Published : 20 Aug 2019 11:10 AM
Last Updated : 20 Aug 2019 11:10 AM

ஆவணி மாத நட்சத்திர பலன்கள் -  (செப்டம்பர் 18ம் தேதி வரை) விசாகம் முதல்  உத்திராடம் வரை

ஜோதிடர் ஜெயம் சரவணன்


விசாகம் நட்சத்திரம்


பெருமளவு நன்மைகளும் குறைந்த அளவு சிரமங்களும் கொண்ட மாதம் இது.


வேலைக்குச் செல்வபவர்களுக்கு பெரிய பிரச்சினைகள் எதுவும் இருக்காது, அதேசமயம் பெரிய நன்மைகளும் இருக்காது. சுமூகமாக, சராசரியாக இருக்கும். தொழிலில் ஒரு சிலருக்கு பெரிய நன்மைகள் ஏற்படும். வழக்கு ஏதும் இருந்தால் இப்போது உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். நேர்மையாக இருந்தால் ஒரு பிரச்சினையும் வராது. மாறாக தர்மத்திற்கு விரோதமாக நடந்தால் அவமானங்களை சந்திக்க நேரிடும்.
தரகுத்தொழிலில் இருப்பவர்களுக்கு ஒரு சில நன்மைகள் உண்டாகும். வெளியூர் வெளிநாடு செல்லும் முயற்சி சாதகமாக இருக்கும்.பணவரவும் செலவும் ஒரே மாதிரி இருக்கும்.


பெண்களுக்கு - நிதானமாக இருந்தால் நிறைய சாதிக்கலாம். பிடிவாதமாக இருந்தால் பிரச்சினைகள் அதிகமாகுமே தவிர தீராது என்பதைப் புரிந்து கொஞ்சம் அமைதியாக இருப்பது நன்மை தரும்.


மாணவர்களுக்கு - கல்விதான் நம்மை உயர்த்தும் என்ற எண்ணத்தை மனதில் ஆழப்பதியுங்கள், கல்வியில் அதிக கவனம் செலுத்துங்கள். சின்னச்சின்ன சந்தோஷங்களில் திருப்தி அடைவதை மாற்றிக் கொள்ளுங்கள். கல்வியின் மூலமாக பெரியபெரிய சந்தோஷங்களை அடைய முற்படுங்கள்.


கலைஞர்களுக்கு - வாய்ப்புகள் பலவிதத்திலும் வரும். சரியாகத் தேர்ந்தெடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. நன்மைகள் அதிகம் நடக்கும் மாதம் இது.


பொதுப் பலன் : தொண்டை ,பின்கழுத்து, பற்கள் சம்பந்தமான பிரச்சினைகள் வரலாம். கவனம் தேவை.


வணங்க வேண்டிய தெய்வம் - ஶ்ரீவாராகி அம்மனை வணங்கி வாருங்கள். மனதில் தைரியம் பிறக்கும். எதிர்ப்புகளும் விலகும். காரியம் வெற்றி பெறும்.


சந்திராஷ்டம தினம்- ஆவணி - 8 (ஆகஸ்ட் 25)

********************************************************************

அனுஷம் நட்சத்திரம்


“சொல்வாக்கே செல்வாக்கு’’ என்பதை நீங்கள் உணரும் மாதம் இது.


இந்த ஆவணி மாதம், வாக்கு கொடுத்துவிட்டு அதை நிறைவேற்ற நீங்கள் படும்பாடு சொல்லி மாளாது, இதிலிருந்து எப்படி தப்பிப்பது? என்று யோசிப்பீர்கள். யாருக்கும் வாக்குறுதி தராமல் இருப்பதே நல்லது. இன்னும் சில மாதங்கள் இப்படியான நிலையே தொடர்கிறது. எனவே வாக்கில் கவனம் தேவை.


