இருப்பது நல்லது. வெளியூர் பயணங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும். கவலை வேண்டாம். கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. கடிதப் போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். சுபகாரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். நீண்ட நாளைய ஆசை நிறைவேறும். மனதிற்கு பிடித்த காரியங்கள் நடக்கும். அனைவரிடமும் சந்தோஷமாகப் பழகுவீர்கள். மனநிம்மதி உண்டாகும்.

பூரம்: இந்த பெயர்ச்சியால் சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி. நல்ல அறிமுகம் கிடைக்கப் பெற்று முன்னேற்றம் உண்டு. கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ள வேண்டும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும். வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். வியாபாரப் போட்டிகள் சாதகமான முடிவினைத் தேடித் தரும். கவலை வேண்டாம்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த குரு பெயர்ச்சியால் உங்களின் புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும். குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் தீர்வதற்கு கவனம் செலுத்துவீர்கள். அடுத்தவர்களால் ஏற்படும் கெடுதல்கள் நீங்கும். மனதில் அமைதி பிறக்கும். உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்யுங்கள். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். தனலாபம் உண்டாகும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோவிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் வாழ்க்கையில் முன்னேற்றத்தை தரும். சமூகத்தில் அந்தஸ்து அதிகாரம் கிடைக்க பெறும் | சிறப்பு பரிகாரம்: வில்வ இலைகளை அருகிலிருக்கும் சிவனுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும் | சொல்ல வேண்டிய மந்திரம்: “ஓம் ஸ்ரீருத்ராய நம” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும் | அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9 | அதிர்ஷ்ட ஹோரைகள்: சூரியன், செவ்வாய், புதன், குரு | அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, தெற்கு | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய், புதன், வியாழன்

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x