Last Updated : 26 Oct, 2023 03:09 PM

 

Published : 26 Oct 2023 03:09 PM
Last Updated : 26 Oct 2023 03:09 PM

விருச்சிகம் ராசியினருக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள் | 30.10.2023 - 19.05.2025

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் சமமான மரியாதையை தரக் கூடிய நீங்கள் மற்றவர்களின் மனம் நோகாமல் பேசக் கூடியவர்கள். ஆழமாக யோசித்து, அதிரடியாகச் செயல்படும் நீங்கள், பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து உடனடித் தீர்வு காண்பதில் வல்லவர்கள்.

ராகுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து கொண்டு பணவரவையும், பிரபலங்களின் நட்பையும் ஒருபுறம் தந்தாலும் மறுபுறம் வீண் அலைச்சல், மன உளைச்சல், பகை, கடன் தொந்தரவு என்று கலங்கடிக்கவும் செய்த ராகுபகவான், இப்போது உங்கள் ராசிக்கு ஐந்தாம் வீட்டில் அடியெடுத்து வைப்பதால் குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் நீங்கி, குதூகலம் பிறக்கும். கணவன் - மனைவிக்குள் வெடித்த சண்டை விலகும். எதிலும் வெற்றி உண்டு. வீண் அலைச்சல், டென்ஷன், முன் கோபம் குறையும்.

குடும்ப வருமானத்தை உயர்த்த அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். மனைவிக்கு ஆபரணங்கள் வாங்கித் தருவீர்கள். குல தெய்வம் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளுக்கு நல்ல நட்புச்சூழலை உருவாக்கிக் கொடுங்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் வரும். அடிமனதிலிருந்த அச்சம் விலகும். குடும்ப பிரச்சினைகளை உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக அணுகுவது நல்லது. உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிவீர்கள்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 6.7.2024 வரை ராகுபகவான் செல்வதால் கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு நெஞ்சு வலி, கழுத்து வலி, சோர்வு என உடல்நலம் பாதிக்கும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தும் உட்கொள்ள வேண்டாம். சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 6.7.2024 முதல் 15.3.2025 வரை ராகு பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் அனுஷம் நட்சத்திரக்காரர்கள் புதிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. வழக்கில் அலட்சியம் வேண்டாம். ஆன்மிகப் பெரியவர்கள் உதவுவார்கள்.குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 15.3.2025 முதல் 19.5.2025 வரை ராகுபகவான் செல்வதால் குடும்பத்தில் நிம்மதி உண்டு.

பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகள் கூடி வரும். வியாபாரத்தில் அனுபவ அறிவால் சில மாற்றங்களை செய்வீர்கள். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். ஹோட்டல், இரும்பு, கமிஷன், எண்ணெய் வகைகளால் ஆதாயமடைவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரியுடனான மோதல் போக்கு நீங்கும். உங்களின் திறமைகளை வெளிப்படுத்து வீர்கள். வேலைச்சுமை குறையும். வெகுநாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு இப்போது கைக்கு வரும். கலைத்துறையினருக்கு நழுவிப்போன புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கேதுவின் பலன்கள்: இதுவரை உங்கள் ராசிக்கு பனிரெண்டாம் வீட்டில் அமர்ந்து ஆடம்பரச் செலவுகள், வீண் அலைச்சல், கடன் பிரச்சினைகளை ஏற்படுத்தி, தூக்கமில்லாமல் தவிக்க வைத்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு லாப வீடான பதினொன்றாம் வீட்டுக்கு வந்து அமர்வதால் லாட்டரி, ஷேர் மூலம் பணம் வரும். திடீர் யோகம், பணப்புழக்கம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 30.10.2023 முதல் 4.3.2024 வரை கேது பகவான் செல்வதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். அலைச்சல் வந்தாலும் நினைத்ததை முடிப்பீர்கள். சகோதர வகையில் சுபச் செலவுகள் உண்டு. சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 4.3.2024 முதல் 8.11.2024 வரை கேது செல்வதால் பணவரவு அதிகரிக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். ஷேர் மூலம் பணம் வரும். வேலை கிடைக்கும். வழக்கில் வெற்றி உண்டு.

சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 8.11.2024 முதல் 19.5.2025 வரை கேது செல்வதால் மதிப்பு உயரும். உங்களின் நிர்வாகத் திறமை கூடும். வழக்கு சாதகமாகும். திடீர் பணவரவு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். சொத்து சேரும். உத்தியோகத்தில் உயர்வு உண்டு. பெண்கள் இனி சேமிக்கத் தொடங்குவீர்கள்.

பிள்ளைகளின் பிடிவாத குணம் மாறும். கணவருடன் சுமுகமான நட்புறவு கிடைக்கும். சுபகாரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். வேலைக்குச் செல்லும் பெண்கள் உத்தியோகத்தில் சந்தித்த பிரச்சினைகள், வேலைப்பளு நீங்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். பெண்களுக்கு இது பொன்னான நேரம்தான். வியாபாரத்தில் அதிரடி லாபம் உண்டு. புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகத்தில் உங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து விடுபடுவீர்கள். மேலதிகாரி நேசக்கரம் நீட்டுவார். கணினி துறையிலிருப்பவர்களுக்கு வெளி நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் பிறக்கும். உயர்கல்விக்காக அயல்நாடு செல்ல வேண்டி வரும். ராகுவால் அவ்வப்போது நீங்கள் உணர்ச்சி வசப்பட்டாலும், கேதுவால் திடீர் அதிர்ஷ்டமும், சமூக அந்தஸ்தும் கிடைக்கும்.

பரிகாரம்: நாகராஜன் பூஜித்து பேறுபெற்ற நாகப்பட்டினத்துக்கு அருகே உள்ள நாகூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ நாகவல்லி
சமேத ஸ்ரீ நாகநாதரை வழிபடுங்கள். தொழு நோயாளிக்கு உதவுங்கள். தொட்டது துலங்கும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x