

சென்னை: மியூசிக் அகாடமியின் 99-வது இசைவிழாவில் வித்வான் அனிருத் வெங்கடேஷின் கச்சேரி நடைபெற்றது. அவருக்கு பக்கபலமாக சிதம்பரம் ஜி.பத்ரிநாத் (வயலின்), ஆர்.ராம்குமார் (மிருதங்கம்), ஜி.வெங்கடேஷ் (மோர்சிங்) இருந்தனர்.
‘கருண ஜூடு நின்னு’ எனத் தொடங்கும் ராகத்தில் அமைந்த சியாமா சாஸ்திரியின் சாஹித்யத்துடன் கச்சேரியை தொடங்கினார் அனிருத் வெங்கடேஷ். அடுத்ததாக, சஹானா ராகத்தில் அமைந்த ஆண்டாள் திருப்பாவையை (குத்துவிளக்கெரிய) பாடினார். சாரங்கா ராகத்தில் சிறிய ஆலாபனை செய்துவிட்டு, தியாகராஜ சுவாமியின் கீர்த்தனையை (மாமவ ரகுராமா) பாடினார்.
இந்த கீர்த்தனையில் ராமபிரானோடு விளையாட்டாகப் பேசுகிறார் தியாகராஜர். ‘ஒருமுறையாவது என்னுடைய அடைக்கலம் தேவை என்று யார் இருக்கிறாரோ, அவரை அனைத்துவித துன்பங்களில் இருந்தும் விடுவிப்பேன். இது உறுதி என்று கூறிவிட்டு, என்னை மட்டும் என் பாவங்களில் இருந்து விடுவிக்காதது ஏன் போரில் உன் அஸ்திரங்கள் உடைந்து விட்டதா?’ என்று ராமபிரானிடம் கேட்கிறார் தியாகராஜர்.
அனிருத் வெங்கடேஷ் கச்சேரியில் பிரதான ராகமாக தோடி அமைந்தது. விஸ்தாரமான ஆலாபனைக்குப் பிறகு, முத்துசுவாமி தீட்சிதரின் ‘ சுப்பிரமண்யோ மாம் ரக் ஷது’ எனத் தொடங்கும் க்ருதியை பாடினார். ‘ஷதகோடி பாஸ்கர ஷோபாகர’ என்ற வரியில் நிரவல் செய்து ஸ்வரக் கோர்வைகளைப் பாடினார். தனி ஆவர்த்தனத்தில் ராம்குமாரும், வெங்கடேஷும் கச்சிதமான கோர்வைகளை வாசித்து, கச்சேரியை களைகட்டச் செய்தனர்.
ராகம் தானம் பல்லவிக்கு செல்வதற்கு முன்னதாக தியாகராஜ சுவாமியின் கலாநிதி ராகத்தில் அமைந்த கீர்த்தனையை (சின்ன நாடென) பாடினார் அனிருத். ராகம் தானம் பல்லவிக்கு அவர் தேர்வு செய்த ராகம் பேகடா. ‘தியாகராஜாய நமஸ்தே காத்யாயணி பதே’ என்ற பல்லவியை த்ரிகாலத்திலும் பாடினார். ராகமாலிகை ஸ்வரங்கள், வராளி, சுருட்டி, கானடா, பெஹாக் ராகங்களில் அமைந்தன. தொடக்கம் முதலே பாடகருக்கு அனுசரணையாக வயலின் வாசித்த பத்ரிநாத், பிரதான ராகம் மற்றும் ராகம் தானம் பல்லவியில் மிளிர்ந்தார். முத்துசுவாமி தீட்சிதரின் த்விஜாவந்தி ராக க்ருதியுடன் (சேத பாலக்ருஷ்ணம்) கச்சேரியை நிறைவு செய்தார் அனிருத்.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் அனிருத். விதூஷிகள் பத்மா குட்டி, சுகந்தா காளமேகம், வித்வான்கள் பாளை சி.கே.ராமச்சந்திரன், சீதாராம சர்மா, பி.எஸ்.நாராயணசுவாமியிடம் இசை பயின்றவர். லாஸ் ஏஞ்சல்ஸில் மென்பொருள் பொறியாளராக பணிபுரியும் இவர், இந்தியா உட்பட பலநாடுகளில் கச்சேரிகள் செய்து வருகிறார்.
மியூசிக் அகாடமியில் நடைபெறும் கச்சேரிகளுக்கு, சப்-ஜூனியர், ஜூனியர், சப்-சீனியர், சீனியர் என்று பல பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்படும். சிறந்த ராகம் தானம் பல்லவிக்கும் விருது அளிக்கப்படும். இது இளம் வித்வான்களுக்கு ஊக்கம் தருவதாக அமையும். மியூசிக் அகாடமியின் டிசம்பர் மாத இசைவிழா கச்சேரிகளில், சிறந்த ஜூனியர், சப்.சீனியர் விருதுகளை அனிருத் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.