

சென்னை: மியூசிக் அகாடமி, ஒவ்வோர் ஆண்டும், வாக்கேயக்காரர்கள், மகா வித்வான்கள், இசை வல்லுநர்கள், இசை ஆசிரியர்களை சிறப்பிக்கும்விதமாக இசைவிழாவை நடத்தி வருகிறது, இந்த ஆண்டு வாக்கேயக்காரர் முத்துசுவாமி தீட்சிதரின் 250-வது ஜெயந்தியாக அமைந்துள்ளதால், அவரை கௌரவிக்கும் விதமாக 99-வது இசைவிழா நடைபெற்று வருகிறது.
இதில், விதூஷி சுதா ரகுநாதனின் கச்சேரி நடைபெற்றது. அவருக்கு பக்கபலமாக எம்பார் எஸ்.கண்ணன் (வயலின்), சுமேஷ் நாராயணன் (மிருதங்கம்), கிருஷ்ணா ஸ்ரீராம் (கடம்) இருந்தனர். ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் கமாஸ் ராக தரு வர்ணத்துடன் கச்சேரியைத் தொடங்கினார் சுதா ரகுநாதன்.
அடுத்ததாக மைசூர் வாசுதேவாச்சாரியாரின் கௌளை ராக க்ருதியை (பிரணமாம்யகம் கௌரிசுதம்) பாடினார். பிறகு அதிகமாக கேட்டிராத தியாகராஜ சுவாமியின் முகாரி ராகக் கீர்த்தனையை (தலசி நந்தனே) பாடியதும் கச்சேரி சூடு பிடிக்கத் தொடங்கியது. பின்னர் சாரங்கா ராகத்தில் சிறிய ஆலாபனை செய்துவிட்டு, முத்துசுவாமி தீட்சிதரின் ‘சாரங்கராகப்ரியே’ எனத் தொடங்கும் க்ருதியைப் பாடினார்.
‘சாரஸ பதயுகளே தத்-த்வம் பத அர்த யுகளே’ என்ற வரிக்கு ஸ்வரக் கோர்வைகளைப் பாடினார். இந்த க்ருதியில் மகாவிஷ்ணுவின் சகோதரியாகவும், மகிஷனை அழித்தவளாகவும், பரமாத்மா – ஜீவாத்மா இரண்டுமாக இருப்பவளாகவும் பார்வதி தேவி போற்றப்படுகிறாள். அடுத்ததாக பாபநாசம் சிவனின் மலயமாருத ராக பாடலை (கற்பக மனோஹரா) பாடினார்.
பிரதான ராகமாக சங்கராபரணம் அமைந்தது. விஸ்தாரமான ஆலாபனையில் மேல் ஸ்தாயி, கீழ் ஸ்தாயிகளில் பாடும்போது ராகத்தின் செழுமை கூடியது. சற்றே கரஹரப்ரியாவை (சங்கராபரணத்தில் ரி-நி) கோடிட்டுக் காட்டிவிட்டு, கிரஹபேத ராகங்களாக கல்யாணியும், யமன் கல்யாணியும் அமைந்தன.
பின்னர் முத்துசுவாமி தீட்சிதரின், ‘சதாசிவம் உபாஸ்மஹே’ எனத் தொடங்கும் க்ருதியைப் பாடினார். ‘புராண புருஷம் புராந்தகம் சங்கராபரண பாசமான தேஹம்’ என்ற வரியில் நிரவல் செய்து, ஸ்வரக் கோர்வைகளைப் பாடினார். தனி ஆவர்த்தனத்தில் சுமேஷ் நாராயணன், கிருஷ்ணா ஸ்ரீராம் தங்கள் மிருதுவான கோர்வைகளால் கச்சேரிக்கு அழகு சேர்த்தனர். ஸ்ரீவரத கோபால விட்டலதாசர் தேவர்நாமாவை (குனிகுனியோ கிருஷ்ணா) பாடிய பிறகு ராகம் தானம் பல்லவிக்குச் சென்றார் சுதா.
சுத்தசாவேரி ராகத்தில், திஸ்ர ஜாதி அட தாளத்தில் அமைந்த பல்லவியை (ஸ்ரீதர முரளி சுஷிமணி கமலபதா பரமபுருஷா சனாதனா முராரி) பாடினார். ராகமாலிகை ஸ்வரங்களாக நளினகாந்தி, சுநாதவிநோதினி (இடையே நிஷாதத்தில் ஸ்வரபேதம் - ரேவதி சாயல்), மத்யமாவதி அமைந்தன.
பாடகரை நிழல் போல் தொடர்ந்து வந்த எம்பார் கண்ணன் பிரதான ராகம், தேவர்நாமாவின் சிட்டைஸ்வரம், ராகம் தானம் பல்லவியில் முத்திரை பதித்தார். சாய்பஜன் (மன்கி ஆன்கேன் கோலோ), அம்புஜம் கிருஷ்ணாவின் ‘கண்ணனிடம் எடுத்து சொல்லடி’ என்ற ராகமாலிகை (செஞ்சுருட்டி, புன்னாகவராளி, நாதநாமக்ரியா) பாடல் ஆகியவற்றுடன் கச்சேரியை நிறைவு செய்தார் சுதா ரகுநாதன்.
தனது தாய் சூடாமணி, வித்வான் பி.வி.லட்சுமணன், விதூஷி எம்.எல்.வசந்தகுமாரி ஆகியோரிடம் இசை பயின்ற சுதா, தற்போது பிரபல கர்னாடக இசைக் கலைஞராக உள்ளார். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் கச்சேரிகள் செய்து வருகிறார். மேலும் பல மாணவர்களுக்கு இசை பயிற்றுவிக்கிறார்.