வேலை செய்யும் இடத்தில் உங்கள் கருத்துக்களை முதலில் வெளியிடாதீர்கள். அனைவரும் தங்கள் கருத்துக்களை சொல்லியபின் உங்கள் கருத்துக்களை வெளியிடுங்கள்.இல்லை என்றால் மொத்த வேலையையும் உங்கள் தலையில் கட்டி விடுவார்கள்.


சொந்தத் தொழில் செய்பவர்களுக்கும் இதே நிலைமைதான். எந்த வாக்குறுதியும் தராமல் இருப்பது தொழிலுக்கு நல்லது. காசோலை தரும்போது நினைவில் வைத்துக்கொண்டு தாருங்கள். பிறகு மறந்துவிட்டு பிரச்சினையில் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகும்.


பெண்களுக்கு - குழப்பமான மனநிலையிலிருந்து வெளியே வாருங்கள். தேவையில்லாத சிந்தனைகளில் மூழ்கி, குழப்பிக்கொள்ளாதீர்கள். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். இல்லையெனில் வீட்டில் மட்டுமல்ல பணிபுரியும் இடத்திலும் கூட, பல விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும்.


மாணவர்களுக்கு - அபார ஞாபக சக்தி இருக்கும். நல்ல நண்பர்கள், ஆசிரியர்கள் கிடைக்கப்பெறுவீர்கள். நன்றாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.


கலைஞர்களுக்கு - எது சிறந்த வாய்ப்பு என்ற குழப்பம் வரும்போது நண்பர்களிடம் ஆலோசனை கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு சரியானதை தேர்ந்தெடுத்துத் தருவார்கள்.நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.


பொதுப் பலன் : மனதில் தேவையற்ற குழப்பங்கள் வரும். ஒரு சிலருக்கு என்ன செய்வதென்று தெரியாமல் எதையோ பறிகொடுத்தது போல் இருப்பீர்கள். சிறுநீரக கல்அடைப்பு, தைராய்டு அறிகுறி தோன்றலாம். கவனமாக இருங்கள்.


வணங்க வேண்டிய தெய்வம் - சித்தர்கள் இருக்கின்ற பூமியான சதுரகிரி, திருவண்ணாமலை போன்ற இடங்களில் ஒருநாள் முழுவதையும் செலவிடுங்கள். மனம் தெளிவாகும்.இறையருளும் குருவருளும் கிடைக்கப் பெறுவீர்கள்.


சந்திராஷ்டம தினம்- ஆவணி 9 (ஆகஸ்ட் 26)

******************************************************************************

கேட்டை நட்சத்திரம்


செயல்கள் ஜெயிக்கும் மாதம் இது.


கற்பனையில் வாழ்ந்த வாழ்க்கை போதும். இப்போது அவை நனவாகும் நேரம். விடாமுயற்சி, உழைப்பு, கூடுதல் அக்கறை இருந்தால் போதும் எண்ணங்கள் எல்லாம் செயல்வடிவம் அடையும் மாதம். முகம் தெரியாத நபர்கள் கூட உதவ வருவார்கள்.


அரசு வேலை கிடைக்கும், அரசு மூலமாக ஆதாயம் அடையும் நேரம் வாய்ப்புக்களை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உத்தியோகத்தில் நல்ல சுமூகமான நிலை இருக்கும். ஒருசிலருக்கு பணியிட மாற்றம் ஏற்படும். பூர்வீகச் சொத்தில் பிரச்சினைகள் களைந்து உங்கள் பங்கு சரியாக கிடைக்கும்.


சொந்தத் தொழில் நல்ல ஆதாயத்தோடு இருக்கும். வங்கிக்கடன் கிடைக்கும். பேச்சில் நிதானம் தேவை. வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் வரும். வெளிநாட்டு குடியுரிமை இப்போது கிடைக்கும். விமானத்துறையினருக்கு வேறு நிறுவனங்களுக்கு சென்று சேர வாய்ப்பு உண்டாகும்.
சொத்து சம்பந்தமான பிரச்சினையை பேசித் தீர்க்க முயலுங்கள் இல்லை என்றால் வழக்கு வாய்தா என நீண்டுகொண்டே போகும்.சிக்கனமாக செலவு செய்ய கற்றுக்கொள்ளுங்கள்.


