

அர்ச்சனா, ஆர்த்தி சகோதரிகள்.
சென்னை: சென்னை மியூசிக் அகாடமி இசைக் கலைஞர்களுக்கு மட்டு மல்லாது இசை ஆசிரியர்களுக்கும், இசை அறிஞர்களுக்கும் விருதுகள் வழங்கி கௌரவித்து வருகிறது. ஒவ்வொருவருக்கும் உரிய அங்கீகாரம் வழங்குவதில் மியூசிக் அகாடமி ஒருநாளும் தவறுவதில்லை.
சென்னை மியூசிக் அகாடமியின் 99-வது இசைவிழாவில் அர்ச்சனா - ஆர்த்தி இரட்டையரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இவர்களுக்கு பக்கபலமாக நாகர்கோவில் கே.ஆனந்த் (வயலின்), டி.நிக் ஷித் (மிருதங்கம்), குறிச்சிதானம் அனந்தகிருஷ்ணன் (கடம்) இருந்தனர்.
அர்ச்சனா - ஆர்த்தி சகோதரிகள், ‘நாதசுதா ரஸம் பிலனு’ எனத் தொடங்கும் ஆரபி ராக தியாகராஜ சுவாமி கீர்த்தனையுடன், கச்சேரியைத் தொடங்கினர். அடுத்ததாக தன்யாசி ராகத்தில் சிறிய ஆலாபனை தொடர்ந்தது. சியாமா சாஸ்திரியின் மிகப் பிரபலமான, ‘மீனலோசன’ சாஹித்யத்தை, சகோதரிகள் பாடினர்.
‘காமபாலினி பவானி சந்திரகலாதரி நீ’ என்ற வரியில் நிரவல் செய்து, ஸ்வரக் கோர்வைகளைப் பாடினர். இந்த சாஹித்யத்தில், ‘மீன் போன்ற கண்களை உடையவளான பார்வதி தேவியே.. இசையை விரும்புபவளே, அனைவரிடத்தும் தாயைப் போன்று கருணை காட்டுபவளே. என்னை காப்பதற்கு ஏன் தயங்குகிறாய்?’ என்று சியாமா சாஸ்திரி வேண்டுகிறார்.
பின்னர் ஹமீர் கல்யாணி ராகத்தில் அமைந்த சுப்பராய சாஸ்திரியின் ‘வேங்கடசைல விஹார’ பாடல், மனோரஞ்சனி ராகத்தில் அமைந்த தியாகராஜ சுவாமியின் கீர்த்தனை (அடுகாராதனி) ஆகியவற்றைப் பாடினர். பிரதான ராகமாக காம்போஜி அமைந்தது. விஸ்தாரமான ஆலாபனைக்குப் பின் முத்துசுவாமி தீட்சிதரின் ‘ சுப்ரமண்யாய நமஸ்தே’ க்ருதியைப் பாடினர்.
‘தீராய நத விதாத்ரே தேவ ராஜ ஜாமாத்ரே’ என்ற வரியில் நிரவல் செய்து ஸ்வரக் கோர்வைகளைப் பாடினர். இந்த க்ருதியில் முருகப் பெருமான் 3 அசுரர்களை (தாரகாசுரன், சிங்கமுகன், சூரபத்மன்) அழிப்பவராகவும், 3 வித துன்பங்களை (தானாக தேடிக் கொள்வது, அடுத்தவர் நமக்கு அளிப்பது, இயற்கை சீற்றம் மற்றும் விதியால் ஏற்படுவது) அழிப்பவராகவும் போற்றப்படுகிறார். தனி ஆவர்த்தனத்தில் நிக் ஷித், அனந்த கிருஷ்ணன் இருவரும் தங்கள் பங்களிப்பை திறம்பட அளித்தனர்.
ராகம் தானம் பல்லவிக்கு பூர்வி கல்யாணியும் லலிதாவும் சேர்ந்த பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டது. கண்ட ஜாதி திரிபுட தாளத்தில் மிஸ்ர நடையில் அமைந்த பல்லவி ‘அபூர்வ பலதாயிகாம் கல்யாணிகாம் சதா பஜே ஆனந்ததாயிகாம் லலிதாம்பிகாம்’ சிறந்த முறையில் கையாளப்பட்டது. ராகமாலிகையாக கல்யாணி, ஆனந்தபைரவி, கேதாரம் ராகங்களில் ஸ்வர மழை பொழிந்தது.
ஹமீர் கல்யாணி, காம்போஜி ராகங்களிலும், ராகம் தானம் பல்லவியிலும் வயலினில் ஆனந்தின் பங்கு பாராட்டுக்குரியது. யமன் கல்யாணி ராகத்தில் அமைந்த ஆர்.கே.ராம்குமாரின் ‘சாரதே சரதிந்து சமானனே’ பாடலுடன் கச்சேரியை சகோதரிகள் நிறைவு செய்தனர்.
ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதரின் உறவினரான அர்ச்சனா - ஆர்த்தி சகோதரிகள், பொறியியல் படிப்பை முடித்துவிட்டு இசைத் துறையை தேர்ந்தெடுத்துள்ளனர். விதூஷி ஆர்.வேதவல்லியின் மாணவிகளான இவர்கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கச்சேரி நிகழ்த்தி வருகின்றனர்.