

தியாகராஜர் வாழ்ந்த அவரது இல்லத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்ட உஞ்ச விருத்தி திருமஞ்சன வீதி, தெற்கு வீதி வழியாக சந்நிதியை சென்றடைந்தது.
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 179-ம் ஆண்டு ஆராதனை விழாவின் நிறைவு நாளான இன்று ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளைப் பாடி இசையஞ்சலி செலுத்தினர்.
சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள், தியாகப் பிரம்மம் என்று போற்றப்படுகிறார். இவர், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரிக் கரையில் முக்தி அடைந்தார். இங்கு அவரது சமாதி அமைந்துள்ளது. ஆண்டுதோறும் திருவையாறில் காவிரிக்கரையில் தியாகராஜ சுவாமிகள் சமாதி எதிரில் ஆராதனை விழா நடைபெறுவது வழக்கம். இதன்படி, நடப்பாண்டு தியாகராஜ சுவாமிகளின் 179-வது ஆராதனை விழா கடந்த 3-ம் தேதி தொடங்கியது. விழாவை சென்னை நீதிமன்ற நீதியரசர் சுரேஷ்குமார் தொடக்கி வைத்தார்.
தொடர்ந்து, தினமும் காலை 9 மணி முதல் இரவு 10.20 மணி வரை இசைக் கலைஞர்களின் வாய்ப்பாட்டு, இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் நிறைவு நாளான இன்று அதிகாலை, தியாகராஜ சுவாமி சிலைக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து, தியாகராஜர் வாழ்ந்த அவரது இல்லத்தில் இருந்து மேளதாளங்கள் முழங்க உஞ்ச விருத்தி புறப்பட்டது. திருமஞ்சன வீதி, தெற்கு வீதி வழியாக சந்நிதியை சென்றடைந்தது.
பின்னர் காலை 8.30 மணி முதல் 9 மணி வரை நாகசுரம் நிகழ்ச்சி நடைபெற்றது. 9 மணியளவில் பிரபஞ்சம் பாலசந்திரனின் புல்லாங்குழல் இசையுடன் பஞ்சரத்ன கீர்த்தனை தொடங்கியது.
இதில், பிரபல இசைக் கலைஞர்கள் சீர்காழி சிவசிதம்பரம், சுதா ரகுநாதன், மஹதி, ஓ.எஸ்.அருண், கடலூர் ஜனனி, அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ். உட்பட ஆயிரத்துக்கும் அதிகமான இசைக் கலைஞர்கள், இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஒருமித்த குரலில் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். அப்போது, ஸ்ரீதியாகராஜ சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து, சுசித்ரா குழுவினரின் ஹரி கதை, தாமல் ராமகிருஷ்ணனின் உபன்யாசம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவு தியாகராஜ சுவாமிகள் வீதியுலாவும், இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழாவையொட்டி, தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.