பெண்களுக்கு - குடும்பத்தினர் ஆதரவு பெருகும். உங்கள் கருத்துக்கு எல்லோரும் மதிப்பளிப்பார்கள். வீட்டு நிர்வாகம் உங்கள் கைக்கு வரும். வேலையில் நிம்மதியான போக்கு இருக்கும். பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களைக் கையாளும்போது கவனமாக இருங்கள்.


மாணவர்களுக்கு - சிறப்பான மாதம். கல்வியில் முழுக்கவனத்துடன் தொடர்ந்து ஈடுபடுங்கள். நல்ல எதிர்காலம் உண்டு.


கலைஞர்களுக்கு - நண்பர்களாலும் உறவினர்களாலும் நல்ல வழி கிடைக்கும். பண ஆதாயம் உண்டு. புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
பொதுப் பலன் : வாய்ப்புண், ஈறு, பற்களில் பிரச்சினைகள் வரும்.


வணங்க வேண்டிய தெய்வம் - சூரிய நாராயணர் வழிபாடு. சிவாவிஷ்ணு வழிபாடு நன்மைகள் அதிகரிக்க உதவும்.


சந்திராஷ்டம தினம்- ஆவணி 10 (ஆகஸ்ட் 27)

***********************************************************

மூலம் நட்சத்திரம்


உங்கள் கவலைகள் யாவும் காணாமல் போகும் மாதம் இது.


சரியாக செய்த காரியம்கூட கடைசி நேரத்தில் சறுக்கிவிடுகிறதே என்ற கவலை இருந்தது அல்லவா? இனி அந்தக் கவலைகள் எல்லாம் மறைந்து எண்ணியது எண்ணியபடியே இந்த மாதம் எல்லாம் கைகூடும்.


ஆனாலும் சற்று கவனத்தோடுதான் செயல்பட வேண்டும்.கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளிடம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். இது நண்பர்களுக்கும் பொருந்தும். நண்பர் கேட்கிறாரே என்று ஜாமின் தருவதும் அல்லது கடன் கொடுப்பதும் விரோத மனப்பான்மையை உண்டுபண்ணும்.


உத்தியோகத்தில் பிரச்சினை ஏதும் இருக்காது. மருந்துக் கடை வைத்திருப்பவர்கள், உரக்கடை, ரசாயன பொருட்கள் வியாபாரம், பட்டாசு வியாபாரிகளுக்கு இந்த மாதம் நல்ல வளர்ச்சியும் பண பரிவர்த்தனை அதிகரித்தலும் இருக்கும். விற்பனைப் பிரதிநிதி என்கிற அலைச்சல் மிகுந்த வேலை பார்ப்பவர்களுக்கு இந்த மாதம் இலக்குக்கு (டார்கெட்) மீறி ஆர்டர்கள் கிடைக்கும். காவல்துறையில் இருப்பவர்களுக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். விருது கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.


பூர்வீகச் சொத்துப் பங்கீடு சுமூகமாக நடக்க வாய்ப்பு உள்ளது. உங்களுக்கான பங்கை அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள், பிடிவாதம் பிடித்தால் இருப்பதையும் அனுபவிக்க முடியாமல் போகும்.


பெண்களுக்கு - சலிப்பும் அலுப்பும் அதிகமாக இருக்கும். அவற்றை உதறிவிட்டு இயல்பான நிலைக்கு மனதை மாற்றிக்கொள்ளுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தால்தான் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும் என்பதை உணருங்கள்.


மாணவர்களுக்கு - கடும் முயற்சிகள் தேவைப்படும். சோம்பலை கைவிட்டால் சாதிக்கலாம்.


கலைஞர்களுக்கு - நல்ல வாய்ப்புகள் வரும். அலட்சியமாக இருந்தால் வாய்ப்பு கைநழுவிப் போகவும் நேரிடலாம்.


பொதுப் பலன் : அசிடிடி எனும் வயிற்றுப் பொருமல் பிரச்சினை வரும். ஆசனவாயில் புண், மூல நோய் பாதிப்புகள், செரிமான பிரச்சினை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. சரியான மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.


வணங்க வேண்டிய தெய்வம் - அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்துதல், வடை மாலை அணிவித்தல், வெண்ணெய் சாற்றுதல் முதலானவை பெரும் நன்மைகளைத் தரும். எதிர்ப்புகளை இல்லாமல் போகச் செய்யும்.


சந்திராஷ்டம தினம் - ஆவணி 11 (ஆகஸ்ட் 28)

********************************************************************************

பூராடம் நட்சத்திரம்


உங்களின் பொருளாதாரம் மேம்படும் மாதம் இது.


“சுறுசுறுப்புக்குப் பஞ்சம் இல்லை ஆனால் பணத்தேவைதான் கொஞ்சம் இடிக்கிறது” என நீங்கள் மனதளவில் சோர்ந்து இருந்திருப்பீர்கள். இந்த மாதம் உங்கள் பணத்தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும்.


வேலை பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட தேவையில்லாத பிரச்சினைகள் முடிவுக்கு வரும். அதுவும் உங்களுக்கு சாதகமாக அமையும்.
தொழிலில் வளர்ச்சியும், பழைய பாக்கிகள் வசூலாகவும் வாய்ப்புகள் உண்டு. ஆனாலும் எதிலும் அகலக்கால் வைக்காதீர்கள். இருப்பதை இருப்பது போல் செய்து வாருங்கள்.தொழிலாளர்களின் ஒத்துழைப்பு குறைவாக இருக்கும். கொஞ்சம் கண்டிப்போடு வேலை வாங்குங்கள். அதேசமயம், கண்டிப்பு அதிகமானால் தொழிலாளர் எதிர்ப்பைச் சந்திக்கவேண்டி வரும். கண்டிப்பே இல்லாமல் போனால் நிலைமை இன்னும் மோசமாகும். எனவே அளவான கண்டிப்பும், அனுசரணையுடன் அரவணைத்துச் செல்வதும் தொழிலில் எந்த பிரச்சினையும் இல்லாமல் சுமூகமாகச் செல்லும்.


பெண்களுக்கு - ஆழ்ந்த அமைதியும் நிதானமும் மன நிம்மதி தரும். எல்லாவற்றுக்கும் கவலைப்படுவதால் எந்தத் தீர்வும் தராது என்பதை உணருங்கள். அன்றாடப் பணிகளை சரியாக செய்துவந்தாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும் என்பதைப் புரிந்து உணர்ந்து செயல்படுங்கள்.


மாணவர்களுக்கு - கவனச்சிதறல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அலட்சியமும் சோம்பலும் கல்வியை பாதிக்கும் என்பதை உணர்ந்து படியுங்கள். சிறந்து விளங்குவீர்கள். பாராட்டுகள் கிடைக்கும். .


கலைஞர்களுக்கு - எவரையும் எதையும் அலட்சியமாக நினைக்காதீர்கள். சிறு துரும்பும் சந்தர்ப்பத்தில் உதவும் என்பதை மனதில் கொள்ளுங்கள். நல்ல வாய்ப்புகள் வரும். அதை நழுவவிடாதீர்கள்.


பொதுப் பலன் : நிறைய பேருக்கு தலைமுடி அதிகமாக உதிர்தல், பொடுகுத் தொல்லை, தலைபாரம் போன்ற பிரச்சினைகள் இருக்கும். இந்த நிலை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை இருக்கும். எனவே அதிகமாக கவலைப்படுவதைத் தவிர்க்கவும். கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள்,பார்வை சம்பந்தப்பட்ட கண்ணாடி அணிய வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.


வணங்க வேண்டிய தெய்வம் - விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் சாற்றுதல், எருக்கம் பூ மாலை அணிவித்தல், ஏழு தேங்காய் கொண்டு மாலையாக அணிவித்தல் முதலானவை நல்ல பலன்களைக் கொடுக்கும். காஞ்சிபுரம் சித்ரகுப்தன் ஆலயம் சென்று தரிசிப்பது மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கும்.


சந்திராஷ்டம தினம்- ஆவணி 12 (ஆகஸ்ட் 29)

***************************************************

உத்திராடம் நட்சத்திரம்


உங்களுக்கு நாலாவித நன்மைகளும் கிடைக்கும் மாதம் இது.


இந்த மாதம் அதிர்ஷ்ட வாய்ப்புகளை எதிர்பார்க்கலாம். அதிர்ஷ்டம் என்றால் பணம் மட்டுமல்ல புகழ் வாய்ந்த நிறுவனத்தில் வேலை கிடைப்பது, எதிர்பாராத பதவி உயர்வு கிடைப்பது என்பதெல்லாம் நடக்கும்.


அயல்நாட்டில் வேலை கிடைக்கும். ஒருசிலர் அயல்நாட்டிலேயே தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் உண்டாகலாம். வெளிநாட்டு ஒப்பந்தங்கள் ஒருசிலருக்கு ஏற்படலாம். எதிரிகள் பலமிழப்பார்கள். எதிர்ப்புகள் காணாமல் போகும்.


வழக்கு சாதகமாகும், புதிய திறமைசாலிகளை சந்திக்கவும் அவர்களை உங்கள் தொழிலுக்கு பயன்படுத்தவும் வாய்ப்பு உண்டாகும். உங்கள் திறமையையும் மதித்து நல்ல நிறுவனங்கள் உங்களை சேர்த்துக் கொள்ளும்.


பங்கு வர்த்தகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். இன்சூரன்ஸ் போன்ற நிதிகள் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு. புதிய வாகனம் வாங்குதல், ஆடம்பர வாகனம் வாங்குதல் போன்றவையும் இந்த மாதம் நடைபெறும். சொந்த வீடு வாங்கவும், வீடு கட்டவும், விவசாய நிலம் வாங்கும் யோகமும் உண்டாகும்.


பெண்களுக்கு - பாகப்பிரிவினை மூலமாக சொத்து சேரும். வங்கிக் கடன் உதவியோடு வீடு வாங்கும் யோகம் உண்டு. வேலையில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும்.


மாணவர்களுக்கு - கல்வியில் புதிய உத்வேகம் உண்டாகும். உயர்கல்வியில் சேர்வதும், அந்நிய மொழி பயிலும் ஆர்வமும் உண்டாகும்.
கலைஞர்களுக்கு - நல்லநல்ல வாய்ப்புகள். கிடைக்கும். வெளிநாட்டிலிருந்து உதவிகள் கிடைக்கும்.


பொதுப் பலன் : எதிர்பாலினத்தவரிடம் (ஆணாக இருந்தால் பெண்களிடமும்,பெண்ணாக இருந்தால் ஆண்களிடமும்) பழகும்போது கவனம் தேவை. இல்லை என்றால் தேவையற்ற பிரச்சினைகள் வந்து சேரும்.

வணங்க வேண்டிய தெய்வம் : ஓர் திங்கட்கிழமை நாளில், திருமலை திருப்பதி சென்று வேங்கடவனை தரிசித்து வாருங்கள். வேண்டியது எல்லாம் கிடைக்கும். அதேபோல், அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று, துளசிமாலை சார்த்தி வேண்டிக்கொள்ளுங்கள். வீட்டின் தரித்திர நிலை விலகும். இல்லத்திலும் உள்ளத்திலும் ஒளி உண்டாகும்.


சந்திராஷ்டம தினம் - ஆவணி 13 (ஆகஸ்ட் 30)

**********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x